புறநானூறு/பாடல் 391-400


391

காண்பறியலரே! தொகு

பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.

அறவை நெஞ்சத்து ஆயர், வளரும்
மறவை நெஞ்சத்து தாய்இ லாளர்,
அரும்பலர் செருந்தி நெடுங்கான் மலர்கமழ்,
விழவணி வியன்களம் அன்ன முற்றத்து,
ஆர்வலர் குறுகின் அல்லது, காவலர்
கடவிலும் குறுகாக் கடியுடை வியன்நகர்,
மலைக்கணத்து அன்ன மாடம் சிலம்ப, வென்
அரிக்குரல் தடாரி இரிய ஒற்றிப்
பாடி நின்ற பன்னாள் அன்றியும்,
சென்ற ஞான்றைச் சென்றுபடர் இரவின்
வந்ததற் கொண்டு,’ நெடுங்கடை நின்ற
புன்தலைப் பொருநன் அளியன் தான்’ எனத்,
தன்உழைக் குறுகல் வேண்டி, என்அரை
முதுநீர்ப் பாசி அன்ன உடைகளைந்து,
திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ,
மகிழ்தரல் மரபின் மட்டே அன்றியும்,
அமிழ்தன மரபின் ஊன்துவை அடிசில்
வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி,
முன்னூர்ப் பொதியில் சேர்ந்த மென்நடை
இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு அகற்ற,
அகடுநனை வேங்கை வீகண் டன்ன
பகடுதரு செந்நெல் போரொடு நல்கிக்,
‘கொண்டி பெறுக!’ என் றோனே; உண்துறை
மலைஅலர் அணியும் தலைநீர் நாடன்,
கண்டார் கொண்டுமனை திருந்தடி வாழ்த்தி,
. . . . . . . . . . . . . . .
வான்அறி யலவென் பாடுபசி போக்கல்;
அண்ணல் யானை வேந்தர்
உண்மையோ, அறியலர், காண்பறி யலரே!

392

வேலி ஆயிரம் விளைக! தொகு

பாடியவர்: கல்லாடனார்.
பாடப்பட்டோன்: பொறையாற்றுக் கிழான்.
திணை: பாடாண். துறை: கடைநிலை.

தண்துளி பலபொழிந்து எழிலி இசைக்கும்
விண்டு அனைய விண்தோய் பிறங்கல்
முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ்வரப்
பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்ற
திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி,
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும்
வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென,
ஈங்குவந்து இறுத்தஎன் இரும்பேர் ஒக்கல்
தீர்கை விடுக்கும் பண்பின் முதுகுடி
நனந்தலை மூதூர் வினவலின்,
‘முன்னும் வந்தோன் மருங்கிலன், இன்னும்
அளியன் ஆகலின், பொருநன் இவன்’ என,
நின்னுணர்ந்து அறியுநர் என்உணர்ந்து கூறக்,
காண்கு வந்திசிற் பெரும, மாண்தக
இருநீர்ப் பெருங்கழி நுழைமீன் அருந்தும்
ததைந்த தூவியம் புதாஅஞ் சேக்கும்
துதைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின்,
நெஞ்சமர் காதல் நின்வெய் யோளடு,
இன்துயில் பெறுகதில் நீயே; வளஞ்சால்
துளிபதன் அறிந்து பொழிய,
வேலி ஆயிரம் விளைக நின் வயலே!

393

அமிழ்தம் அன்ன கரும்பு! தொகு

பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி.
திணை: பாடாண். துறை: கடைநிலை.

