திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/077.நன்மதியரசர் பன்மணிமாலை


ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



77. பன்மணிமாலை தொகு

யாப்பிலக்கண மேற்கோள்கள்

நூற் குறிப்பு:-

இருவேறு யாப்புகளால் கட்டப் பெறுவதால் இரட்டை மணி மாலையெனவும் மூவேறு யாப்புகளால் கட்டப் பெறுவதால் மும்மணி மாலையெனவும் கூறுமாப்போல பல்வேறு யாப்புகளால் கட்டப்பெற்ற இச்சிற்றிலக்கியம் பண்மணி மாலை என அழைக்கப் பெறுவதாயிற்று.

நன்மதியரசர் பன்மணிமாலை

காப்பு

காத்தெனை யான்ம வுலகினில் தந்தை
தாயினில் கருவினில் உலகில்
யாத்தெனைப் புரந்த புரந்தரர் திருத்தாள்
யான்பணிந் தேத்தினன் கவிகள்
யாத்திடும் விதிகள் கூறிட விழைந்தேன்
யாவும்வல் மெய்வழி ஐயர்
காத்தருள் புரிக நாத்திறம் தருக
கழலிணை சிரமிசைக் காப்பே!

நூல்

இருபத்தெட்டு சீர்கட்கும் உதாரணப்பா

நன்மெய் வழிசேர் பவமறு வீடுறு
விண்ணேத்தும் தவமோங்கு எமதிறைவர் பொன்னடிசேர்
தாள்பற்றிடு திருவுற்றிடு கடனிதுஅறி கேளிதுநெறி
எந்தைநற்றாள் இனிதேஉற்றார் இடர்கடந்திட்டார் வான்பதிபெற்றார்
மெய்த்தாய் பொன்னடி மிகஆர்ந் தெண்ணுவர்
பவக்கடல் நீந்துவர் பேருயர் வான்புகும்
நீகேளிதனை நினைவூடிறுத்து
பகர்வனதெளிந்து தேவரைப்பொருந்து
தெய்வத்திருவடி பெறநீமுயன்றிடு
குருமொழிகருதிடு கோனெனஉயர்ந்திடு

காய்ச்சீர் உதாரணப்பா

மாணாக்க இதுகேட்டி மறையுரைக்கும் நன்மொழிகேள்
வீணாக்கும் மடமாக்கள் விடத்தொடர்பை விட்டிடுக
நீள்புவியில் மனுத்தேகம் நினக்களித்தார் ஆண்டவர்தாம்
ஏனோநீ அவர்தந்த உயர்பரிசை எண்ணுகிலை

கனிச்சீர் உதாரணப்பா

தாயேயெனைச் சகமீதினில் பவக்கடலிடைப் போவெனவிட
தீயோரொடு உறவேமிக நரகினில்புகும் வாழ்வதிலுற
மாயாமுனம் மறித்தாட்கொள மனுவுடலொடு நீரருள்தர
தூயோர்நெறி தனிலாயினேன் எதுயிணையிதற் காமெதுமிலை.

தண்பூச்சீர் உதாரணப்பா

மெய்வாழ் வெண்ணார் மருள்தோர் மாக்கள்
பெருநரகுற்று மிக்கிடர் பெற்று
நைவாரென்று நவில்நன் னூல்கள்
நனியறியாதோர் நன்குணர்ந் திலரால்
ஐயோகோவென் றலறித்துன்புற்
றலமரல் காண்மின் ஆர்புவி மக்காள்
தெய்வம் தேர்மின் திருத்தாள் போற்றி
அழிவிலா வாழ்வில் ஆழ்ந்திட வாழ்த்தும்.

தண்ணிழல் சீர் உதாரணப்பா

சீவர்க் காம்நெறி திருவைச் சேர்வழி
புவியுயர் ஓர்துறை பண்புயர் மெய்வழி
தேவர்க் காவது அதுவே என்பதைத்
தரணியில் யாவரும் தேர்ந்தறிந் துய்யுமின்
பாவம் மிக்குறப் படர்தீப் பொய்ந்நெறி
படிந்திழிந் தோர்களைப் பற்றியுய்ந் தோர்வழி
சாவா நல்வரம் தருமோர் வான்புகழ்
திருநெறி அந்நெறி தேர்ந்திடார் வீணரே

