புறநானூறு/பாடல் 371-380


371

பழுமரம் உள்ளிய பறவை! தொகு

பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்.
பாடப்பட்டோன்: சோழன் செரப்பாழி இறிந்த இளஞ்சேட் சென்னி.
திணை: வாகை. துறை: மறக்களவழி.

. . . . . . . . . . . . . . . வி,
நாரும் போழும் செய்துண்டு, ஓராங்குப்
பசிதினத் திரங்கிய இரும்பே ரொக்கற்கு
ஆர்பதம் கண்ணென மாதிரம் துழைஇ,
வேர்உழந்து உலறி, மருங்கு செத்து ஒழியவந்து,
அத்தக் குடிஞைத் துடிமருள் தீங்குரல்
உழுஞ்சில்அம் கவட்டிடை இருந்த பருந்தின்
பெடைபயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண்
கழைகாய்ந்து உலறிய வறங்கூர் நீள்இடை,
வரிமரல் திரங்கிய கானம் பிற்படப்,
பழுமரம் உள்ளிய பறவை போல,
ஒண்படை மாரி வீழ்கனி பெய்தெனத்,
துவைத்தெழு குருதி நிலமிசைப் பரப்ப,
விளைந்த செழுங்குரல் அரிந்து, கால் குவித்துப்
படுபிணப் பல்போர்பு அழிய வாங்கி
எருதுகளி றாக, வாள்மடல் ஓச்சி
அதரி திரித்த ஆளுகு கடாவின்,
அகன்கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி,
‘வெந்திறல் வியன்களம் பொலிக!’ என்று ஏத்தி
இருப்புமுகம் செறித்த ஏந்து எழில் மருப்பின்
வரைமருள் முகவைக்கு வந்தனென்; பெரும;
வடிநவில் எ·கம் பாய்ந்தெனக், கிடந்த
தொடியுடைத் தடக்கை ஓச்சி, வெருவார்
இனத்துஅடி விராய வரிக்குடர் அடைச்சி
அழுகுரற் பேய்மகள் அயரக், கழுகொடு
செஞ்செவி எருவை திரிதரும்;
அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே!

372

பொருநனின் வறுமை! தொகு

பாடியவர்: கல்லாடனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை. துறை: மறக்களவழி.

போதவிழ் அலரி நாரின் தொடுத்துத்,
தயங்கு இரும் பித்தை பொலியச் சூடிப்
பறையடு தகைத்த கலப்பையென், முரவுவாய்
ஆடுறு குழிசி பாடின்று தூக்கி,
மன்ற வேம்பின் ஒண்பூ உரைப்பக்,
குறைசெயல் வேண்டா நசைஇய இருக்கையேன்,
அரிசி இன்மையின் ஆரிடை நீந்திக்,
கூர்வாய் இருப்படை நீரின் மிளிர்ப்ப,
வருகணை வாளி . . . . . அன்பின்று தலைஇ,
இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை,
வில்லேர் உழவின் நின் நல்லிசை யுள்ளிக்,
குறைத்தலைப் படுபிணன் எதிரப், போர்பு அழித்து
யானை எருத்தின் வாள்மட லோச்சி
அதரி திரித்த ஆள் உகு கடாவின்,
மதியத் தன்ன என் விசியுறு தடாரி
அகன்கண் அதிர, ஆகுளி தொடாலின்,
பணைமருள் நெடுந்தாள், பல்பிணர்த் தடக்கைப்,
புகர்முக முகவைக்கு வந்திசின் - பெரும!
களிற்றுக்கோட்ட டன்ன வாலெயிறு அழுத்தி,
விழுக்கொடு விரை இய வெள்நிணச் சுவையினள்,
குடர்த்தலை மாலை சூடி, ‘உணத்தின
ஆனாப் பெருவளம் செய்தோன் வானத்து
வயங்குபன் மீனினும் வாழியர், பல’ என,
உருகெழு பேய்மகள் அயரக்,
குருதித்துக ளாடிய களம்கிழ வோயே!

373

ஆரம் முகக்குவம் எனவே! தொகு

பாடியவர்: மாங்குடி கிழார்.
பாடப்பட்டோன்: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
திணை: வாகை. துறை: மறக்கள வேள்வி.