மதிஏர் வெண்குடை அதியர் கோமான்
கொடும்பூண் எழினி, நெடுங்கடை நின்று, யான்
பசலை நிலவின் பனிபடு விடியல்,
பொருகளிற்று அடிவழி யன்ன, என்கை
ஒருகண் மாக்கிணை ஒற்றுபு கொடாஅ,
‘உருகெழு மன்னர் ஆர்எயில் கடந்து,
நிணம்படு குருதிப் பெரும்பாட்டு ஈரத்து,
அணங்குடை மரபின் இருங்களந் தோறும்,
வெள்வாய்க் கழுதைப் புல்இனம் பூட்டி,
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்
வைகல் உழவ! வாழிய பெரிது’ எனச்
சென்றுயான் நின்றனெ னாக, அன்றே,
ஊருண் கேணிப் பகட்டுஇலைப் பாசி
வேர்புரை சிதாஅர் நீக்கி, நேர்கரை
நுண்ணூற் கலிங்கம் உடீஇ, உண்ம், எனத்
தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ,
ஊண்முறை ஈத்தல் அன்றியும் , கோண்முறை
விருந்திறை நல்கி யோனே - அந்தரத்து
அரும்பெறல் அமிழ்த மன்ன
கரும்புஇவண் தந்தோன் பெரும்பிறங் கடையே.

394

பழங்கண் வாழ்க்கை! தொகு

பாடியவர்: நல்லிறையனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பாடாண். துறை: கடைநிலை.

பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கைக்
குறுநெடுந் துணையடும் கூமை வீதலிற்,
குடிமுறை பாடி, ஒய்யென வருந்தி,
அடல்நசை மறந்தஎம் குழிசி மலர்க்கும்
கடனறி யாளர் பிறநாட்டு இன்மையின்
வள்ளன் மையின்எம் வரைவோர் யார்?’ என;
உள்ளிய உள்ளமொடு உலைநசை துணையா,
உலகம் எல்லாம் ஒருபாற் பட்டென,
மலர்தார் அண்ணல்நின் நல்லிசை உள்ளி,
ஈர்ங்கை மறந்தஎன் இரும்பேர் ஒக்கல்
கூர்ந்தஎவ் வம்வீடக், கொழுநிணம் கிழிப்பக்,
கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த
மூடைப் பண்டம் மிடைநிறைந் தன்ன,
வெண்நிண மூரி அருள, நாளுற
ஈன்ற அரவின் நாவுருக் கடுக்கும்என்
தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப்,
போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன,
அகன்றுமடி கலிங்கம் உடீஇச், செல்வமும்
கேடின்று நல்குமதி, பெரும! மாசில்
மதிபுரை மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி,
ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடிக்,
‘கோடை யாயினும் கோடி . . . .
காவிரி புரக்கும் நன்னாட்டுப் பொருந!
வாய்வாள் வளவன் வாழ்க! எனப்
பீடுகெழு நோன்தாள் பாடுகம் பலவே.

395

என்றும் செல்லேன்! தொகு

பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: சோழிய ஏனாதி திருக்குட்டுவன்.
திணை: பாடாண். துறை: கடைநிலை.

சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின்,
ஒலிபுனற் கழனி வெண்குடைக் கிழவோன்,
வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன்,
வள்ளிய னாதல் வையகம் புகழினும்!
உள்ளல் ஓம்புமின், உயர்மொழிப் புலவீர்!
யானும், இருள்நிலாக் கழிந்த பகல்செய் வைகறை,
ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றிப்,
பாடுஇமிழ் முரசின் இயல்தேர்த் தந்தை
வாடா வஞ்சி பாடினேன் ஆக,
அகமலி உவகையடு அணுகல் வேண்டிக்,
கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின்
வெஞ்சின வேழம் நல்கினன் ; அஞ்சி
யான்அது பெயர்த்தனென் ஆகத், தான்அது
சிறிதென உணர்ந்தமை நாணிப், பிறிதும்ஓர்
பெருங்களிறு நல்கி யோனே; அதற்கொண்டு,
இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு உறினும்,
‘துன்னரும் பரிசில் தரும்’ என,
என்றும் செல்லேன், அவன் குன்றுகெழு நாட்டே!

396

அவிழ் நெல்லின் அரியல்! தொகு

பாடியவர்: மதுரை நக்கீரர்.
பாடப்பட்டோன்: சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன்.
திணை: பாடாண். துறை: கடைநிலை.