நறும் பூச்சீர் உதாரணப்பா

தெய்வம் இலையென் றுரைசெய் புலையர்
தமர் பிழைஉணர்நாள் கூற்றுவன் வருநாள்
உய்யும் வகைசெய் உயர்வே தவுரை
உணர்ந்திடா திகழ்ந்தோர் ஓர்துணை யிலராய்
ஐயோ கதிவே றிலையென் புரிவேன்
இறைவனை இகழ்ந்தேன் அப்பயன் அடைந்தேன்
நைகின்றனனே எனக் கூவிடுவார்
நரகினில் துயரம் நீண்டநாள் அடைவர்

நறுநிழல் சீர் உதாரணப்பா

தெய்வம் துதிப்பவர் திருவை மதிப்பவர்
துயர்வரும் கடைப்பொழு துய்ந்திடத் துணையுளோர்
பொய்யாய் நடிப்பவர் பெருநாள் வரும்பொழு
ததுசெலா திகழ்வுடன் பேயதாய்த் துடிப்பவர்
மெய்யே துணையென மறைகள் உரைத்திடும்
திருமொழி அறிபவர் மாதவ நெறியினர்
வையம் முழுதுமே மடிந்தே புதுப்புவி
வருமொரு பெருந்திரு நாளுளத றிந்திடு.
நேரொன்றாசிரியத்தளை - நேரிசை ஆசிரியப்பா உதாரணப்பா
எல்லாம் வல்ல எந்தை நற்றாள்
நல்லார் போற்றி நன்குய் வாரே
மெய்ப்பால் அன்புத் தெய்வம் கண்டு
செய்வார் தொண்டு பற்றே கொண்டு
உய்வார் நன்று என்றும்
மெய்ப்பே ரின்பம் மீக்கூர் வாரே
நிரையொன்றாசிரியத்தளை - நிலைமண்டில ஆசிரியப்பா உதாரணப்பா
மனுப்பிறப் பெடுப்பது மகிதல மிதுதனில்
நனிசிறந் நுயர்ந்நது தமர்கடன் மறந்திடா
திறைதிரு வடிகளைப் பரவுதல் திருமிக
மறைபுகழ் பெருமகிழ் நிறைநெறி நடப்பவர்
உறைவது உயர்திரு துறக்கமே பவத்துறை
குறைகெட அருள்வது இறைதிருக் கழல்களே!

இயற்சீர் வெண்டளை - நேரிசை வெண்பா உதாரணப்பா

குருவாய் எழுந்து திருவாய் திறந்து
அருள்வாய் அமுது தருவாய் - மருட்பேய்
மடிந்திடத் தாழ்வு பொடிந்திட வாழ்வு
விடிந்திடத் தந்தீர் வரம்.

வெண்சீர் வெண்டளை - இன்னிசை வெண்பா உதாரணப்பா

நற்றவத்தோய் பொற்றிருத்தாள் பற்றிநின்றேன் மற்றெனையே
குற்றமற்ற கற்றவருள் எற்றியவர்க் குற்றவனாய்
வற்றுவதில் நற்றிருவைப் பெற்றிடவும் முற்றுயர்ந்து
பற்றுதனைப் பற்றருள்சொற் றீர்

கலித்தளை - கலிப்பாவினம் மூன்றடித்தரவு உதாரணப்பா

மறைபலவும் வகுத்தளித்து நிறைமொழிசொல் திருவுருவாய்
இறைபுவியில் அவதரித்து இனிதுரைத்தும் உணராதே
குறைபழுத்து மடிகின்றீர் குவலயத்தீர் உணர்வதென்றோ?

ஒன்றிய வஞ்சித்தளை - சிந்தடி வஞ்சிப்பா உதாரணப்பா

எமதிறைதரும் அருளமுதுண இருவினையறும்
எமபடர்பயம் இடர்துயர்கெடும் இனியவாழ்வுறும்
அழிவிலாப்பதி அதுநிலைபெறும் மதிதெளிவுறும்
வழியிதற்கெலாம் வளருமெய்வழி வழிப்படுவதே
அறுவகைப்பிழை அறவொழித்திடு நெறிதனிலிரு
மறுபிறப்புறு குருதிருமணி வயிறதனிலே
பிறப்புறில்
துறக்கமே திறக்குமே தரணியீர்
சிறக்கவே திருநெறி தனிலிணைந் துய்கவே

ஒன்றாத வஞ்சித்தளை - குறளடி வஞ்சிப்பா உதாரணப்பா

கானகந்தனி லேயெழுந்தருள்
வானவர்புகழ் மாதவமுனி
பாதமே பிடி வாழ்வுறுங்குடி
நாதர்பொன்னடி தான்கதிபிடி
மெய்வழிமனு உய்வழியிது
செய்வழியெனத் தேர்ந்து கொள்ளடி
நாடி
புகழும் தகவார் நெறியில்
மகிழ்வார் நித்திய வாழ்வில் வாழ்கவே!