விசிபிணித் தடாரி விம்மென ஒற்றி,
ஏத்தி வந்த தெல்லாம் முழுத்த
இலங்குவாள் அவிரொளி வலம்பட மின்னிக்
கணைத்துளி பொழிந்த கண்கூடு பாசறைப்,
பொருந்தாத் தெவ்வர் அரிந்ததலை அடுப்பின்,
கூவிள விறகின் ஆக்குவரி நுடங்கல்,
ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்,
ஈனா வேண்மாள் இடந்துழந்து அட்ட
மாமறி பிண்டம் வாலுவன் ஏந்த,
‘வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம்
வெவ்வாய்ப் பெய்த பூதநீர் சால்க” எனப்
புலவுக்களம் பொலிய வேட்டோய்! நின்
நிலவுத்திகழ் ஆரம் முகக்குவம் எனவே.

374

நின்னோர் அன்னோர் இலரே! தொகு

பாடியவர்: கோவூர்கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: வாகை. துறை: மறக்களவழி; ஏர்க்கள உருவகமும் ஆம்.,

உருமிசை முழக்கென முரசும் இசைப்பச்,
செருநவில் வேழம் கொண்மூ ஆகத்,
தேர்மா அழிதுளி தலைஇ , நாம் உறக்
கணைக்காற் றொடுத்த கண்ணகன் பாசறை,
இழிதரு குருதியடு ஏந்திய ஒள்வாள்
பிழிவது போலப் பிட்டைஊறு உவப்ப,
மைந்தர் ஆடிய மயங்குபெருந் தானைக்,
கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே!
. . . . . . தண்ட மாப்பொறி
மடக்கண் மயில் இயன் மறலி யாங்கு
நெடுங்சுவர் நல்லில் புலம்பக் கடைகழிந்து,
மென்தோள் மகளிர் மன்றம் பேணார்,
புண்ணுவ. . . . . . . . . . . . .
. . . . .அணியப் புரவி வாழ்கெனச்,
சொல்நிழல் இன்மையின் நன்னிழல் சேர,
நுண்பூண் மார்பின் புன்றலைச் சிறாஅர்
அம்பழி பொழுதில் தமர்முகம் காணா,
. . . . . . . . . ற்றொக்கான
வேந்துபுறங் கொடுத்த வீய்ந்துகு பறந்தலை,
மாட மயங்கெரி மண்டிக், கோடிறுபு,
உரும் எறி மலையின், இருநிலம் சேரச்,
சென்றோன் மன்ற சொ¦ . . . .
. . . . . ண்ணநிகர் கண்டுகண் அலைப்ப,
வஞ்சி முற்றம் வயக்கள னாக,
அஞ்சா மறவர் ஆட்போர்பு அழித்துக்
கொண்டனை பெரும! குடபுலத்து அதரி;
பொலிக அத்தை நின் பணைதனற . . . ளம்!
விளங்குதிணை, வேந்தர் களந்தொறுஞ் சென்ற,
“புகர்முக முகவை பொலிக!” என்றி ஏத்திக்,
கொண்டனர்’ என்ப பெரியோர் : யானும்
அங்கண் மாக்கிணை அதிர ஒற்ற,
. . . . . லெனாயினுங் காதலின் ஏத்தி
நின்னோர் அன்னோர் பிறரிவண் இன்மையின்,
மன்னெயில் முகவைக்கு வந்திசின், பெரும!
பகைவர் புகழ்ந்த அண்மை, நகைவர்க்குத்
தாவின்று உதவும் பண்பின், பேயடு
கணநரி திரிதரும் ஆங்கண், நிணன் அருந்து
செஞ்செவி எருவை குழீஇ,
அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே!

375

அண்டிரன் போல்வையோ ஞாயிறு? தொகு

பாடியவர்: உறையூர் ஏணிச்சேர் முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். துறை: பூவைநிலை.