மென் புலத்து வயல் உழவர்
வன் புலத்துப் பகடு விட்டுக்
குறு முயலின் குழைச் சூட்டொடு
நெடு வாளைப் பல் உவியல்
பழஞ் சோற்றுப் புக வருந்திப்,
புதல் தளவின் பூச் சூடி,
அரில் பறையாற் புள்ளோப்பி,
அவிழ் நெல்லின் அரியலா ருந்து;
மனைக் கோழிப் பைம்பயி ரின்னே,
கானக் கோழிக் கவர் குரலொடு,
நீர்க் கோழிக் கூப்பெயர்க் குந்து;
வே யன்ன மென் தோளால்,
மயில் அன்ன மென் சாயலார்,
கிளிகடி யின்னே;
அகல் அள்ளற் புள்இரீஇ யுந்து;
ஆங்கப் , பலநல்ல புலன் அணியும்
சீர்சான்ற விழுச் சிறப்பின்,
சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்
செல்லா நல்லிசை உறந்தைக் குணாது,
நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்
அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும!
முன்நாள் நண்பகல் சுரன்உழந்து வருந்திக்,
கதிர்நனி சென்ற கனையிருள் மாலைத்,
தன்கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின்,
தீங்குரல் . . கின் அரிக்குரல் தடாரியடு,
ஆங்கு நின்ற எற் கண்டு,
சிறிதும் நில்லான், பெரிதுங் கூறான்,
அருங்கலம் வரவே அருளினன் வேண்டி,
ஐயென உரைத்தன்றி நல்கித், தன்மனைப்
பொன்போல் மடந்தையைக் காட்டி,’இவனை
என்போல் போற்று’ என் றோனே; அதற்கொண்டு,
அவன்மறவ லேனே, பிறர்உள்ள லேனே;
அகன் ஞாலம் பெரிது வெம்பினும்,
மிக வானுள் எரி தோன்றினும்,
குள மீனோடும் தாள் புகையினும்,
பெருஞ்செய் நெல்லின் கொக்குஉகிர் நிமிரல்
பசுங்கண் கருனைச் சூட்டொடு மாந்த,
‘விளைவுஒன்றோ வெள்ளம் கொள்க!’ என,
உள்ளதும் இல்லதும் அறியாது,
ஆங்குஅமைந் தன்றால்; வாழ்க, அவன் தாளே!

397

பாடல்சால் வளன்! தொகு

பாடியவர்: மாங்குடி கிழார்.
பாடப்பட்டோன்: வாட்டாற்று எழினியாதன்.
திணை: பாடாண். துறை: கடைநிலை.

கீழ் நீரால் மீன் வழங்குந்து;
மீநீரான், கண்ணன்ன, மலர்பூக் குந்து;
கழி சுற்றிய விளை கழனி,
அரிப் பறையாற் புள் ளோப்புந்து;
நெடுநீர் தொகூஉம் மணல் தண்கான்
மென் பறையாற் புள் இரியுந்து;
நனைக் கள்ளின் மனைக் கோசர்
தீந் தேறல் நறவு மகிழ்ந்து
தீங் குரவைக் கொளைத்தாங் குந்து;
உள்ளி லோர்க்கு வலியா குவன்,
கேளி லோர்க்குக் கேளா குவன்
கழுமிய வென்வேல் வேளே;
வளநீர் வாட்டாற்று எழினி யாதன்
கிணை யேம், பெரும!
கொழுந் தடிய சூடு என்கோ?
வளநனையின் மட்டு என்கோ?
குறு முயலின் நிணம் பெய்தந்த
நறுநெய்ய சோறு என்கோ?
திறந்து மறந்து கூட்டு முதல்
முகந்து கொள்ளும் உணவு என்கோ?
அன்னவை பலபல . . .
. . . . வருந்திய
இரும்பேர் ஒக்கல் அருந்தி எஞ்சிய
அளித்து உவப்ப, ஈத்தோன் எந்தை;
எம்மோர் ஆக்கக் கங்கு உண்டே;
மாரி வானத்து மீன் நாப்பண்,
விரி கதிர வெண் திங்களின்,
விளங்கித் தோன்றுக, அவன் கலங்கா நல்லிசை!
யாமும் பிறரும் வாழ்த்த, நாளும்
நிரைசால் நன்கலன் நல்கி,
உரைசெலச் சுரக்க அவன் பாடல்சால் வளனே!

