அகநானூறு/91 முதல் 100 முடிய

அகநானூறு பக்கங்கள்


1. களிற்றியானை நிரை தொகு

பாடல்: 91 (விளங்குபகல்) தொகு

விளங்குபகல் உதவிய பல்கதிர் ஞாயிறு
வளம்கெழு மாமலை பயம்கெடத் தெறுதலின்,
அருவி ஆன்ற பெருவரை மருங்கில்
சூர்ச்சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது,
பாசி தின்ற பைங்கண் யானை 5
ஓய்பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க,
வேய்கண் உடைந்த வெயில்அவிர் நனந்தலை
அரும்பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும்,
பெரும்பேர் அன்பினர் - தோழி!- இருங்கேழ்
இரலை சேக்கும், பரல்உயர் பதுக்கைக் 10
கடுங்கண் மழவர் களவுஉழவு எழுந்த
நெடுங்கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்,
விசிபிணி முழவின் குட்டுவன் காப்பப்,
பசிஎன அறியாப் பணைபயில் இருக்கைத்,
தடமருப்பு எருமை தாமரை முனையின், 15
முடமுதிர் பலவின் கொழுநிழல் வதியும்,
குடநாடு பெறினும், தவிரலர்-
மடமாண் நோக்கி! நின் மாண்நலம் மறந்தே! 18

பாடல்: 92 (நெடுமலை) தொகு

நெடுமலை அடுக்கம் கண்கெட மின்னிப்,
படுமழை பொழிந்த பானாட் கங்குல்,
குஞ்சரம் நடுங்கத் தாக்கிக், கொடுவரிச்
செங்கண் இரும்புலி குழுமும் சாரல்
வாரல் - வாழியர், ஐய! நேர்இறை 5
நெடுமென் பணைத்தோள் இவளும் யானும்
காவல் கண்ணினம் தினையே; நாளை
மந்தியும் அறியா மரம்பயில் இறும்பின்
ஒண்செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண்
தண்பல் அருவித் தாழ்நீர் ஒருசிறை, 10
உருமுச் சிவந்து எறிந்த உரன்அழி பாம்பின்
திருமணி விளக்கிற் பெறுகுவை-
இருள்மென் கூந்தல் ஏமுறு துயிலே! 13

பாடல்: 93 (கேள்கேடூன்ற) தொகு

கேள்கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்,
கேள்அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்,
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல்சிறந்து,
ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர்
அறம்கெழு நல்அவை உறந்தை அன்ன 5
பெறல்அரு நல்கலம் எய்தி நாடும்
செயல்அருஞ் செய்வினை முற்றினம் ஆயின்
அரண்பல கடந்த, முரண்கொள் தானை,
வாடா வேம்பின், வழுதி கூடல்
நாள்அங் காடி நாறும் நறுநுதல் 10
நீள்இருங் கூந்தன் மாஅ யோளொடு
வரைகுயின் றன்ன வான்தோய் நெடுநகர்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
நிவந்த பள்ளி, நெடுஞ்சுடர் விளக்கத்து,
நலம்கேழ் ஆகம் பூண்வடுப் பொறிப்ப, 15
முயங்குகம் சென்மோ - நெஞ்சே! வரிநுதல்
வயம்திகழ்பு இழிதரும் வாய்புகு கடாஅத்து ,
மீளி மொய்ம்பொடு நிலன்எறியாக் குறுகி,
ஆள்கோள் பிழையா, அஞ்சுவரு தடக்கைக்,
கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை 20
திருமா வியனகர்க் கருவூர் முன்துறைத்
தெண்நீர் உயர்கரைக் குவைஇய
தண்ஆன் பொருநை மணலினும் பலவே! 23

பாடல்: 94 (தேம்படு) தொகு

தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
குவைஇலை முசுண்டை வெண்பூக் குழைய,
வான்எனப் பூத்த பானாட் கங்குல்,
மறித்துரூஉத் தொகுத்த பறிப்புற இடையன்
தண்கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ, 5
வண்டுபடத் தொடுத்த நீர்வார் கண்ணியன்,
ஐதுபடு கொள்ளி அங்கை காயக்,
குறுநரி உளம்பும் கூர்இருள் நெடுவிளி
சிறுகட் பன்றிப் பெருநிரை கடிய,
முதைப்புனம் காவலர் நினைத்திருந்து ஊதும் 10
கருங்கோட்டு ஓசை யொடு ஒருங்குவந்து இசைக்கும்
வன்புலக் காட்டுநாட் டதுவே - அன்புகலந்து
ஆர்வம் சிறந்த சாயல்,
இரும்பல் கூந்தல், திருந்திழை ஊரே! 14

