திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/015.திரு உலா மடல்


ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



15. உலா மடல் தொகு

இலக்கணம்:-

உலா என்னும் சொல் வீதி வலம் வருதலைக் குறிக்கும். தலைவர் ஒருவர் தமது பரிவாரங்கள் புடை சூழ வீதிவலம் வருங்கால் தலைவி ஒருத்தியைக் கண்டு காமுற்று அது நிறைவேறா வழி பனங்கருக்காற் செய்த குதிரைமீது ஏறித் தலைவியின் உருவம் எழுதிய கொடியினை ஏந்தி வருதல் மடலூர்தல் என்பர்.

சொன்ன மாதரைக் கண்டு கனவிற் சேர்ந்தோன்
துணிவன் மடலென்றது உலாமடல்
- சிதம்பரப் பாட்டியல் 37
தருண நன்மாதையோர் தலைவன் கண்டு
உறுப்புநலன் உவந்து உட்குறிப் புரைத்தும்
கனவினிற் சேர்ந்தும் காமுற இணையான்
துணிவன் மடலெனச் சொல்லுவதுலாமடல்
- பிரபந்தமரபியல்  -16
கனவி லொருத்தியைக் கண்டு கலவி
இன்ப நுகர்ந்தோன் விழித்த பின்னவள்
பொருட்டு மடலூர்வே னென்பது கலிவெண்
பாவான் முடிப்ப துலாமடலாகும்
- முத்துவீரியம் -1086
உலாமடல் என்பது உரைத்திடில் தலைவன்
கனவில் ஓர்பெண்ணைக் கண்டு புணர்ந்தஅம்
மடவரல் பொருட்டு மடலூர்வன் என்பதைக்
கலிவெண் பாவாற் கரைப்பது விதியே 
- பிரபந்ததீபம் -14
மடல் மாகூறும் இடனுமா ருண்டே
- தொல்காப்பியம்

தலைவன் மடலேறுதல் என்பதை உலகேற்கும். ஆயின் தலைவி மடலேறுதல் என்பது இயலாது. ஏற்புடையதும் அன்று. பனங்கருக்காற் செய்த மடலுக்குப் பதிலாக பனை ஓலை என்னும் ஏட்டால் வரையும் மடலே தலைவி செய்யத்தக்கது என மாற்றி வரையலாகிறது. எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களே குரு ஆண். எளியாளுக்கு மட்டுமன்று இவ்வகில மனுக்குலமக்களுக்கும் அவர்களே தலைவர். எளியாள், அவர்களின் (சிவபரம் பொருளின்) பாற்காமுற்ற சிவகாமி. இவ்வாறு உருவகப்படுத்தி இம்மடல் வரையப் பெற்றுள்ளது.

திரு உலா மடல்

காப்பு

நேரிசை வெண்பா

ஆதி முழுமுதல்வர் அம்புவியிற் போந்தினிது
நீதி உலாவருங்கால் நேரிழையாள் - காதலுற்று
சீரார் உலாமடலைச் செப்புதற்கு ஆண்டவர்கள்
பேரார் பதமலரே காப்பு

நூல்

கலிவெண்பா

வேத முதல்வர் விமலாதித் யர்பெருமான்
சீதமலர்ப் பாதம் திருமண்தோய் - நீதமுற
உத்யோ வனச்சோலை ஒண்பொழிலில் பொன்னரங்கில்
சத்யநெறி தான்தழைக்கச் சீருலகோர் - நித்தியத்தைப்
பெற்றுய்யப் பேரார் வரங்கைக்கொண் டிங்குறவும் (5)

நற்றவர்கள் நல்லனந்தர் நாடியுய்யக் - கற்றாரும்
கல்லாரும் எல்லாரும் வல்லாளர் சொல்லருளால்
தொல்பெருஞ்சீர் மெய்ஞ்ஞானச் சந்ததியர் - எல்லையிலாப்
பேரின்ப சித்திப் பெருவாழ்வு தான்பெற்றுச்
சீரின்பம் என்றும் திகழ்ந்தோங்க - நேரியராய் (10)

ஞானச்செங் கோலாட்சி நன்குபரி பாலனம்செய்
வானவரின் மாதவரின் வான்புகழ்தான் - தேனமுதாய்
மானனையாள் மென்செவியில் பாய்ந்திடவும் மிக்கன்பு
தான்பொங்கக் காதல் தளிர்த்துத் துளிர்கொண்டு
ஊனுயிரில் தித்திக்க ஓங்கியதே - கோனவரைக் (15)