398

தண் நிழலேமே! தொகு

பாடியவர்: எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார்.
பாடப்பட்டோன்: கோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பாடாண். துறை: பரிசில் விடை; கடைநிலை விடையும் ஆம்.

வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும்; புள்ளும்
உயர்சினைக் குடம்பைக் குரல்தோற் றினவே;
பொய்கையும் போடுகண் விழித்தன; பையச்
சுடரும் சுருங்கின்று, ஒளியே; பாடெழுந்து
இரங்குகுரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப,
இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி,
எ·குஇருள் அகற்றும் ஏமப் பாசறை,
வைகறை அரவம் கேளியர்! பலகோள்
செய்தார் மார்ப! எழுமதி துயில்!’ எனத்,
தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி,
நெடுங்கடைத் தோன்றி யேனே; அது நயந்து,
‘உள்ளி வந்த பரிசிலன் இவன்’ என,
நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு,
மணிக்கலன் நிறைந்த மணநாறு தேறல்,
பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு,
மாரி யன்ன வண்மையின் சொரிந்து,
வேனில் அன்ன என் வெப்பு நீங்க,
அருங்கலம் நல்கி யோனே; என்றும்,
செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை,
அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த
தீயடு விளங்கும் நாடன், வாய்வாள்
வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன்;
எறிதிரைப் பெருங்கடல் இறுதிக்கண் செலினும்,
தெறுகதிர்க் கனலி தென்திசைத் தோன்றினும்,
என்னென்று அஞ்சலம் யாமே; வென்வெல்
அருஞ்சமம் கடக்கும் ஆற்றல், அவன்
திருந்துகழல் நோன்தாள் தண்நிழ லேமே!

399

துரும்புபடு சிதா அர்! தொகு

பாடியவர்: திருத்தாமனார்.
பாடப்பட்டோன்: சேரமான் வஞ்சன்.
திணை: பாடாண். துறை: கடைநிலை.

மதிநிலாக் கரப்ப, வெள்ளி ஏர்தர,
வகைமாண் நல்லில் . . . . .
பொறிமலர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப,
பொய்கைப் பூமுகை மலரப், பாணர்
கைவல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க,
இரவுப் புறம் பெற்ற ஏம வைகறைப்,
பரிசிலர் வரையா விரைசெய் பந்தர்
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன்,
நகைவர் குறுகின் அல்லது, பகைவர்க்குப்
புலியினம் மடிந்த கல்லளை போலத்,
துன்னல் போகிய பெரும்பெயர் மூதூர்,
மதியத்து அன்னஎன் அரிக்குரல் தடாரி,
இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து,
‘உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்!
‘தள்ளா நிலையை யாகியர் எமக்கு’ என,
என்வரவு அறீஇச்,
சிறி திற்குப் பெரிது உவந்து,
விரும்பிய முகத்த னாகி, என் அரைத்
துரும்புபடு சிதாஅர் நீக்கித், தன் அரைப்
புகைவிரிந் தன்ன பொங்குதுகில் உடீஇ,
அழல்கான் றன்ன அரும்பெறல் மண்டை,
நிழல்காண் தேறல் நிறைய வாக்கி,
யான்உண அருளல் அன்றியும், தான்உண்
மண்டைய கண்ட மான்வறைக் கருனை,
கொக்குஉகிர் நிமிரல் ஒக்கல் ஆர,
வரையுறழ் மார்பின், வையகம் விளக்கும்,
விரவுமணி ஒளிர்வரும், அரவுஉறழ் ஆரமொடு,
புரையோன் மேனிப் பூந்துகில் கலிங்கம்.
உரைசெல அருளி யோனே;
பறைஇசை அருவிப் பாயல் கோவே.