கானல் மேய்ந்து வியன்புலத் தல்கும்
புல்வாய் இரலை நெற்றி யன்ன,
பொலம் இலங்கு சென்னிய பாறுமயிர் அவியத்
தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்,
மன்றப் பலவின் மால்வரைப் பொருந்தி, என்
தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி,
இருங்கலை ஓர்ப்ப இசைஇக், காண்வரக்,
கருங்கோற் குறிஞ்சி அடுக்கம் பாடப்,
புலிப்பற் றாலிப் புன்றலைச் சிறா அர்
மான்கண் மகளிர், கான்தேர் அகன்று உவா
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை,
விடர்முகை அடுக்கத்துச் சினைமுதிர் சாந்தம்,
புகர்முக வேழத்து முருப்பொடு, மூன்றும்,
இருங்கேழ் வயப்புலி வரி அதள் குவைஇ,
விரிந்து இறை நல்கும் நாடன், எங்கோன்,
கழல்தொடி ஆஅய் அண்டிரன் போல,
வண்மையும் உடையையோ? ஞாயிறு!
கொன்விளங் குதியால் விசும்பி னானே!

376

பாடன்மார் எமரே! தொகு

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண் . துறை: வாழ்த்தியல்.

அலங்குகதிர் சுமத்த கலங்கற் சூழி
நிலைதளர்வு தொலைந்த ஒல்குநிலைப் பல்காற்
பொதியில் ஒருசிறை பள்ளி யாக
முழாவரைப் போந்தை அரவாய் மாமடல்
நாரும் போழும் கிணையோடு சுருக்கி,
ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ,
‘ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப்
புரவுஎதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார்?’ எனப்
புரசம் தூங்கும் அறாஅ யாணர்,
வரையணி படப்பை, நன்னாட்டுப் பொருந!
பொய்யா ஈகைக் கழல்தொடி ஆஅய்!
யாவரும் இன்மையின் கிணைப்பத், தாவது,
பெருமழை கடல்பரந் தாஅங்கு, யானும்
ஒருநின் உள்ளி வந்தனென்; அதனால்
புலவர் புக்கில் ஆகி, நிலவரை
நிலீ இயர் அத்தை, நீயே! ஒன்றே
நின்னின்று வறுவிது ஆகிய உலகத்து,
நிலவன் மாரோ, புரவலர்! துன்னிப்,
பெரிய ஓதினும் சிறிய உணராப்
பீடின்று பெருகிய திருவின்,
பாடில், மன்னரைப் பாடன்மார் எமரே!

377

கிணைக்குரல் செல்லாது! தொகு

பாடியவர்: புறத்திணை நன்னாகனார்.
பாடப்பட்டோன்: ஓய்மான் நல்லியாதன்.
திணை:பாடாண். துறை: இயன்மொழி.

விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்
பசுங்கதிர் மழுகிய சிவந்துவாங்கு அந்தி
சிறுநனி பிறந்த பின்றைச், செறிபிணிச்
சிதாஅர் வள்பின்என் தடாரி தழீஇப்,
பாணர் ஆரும் அளவை, யான்தன்
யாணர் நல்மனைக் கூட்டு முதல் நின்றனென்!
இமைத்தோர் விழித்த மாத்திரை, ஞெரேரெனக்,
குணக்கு எழு திங்கள் கனைஇருள் அகற்றப்,
பண்டுஅறி வாரா உருவோடு, என் அரைத்
தொன்றுபடு துளையடு பருஇழை போகி,
நைந்துகரை பறைந்தஎன் உடையும் நோக்கி,
‘விருந்தினன் அளியன், இவன்’ எனப், பெருந்தகை
நின்ற முரற்கை நீக்கி, நன்றும்
அரவுவெகுண் டன்ன தேறலொடு. சூடுதருபு,
நிரயத் தன்னஎன் வறன்களைந் தன்றே,
இரவி னானே, ஈத்தோன் எந்தை;
அற்றை ஞான்றினோடு இன்றின் ஊங்கும்,
இரப்பச் சிந்தியேன், நிரப்படு புணையின்;
உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்;
நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனெ னாகி,
ஒருநாள், இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை,
ஞாங்கர் நெடுமொழி பயிற்றித்,
தோன்றல் செல்லாது, என் சிறுகிணைக் குரலே.