கண்டு தெரிசித்துக் கொண்டேன்பே ரின்பமிக
விண்டதெம்மான் மெல்லியலை நன்மணமும் - கொண்டிடவும்
ஆலயம் முழுதும் அலங்கரித்தார் மாவிலையின்
கோலமார் தோரணங்கள் தாமிலங்கச் - சீலமொடு
மல்லிகையும் செண்பகமும் மற்றுவண்ண மாலைகளும் (20)

சொல்லடங்காப் பேரழகுச் சீர்பொழிய - நல்லனந்தர்
கூடி அலங்கரித்தார் வாழை, குருத்தோலை
தேடி நவரத்னத் தொங்கல்கள் - கோடி
இன்பக் களிபொங்க இதுவே சுவர்க்கமென
அன்பர் மொழிய அடியாளைப் - பொன்னணிகள் (25)

பூட்டிப்பொற் பட்டுப் புனைவித்துச் சிங்காரம்
கூட்டி மயிலனையார் கொண்டுவந்து - தேட்டுயரும்
சன்னிதிமுன் நிற்கவைத்து தர்மதுரை என்கொண்கன்
என்னிதயம் பொங்கிமிக எக்களிக்க - மன்னுமிசை
எக்காளம் தாளம் எழில்துந் துமிவீணை (30)

மிக்கசங்கு மத்தளங்கள் தாம்முழங்கச் - சொக்கும்
குழல்கள் நனிஇசைக்க கோதைக்குக் கோமான்
எழிலாரும் மங்களநாண் பூட்ட - அழகரைநான்
மெல்லக் கடைக்கண்ணால் மிக்கினிது நோக்கியிவர்
வெல்லற் கரியரென்னுள் வென்றாரால் - சொல்ல (35)

நாணம் மிகுந்ததம்மா நல்வாழ் வசந்தமுற்றேன்
ஆணழக ரைநான் அடைந்தேனால் - மாண்புயர்ந்தார்
விந்தைமிகு நல்லதிர்ஷ்டம் வாய்த்ததெற்கு இன்பமிகு
சிந்தை களித்திருந்தேன் செவ்வியர்பேர் அன்புக்
கருணைத் திருவிழியால் காருண்யர் நோக்க (40)

இருமை வினைதீர்ந்தேன் என்னுள் - பெருமைமிக்கு
கர்வம் தலையெடுப்ப கற்பூர வாடைகமழ்
சர்வக்ஞர் மென்மலர்வாய்ச் சொல்லமுதால் - நிர்விகற்ப
இன்பம் களிதுளும்பும் என்னவரென் பக்கநிற்க
பொன்னொளிரும் செண்பகமாம் நன்மலரின் - நன்மணத்தால் (45)

கற்பனையின் பம்விரிந்து காற்றில்வா னில்மிதந்தேன்
சொற்கடங்கா இன்ப சுகம்பொழியும் - நற்பதத்தார்
அற்புதரின் நாயகிநான் என்றெண்ணி ஆசைமிக்கு
பொற்கரத்தைப் பேதையான் பற்றியகால் - கற்பகரின்
பேரின்பம் நெஞ்சில் பொலிந்ததம்மா - பூவுலகில் (50)

பேரானந் தவாழ்வு பெற்றேன்காண் - சீராரும்
இன்பமோ இன்பமென எண்ணியகால் கண்விழித்தேன்
அன்பருருக் காணா தலமந்தேன் - இன்னம்வரை
கண்டதெல்லாம் ஓர்கனவு என்றறிந்து இஃதெனக்கு
விண்டுநன வாகாதோ என்றேங்கும் - மண்டு (55)

புகழ்க்குரியார் பொன்னரங்கர் பேதைகளி கூர
அகம்செழிக்க ஊர்வலமாய் இந்தச் - சகம்உய்ய
பாங்காய் வரும்செய்தி பாரோர் உரைகேட்டேன்
தேங்கமழும் நாள்மலர்கள் பூத்து மணம்திமிரும்
ஓங்கும்சா லைப்பொழிலில் பொன்னரங்கில் - காங்கேயர் (60)

தேடற் கரியார் திருமாளி கைதன்னில்
ஆடகப்பொன் பஞ்சணையர் ஐயர் - வாடாத்
தவமாட்சிக் கோமகனார் தண்ணளியர் - தெய்வம்
சிவகொண்டல் செந்தேன் மொழியர் - பவம்கடத்தும்
தோணியப்பர் சர்வகலை வாணியப்பர் சீருயிர்கண் (65)

காணியப்பர் பொன்னொளிரும் மேனியப்பர் - பூணரிய
பொற்சரிகைப் பட்டுப் புதியசிர பூஷணமும்
நற்கழுத்தில் பொற்காரை நன்கிலங்க - வெற்றிமிகு
வெள்ளானை மத்தகம்போற் றோற்றும் திருமார்பில்
ஒள்ளியநன் முத்துநவ ரத்னாரம் - தெள்ளிதின் பொற் (70)