பாடல்: 95 (பைப்பய) தொகு

பைப்பயப் பசந்தன்று நுதலும்; சாஅய்,
ஐதுஆ கின்று, என் தளிர்புரை மேனியும்,
பலரும் அறியத் திகழ்தரும் அவலமும்;
உயிர்கொடு கழியின் அல்லதை; நினையின்
எவனோ?- வாழி, தோழி!- பொரிகாற் 5
பொகுட்டுஅரை இருப்பைக் குவிகுலைக் கழன்ற
ஆலிஒப்பின் தூம்புடைத் திரள்வீ,
ஆறுசெல் வம்பலர் நீள்இடை அழுங்க,
ஈனல் எண்கின் இருங்கிளை கவரும்
சுரம்பல கடந்தோர்க்கு இரங்குப என்னார், 10
கௌவை மேவலர் ஆகி, 'இவ் ஊர்
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ
புரைய அல்ல, என் மகட்கு' எனப் பரைஇ,
நம்உணர்ந்து ஆறிய கொள்கை
அன்னை முன்னர், யாம்என், இதற்படலே? 15

பாடல்: 96 (நறவுண்) தொகு

நறவுண் மண்டை நுடக்கலின் இறவுக்கலித்துப்,
பூட்டுஅறு வில்லிற் கூட்டுமுதல் தெறிக்கும்
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
அரவாய் அன்ன அம்முள் நெடுங்கொடி
அருவி ஆம்பல் அகல்அடை துடக்கி, 5


அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை
விசைவாங்கு தோலின், வீஞ்குபு ஞெகிழும்
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர!
'ஒண்தொடி ஆயத் துள்ளும்நீ நயந்து
கொண்டனை' என்ப 'ஓர் குறுமகள்'; அதுவே- 10


செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின்
அம்கலுழ் மாமை, அஃதை தந்தை,
அண்ணல் யானை அடுபோர்ச் சோழர்,
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை,
இருபெரு வேந்தரும் பொருதுகளத்து ஒழிய, 15
ஒளிறுவாள் நல்அமர்க் கடந்த ஞான்றை,
களிறுகவர் கம்பலை போல,
அலர்ஆ கின்றது, பலர்வாய்ப் பட்டே! 18

பாடல்: 97 (கள்ளியம்) தொகு

'கள்ளிஅம் காட்ட புள்ளிஅம் பொறிக்கலை
வறன்உறல் அம்கோடு உதிர, வலம்கடந்து,
புலவுப்புலி துறந்த கலவுக்கழிக் கடுமுடை
இரவுக்குறும்பு அலற நூறி, நிரைபகுத்து,
இருங்கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் 5
கொலைவில் ஆடவர் போலப், பலவுடன்
பெருந்தலை எருவையொடு பருந்துவந்து இறுக்கும்
அருஞ்சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்,
இருங்கழை இறும்பின் ஆய்ந்துகொண்டு அறுத்த
நுணங்குகட் சிறுகோல் வணங்குஇறை மகளிரொடு 10
அகவுநர்ப் புரந்த அன்பின் கழல்தொடி,
நறவுமகிழ் இருக்கை, நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர் அன்னநின்
அலர்முலை ஆகம் புலம்பப் பல நினைந்து,
ஆழேல், என்றி - தோழி! யாழ என் 15
கண்பனி நிறுத்தல் எளிதோ - குரவுமலர்ந்து,
அற்சிரம் நீங்கிய அரும்பத வேனில்
அறல்அவிர் வார்மணல் அகல்யாற்று அடைகரைத்
துறைஅணி மருத தொகல்கொள ஓங்கிக்,
கலிழ்தளிர் அணிந்த இருஞ்சினை மாஅத்து 20
இணர்ததை புதுப்பூ நிரைத்த பொங்கர்ப்
புகைபுரை அம்மஞ்சு ஊர,
நுகர்குயில் அகவும் குரல்கேட் போர்க்கே? 23