378

நாடு அவன் நாடே! தொகு

பாடியவர்: உலோச்சனார்.
பாடப்பட்டோன்: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளி.
திணை: பாடாண். துறை: வாழ்த்தியல்.

பனி பழுநிய பல் யாமத்துப்
பாறு தலை மயிர் நனைய,
இனிது துஞ்சும் திருநகர் வரைப்பின்,
இனையல் அகற்ற என் கிணைதொடாக் குறுகி,
‘அவி உணவினோர் புறங் காப்ப,
அற, நெஞ்சத்தோன் வாழ, நாள்’ என்று,
அதற் கொண்டு வரல் ஏத்திக்
கரவு “இல்லாக் கவிவண் கையான்,
வாழ்க!” எனப் பெயர் பெற்றோர்
பிறர்க்கு உவமம் பிறர் இல், என
அது நினைத்து, மதி மழுகி,
அங்கு நின்ற எற் காணூஉச்
‘சேய் நாட்டுச் செல் கிணைஞனை!
நீபுரவலை எமக்கு’ என்ன,
மலைபயந்த மணியும், கடறுபயந்த பொன்னும்,
கடல் பயந்த கதிர் முத்தமும்,
வேறுபட்ட உடையும், சேறுபட்ட தசும்பும்,
கனவிற் கண்டாங்கு, வருந்தாது நிற்ப,
நனவின் நல்கியோன், நகைசால் தோன்றல்;
நாடுஎன மொழிவோர் அவன் நாடென மொழிவோர்
வேந்தென மொழிவோர், ‘அவன் வேந்தென மொழிவோர்
. . . . . பொற்கோட்டு யானையர்
கவர் பரிக் கச்சை நன்மான்
வடி மணி வாங்கு உருள
. . . . நல்தேர்க் குழுவினர்,
கத ழிசை வன்க ணினர்,
வாளின் வாழ்நர், ஆர்வமொடு ஈண்டிக்,
கடல் ஒலி கொண்ட தானை
அடல்வெங் குருசில்! மன்னிய நெடிதே!

379

எஞ்சா மரபின் வஞ்சி! தொகு

பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்.
பாடப்பட்டோன்: சோழன் செரப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி.
திணை: பாடாண் . துறை: இயன்மொழி.

தென் பரதவர் மிடல் சாய,
வட வடுகர் வாள் ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்,
கடுமா கடை இய விடுபரி வடிம்பின்,
நற்றார்க் கள்ளின், சோழன் கோயில்,
புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்,
பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று, என்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி,
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல,
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே; அது கண்டு,
இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்,
விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்,
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்,
அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை,
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தா அங்கு,
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே,
இருங்குளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.

380

இலங்கை கிழவோன்! தொகு

பாடியவர்: புறத்திணை நன்னாகனார்
பாடப்பட்டோன்: ஓய்மான்வில்லியாதன்
திணை:பாடாண் துறை: பரிசில்

யானே பெறுக, அவன் தாள்நிழல் வாழ்க்கை;
அவனே பெறுக, என் நாஇசை நுவறல்;
நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின்,
பின்னை மறத்தோடு அரியக், கல்செத்து,
அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும்
நெல்லமல் புரவின் இலங்கை கிழவோன்
வில்லி யாதன் கிணையேம்; பெரும!
குறுந்தாள் ஏற்றைக் கொளுங்கண் அவ்விளர்!
நறுநெய் உருக்கி, நாட்சோறு ஈயா,
வல்லன், எந்தை, பசிதீர்த்தல்’ எனக்,
கொன்வரல் வாழ்க்கைநின் கிணைவன் கூறக்,
கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது.
விண்தோய் தலைய குன்றம் பிற்பட,
‘ . . . . ரவந்தனென், யானே-
தாயில் தூவாக் குழவிபோல, ஆங்கு அத்
திருவுடைத் திருமனை, ஐதுதோன்று கமழ்புகை
வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும்
குறும்படு குண்டகழ் நீள்மதில் ஊரே.

"https://ta.wikisource.org/w/index.php?title=புறநானூறு/பாடல்_371-380&oldid=1397524" இலிருந்து மீள்விக்கப்பட்டது