பூணூல் நனிதுலங்கப் பொன்மேனி தாங்குமிடை
காணும்ஊப் பாசுதங்கக் கச்சிலங்கப் - பேணும்
திருக்கரங்கள் பொற்கடகம் உங்க்ரங்கள் மின்ன
அருட்தாளில் பொற்சிலம்பு ஆர்ப்ப - மருவினிய
பொற்பாது கைமிளிர போந்தார்என் சாமி (75)

விற்பனம்க டந்த விமலர்காண் - அற்புதர்
பூம்பஞ்ச ணையினின்று பொள்ளென்று தாமெழுந்தார்
தீம்பகற்றும் தேவர் திருவடிமண் தாம்பதிய
பூமாது பூரிக்க பொன்னனந்தர் பூசிக்க
தேமதுரத் தோத்திரங்கள் தாமிசைக்கக் கொள்ளாக் (80)

குடைவிருது கூடவர கோடிபரி வாரம்
இடைவரிந்து ஆர்க்கஅட லேறு - மடைதிறந்த
வெள்ளம்போல் மிக்கினிது பொங்கிவரக் காண்போர்கள்
உள்ளம்பூ ரிக்க உலாவரநெஞ் - சள்ளும்
காட்சியினை என்னுரைப்பேன் காசினியீர் என்னவர்தம் (85)

மாட்சி விதந்தோத வல்லேனோ - மீட்சியருள்
நற்பதர்ஆ பர்ணம் நனிதுலங்க ஆரெழிலைச்
சொற்பதத்தால் செப்பரிது ஜோதியர்தம் பொற்புயர்ந்த
திங்கள் திருவதனம் தீர்க்கும் பவப்பிணியை
மங்கா அருள்தான் அடைபடுத்த - எங்கோன் (90)

கமலத் திருநயனம் கண்டோர்கள் உய்வர்
விமலர் திருநாசி மென்குமிழ்காண் - இமையா
நாட்டத் திருவோங்கும் நற்றவர்கள் நம்பியவர்
வாட்டம் தவிர்க்கும் வளவரசர் - மாட்சி
கருணைக் கமலத் திருநயனம் காணில் (95)

அருணன் அருட்கிரணம் நாணும் - திருமலர்வாய்
கற்பூர வாடை கமழும் மறைபொழியும்
சொற்கோவை தெள்ளமுதம் தான்பொழியும் - விற்பனரை
அன்போங்கு சீடர்குழாம் ஆர்ந்துபணிந் தேத்தினர்காண்
இன்பம் பெருகியதே எங்கெங்கும் - துன்பமொழிந்(து) (100)

எக்களிக்க ஏழ்பருவ ஆடவரும் மாதர்களும்
சொக்கேசர் தம்மைத் துதிபாட - மிக்கினிது
கையேந்தி நின்றோர் கனவரங்கள் பெற்றார்கள்
மெய்யோங்கு நாதர் மிகஇரங்கி - வையகத்தோர் :
உய்யும் வகையருளி ஓகை மிகஓங்க (105)

ஐயர் திருவுலா தாம்இனிது - மெய்யோங்கப்
போந்தார் எளியார் பெருங்களிப்புற் றேநெகிழ்ந்தேன்
பூந்தார் அணியரசர் பேதையெனை - ஆர்ந்தெடுத்து
நாயகியாய் ஏற்று நலந்திகழும் வாழ்வருளி
நேயமிகச் காத்தருள நேர்ந்துகொண்டேன் - தூய்மைமிகு (110)

சீரனந்தர் பல்லோர் சிவகாமம் தீர்த்தீரே
பேரனந்தம் பெற்ற பெருமானே - ஊருலகோர்
பத்தியுங்கள் பால்வைத்த பேதையெனை மிக்கிகழ்ந்து
பித்தியெனப் பேசிப் பழிக்கின்றார் - வித்தகரே!
யாவரென்ன சொன்னாலும் அஞ்சேன் அலமரேன் (115)

தேவருங்கள் பாதநிழல் சார்ந்துநிற்பேன் - சேவை
பொற்பதத்திற் கேசெய்வேன் பூதலமெங் கும்சென்று
நற்புகழைப் பேசி நனிதிரிவேன் - விற்பனரே!
பிரியா திருக்கப் பெரிதேங்கு மென்னைத்
தரியீரோ தங்கள்திருத் தாட்கு பெரிதோர் (120)

சுமையோநான் நாயகரே துய்யமலர்த் தாளில்
உமையே கதியென்று உற்றேன் - இமையவர்கோ!
பொற்றாளில் பென்னை மடல்வைத்தேன் பேதையெனை
நற்றாளில் ஏற்பீர் நனி. (125)

திரு உலா மடல் இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!