400

கடவுட்கும் தொடேன்! தொகு

பாடியவர்: ஐயூற் முடவனார்
பாடப்பட்டோன்: தாமான் தோன்றிக்கோன்
திணை: பாடாண் துறை: பரிசில் விடை

அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடிமாண் உலக்கைப் பருஉக்குற் றரிசி
காடி வெள்ளுலைக் கொளீஇ நீழல்
ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி,
மோட்டிவரு வராஅல் கோட்டுமீன் கொழுங்குறை,
செறுவின் வள்ளை, சிறுகொடிப் பாகல்,
பாதிரி யூழ்முகை அவிழ்விடுத் தன்ன,
மெய்களைந்து, இன்னொடு விரைஇ. . .
மூழ்ப்பப் பெய்த முழுஅவிழ்ப் புழுக்கல்,
அழிகளிற் படுநர் களியட வைகின்,
பழஞ்சோறு அயிலும் முழங்குநீர்ப் படப்பைக்
காவிரிக் கிழவன், மாயா நல்லிசைக்
கிள்ளி வளவன் உள்ளி, அவன்படர்தும்;
செல்லேன் செல்லேன், பிறர்முகம் நோக்கேன்;
நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்துக்,
கிணைமகள் அட்ட பாவற் புளிங்கூழ்
பொழுதுமறுத் துண்ணும் உண்டியேன், அழிவுகொண்டு,
ஒருசிறை இருந்தேன்; என்னே! இனியே,
‘அறவர் அறவன், மறவர் மறவன்,
மள்ளர் மள்ளன்,தொல்லோர் மருகன்,
இசையிற் கொண்டான், நசையமுது உண்க’ என,
மீப்படர்ந்து இறந்து, வன்கோல் மண்ணி,
வள்பரிந்து கிடந்தஎன் தெண்கண் மாக்கிணை
விசிப்புறுத்து அமைந்த புதுக்காழ்ப் போர்வை,
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்துக்,
கடியும் உணவென்ன கடவுட்கும் தொடேன்;
‘கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன்சுவல்
பகடே அத்தை யான் வேண்டிவந் தது’ என,
ஒன்றியான் பெட்டா அளவை, அன்றே
ஆன்று விட்டனன் அத்தை; விசும்பின்
மீன்பூத் தன்ன உருவப் பன்னிரை
ஊர்தியடு நல்கி யோனே; சீர்கொள
இழுமென இழிதரும் அருவி,
வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே.

401

உலகு காக்கும் உயர் கொள்கை! தொகு

பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.

மாசு விசும்பின் வெண் திங்கள்
மூ வைந்தான் முறை முற்றக்,
கடல் நடுவண் கண்டன்ன என்
இயம் இசையா, மரபு ஏத்திக்
கடைத் தோன்றிய கடைக் கங்குலான்
பலர் துஞ்சவும் தான் துஞ்சான்,
உலகு காக்கும் உயர் கொள்கை,
கேட்டோன், எந்தை என் தெண்கிணைக் குரலே;
கேட்டற் கொண்டும், வேட்கை தண்டாது:
தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி,
மிகப் பெருஞ் சிறப்பின் வீறுசால் நன்கலம்
. . . . . . . . . . லவான
கலிங்கம் அளித்திட்டு என்அரை நோக்கி,
நாரரி நறவின் நாள்மகிழ் தூங்குந்து;
போ தறியேன், பதிப் பழகவும்,
தன்பகை கடிதல் அன்றியும், சேர்ந்தோர்
பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ;
மறவர் மலிந்ததன் . . . . .
கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து,
இருங்கழி இழிதரும் ஆர்கலி வங்கம்
தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத்து உய்த்துத்,
துறைதொறும் பிணிக்கும் நல்லூர்,
உறைவின் யாணர் , நாடுகிழ வோனே!

புறநானூறு முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=புறநானூறு/பாடல்_391-400&oldid=1397526" இலிருந்து மீள்விக்கப்பட்டது