பாடல்: 98 (பனிவரை) தொகு

பனிவரை நிவந்த பயம்கெழு கவாஅன்
துனிஇல் கொள்கையொடு அவர்நமக்கு உவந்த
இனிய உள்ளம் இன்னா ஆக,
முனிதக நிறுத்த நல்கல் எவ்வம்
சூர்உறை வெற்பன் மார்புஉறத் தணிதல் 5
அறிந்தனள் அல்லள், அன்னை; வார்கோல்
செறிந்துஇலங்கு எல்வளை நெகிழ்ந்தமை நோக்கிக்,
கையறு நெஞ்சினள் வினவலின், முதுவாய்ப்
பொய்வல் பெண்டிர் பிரப்புஉளர்பு இரீஇ,
'முருகன் ஆர் அணங்கு' என்றலின், அது செத்து 10
ஓவத் தன்ன வினைபுனை நல்இல்
'பாவை அன்ன பலர்ஆய் மாண்கவின்
பண்டையின் சிறக்க, என் மகட்கு' எனப் பரைஇ,
கூடுகொள் இன்இயம் கறங்கக், களன் இழைத்து,
ஆடுஅணி அயர்ந்த அகன்பெரும் பந்தர், 15
வெண்போழ் கடம்பொடு சூடி, இன்சீர்
ஐதுஅமை பாணி இரீஇக், கைபெயராச்,
செல்வன் பெரும்பெயர் ஏத்தி, வேலன்
வெறிஅயர் வியன்களம் பொற்ப வல்லோன்
பொறிஅமை பாவையிற் றூங்கல் வேண்டின், 20
என்ஆம் கொல்லோ?- தோழி!- மயங்கிய
மையற் பெண்டிற்க்கு நொவ்வல் ஆக
ஆடிய பின்னும், வாடிய மேனி
பண்டையிற் சிறவாது ஆயின், இம்மறை
அலர்ஆ காமையோ அரிதே, அஃதான்று, 25
அறிவர் உறுவிய அல்லல்கண் டருளி,
வெறிகமழ் நெடுவேள் நல்குவ னேயெனின்,
'செறிதொடி உற்ற செல்லலும் பிறிது' எனக்
கான்கெழு நாடன் கேட்பின்,
யான்உயிர் வாழ்தல் அதனினும் அரிதே! 30


பாடல்: 99 (வாள்வரி) தொகு

வாள்வரி வயமான் கோள்உகிர் அன்ன
செம்முகை அவிழ்ந்த முள்முதிர் முருக்கின்
சிதரார் செம்மல் தா அய், மதர்எழில்
மாண் இழை மகளிர் பூணுடை முலையின்
முகைபிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை 5
அதிரல் பரந்த அம்தண் பாதிரி
உதிர்வீ அம்சினை தாஅய், எதிர்வீ
மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம்
அணங்குடை நகரின் மணந்த பூவின்
நன்றே, கானம்; நயவரும் அம்ம, 10
கண்டிசின வாழியோ - குறுமகள்! நுந்தை
அடுகளம் பாய்ந்த தொடிசிதை மருப்பின்,
பிடிமிடை களிற்றின் தோன்றும்
குறுநெடுந் துணைய குன்றமும் உடைத்தோ! 14

பாடல்: 100 (அரையுற்) தொகு

அரையுற்று அமைந்த ஆரம் நீவிப்,
புரையப் பூண்ட கோதை மார்பினை,
நல்லகம் வடுக்கொள முயங்கி, நீ வந்து,
எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே!
பெருந்திரை முழக்கமொடு இயக்குஅவிந் திருந்த 5
கொண்டல் இரவின் இருங்கடன் மடுத்த
கொழுமீன் கொள்பவர் இருள்நீங்கு ஒண்சுடர்
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை
ஆடுஇயல் யானை அணிமுகத்து அசைத்த
ஓடை ஒண்சுடர் ஒப்பத் தோன்றும் 10
பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான்,
பரியுடை நற்றோர்ப் பெரியன், விரிஇணர்ப்
புன்னைஅம் கானற் புறந்தை முன்துறை
வம்ப நாரை இனன்ஒலித் தன்ன
அம்பல் வாய்த்த தெய்ய - தண்புலர் 15
வைகுறு விடியற் போகிய எருமை
நெய்தல்அம் புதுமலர் மாந்தும்
கைதைஅம் படப்பைஎம் அழுங்கல் ஊரே! 18
"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/91_முதல்_100_முடிய&oldid=480954" இலிருந்து மீள்விக்கப்பட்டது