மோனை

கலிவிருத்தம்

மெய்யில் நாட்டம் வளர்ந்து வலுக்கவே
மெய்நல் தெய்வத் திருவடித் தோத்திரம்
மெய்யன் போடதைப் போற்றி வழுத்துவோர்
மெய்யாய் நித்திய வாழ்வில் நிலைப்பரே!

அடிமோனை

எண்சீர்விருத்தம்

முதலுக்கெல்லாம் முதலாகும் ஆதியேநற் றுணையாம்
மூதறிஞர் இம்மொழியை முற்றறிவர் கண்டாய்
இதம்சிறந்த புவியிலுள்ள ஓர்வழிதான் இதுவாம்
எம்மதமும் எந்நெறியும் எல்லாமெம்முள் அடக்கம்
மதவெறிகொண் டுலகியலோர் மடிவதெல்லாம் மடமை
மதியுடையோர் மதமனைத்தும் ஒன்றெனவே மதிப்பர்
புதுப்பழமை புத்துயிர்கொள் புண்ணியநற் புகழார்
பொன்னெறியாம் பொன்னரங்கர் மெய்வழியே மேலாம்

எதுகை

நேரிசை ஆசிரியப்பா

சித்தர் முத்தர் ஞானிகள் தேவர்
இத்தரை மேல்வரு வித்தக ஆன்றோர்
யோகியர் என்றுரை வான்துறை போகியர்
ஆகிய தேகியர் மாகதி யருள்என்
ஐயர்க் கிணையில் மெய்யே மெய்யே
தெய்வ மெய்கழல் தெளிந்தோர் உய்வர்
தெய்வ மெய்வழி செய்வழி உய்வழி
வையத் தில்முன் வந்தருள் விந்தை
காண்டகம் ஆர்க்கத் தீர்க்கத் தரிசனம்
செப்பிய பான்மை திடமுறு மேன்மை
நரர்மனு வாகி மனுவினம்
சுரர்ப்பிறப் புறங்கால் தெளிவுறும் இவையே

முரண் தொடை

நிலைமண்டில ஆசிரியப்பா

மண்ணகம் விண்ணவர் வேந்துபோந் துற்றார்
தண்ணொளி யான்கலி வெவ்விருள் மாய்ந்தார்
அந்நாள் பெரியோர் குறித்தார் இந்நாள்
தென்பால் கீழ்த்திசை மேல்வரும் சாலை
ஆண்டவர் அருள்தர மாண்டவர் மீண்டிட
காண்குவம் காணாக் காட்சிமுன் கண்டிலம்
உயர்மதி வீடுற ஆழ்ந்தகம் விரிந்து
துயர்கெடும் பவயிருள் பொடிபடத் திண்ணிய
உளம்பெறும் ஒர்மை இருநிதி முச்சகத்
துலவிடும் ஆண்மையும் அடக்கமும் அருள்வார்
தீங்கெலாம் மடிந்திடத் திருநிலம் விடிந்திடத்
தேங்கெழில் தெய்வப் பூங்கழல் பணிமினே.

இயைபுத் தொடை

நேரிசை ஆசிரியப்பா

மனுக்குலம் உயர்குலம் அனைத்துயிர்க் குள்ளும்
மனுக்கடன் தேர்ந்திலிர் நும்கடன் கேண்மின்
மதிநலம் சிறந்ததால் இதுபுவி யுயர்குலம்
பதியடி கதிபிடி வருமிடி தீரும்
பவக்குறை கடந்திடப் பழமறை புகல்துறை
தவத்திரு உயர்பொருள் துணையுயர் மெய்க்குரு
குருனெறி முறையறி குருகுறிப் பதுஅறி
பதமலர் பணிந்திடில் பவமறும் தவமுறும்
அதுதரும் உயர்மதி வான்பதி சேர்கதி
மெய்க்குரு தாள்துணை பெரும்புணை
மெய்க்குரு பாதமே மாண்புயர் போதமே

இனக்குறள் வெண்பா

மோனைத் தொடை

முழுமுதலோர் மெய்ம்மேனி தாங்கி இவர்ந்து
முழுமுதல்தந் தாண்டார் முனைந்து

எதுகைத் தொடர்

அருளாட்சி அம்புவிக்கண் போந்து இலங்க
இருளாட்சி இல்லாயிற் றின்று

முரண் தொடை

இன்பம் இறையருளே இஃதன்றி மற்றதெல்லாம்
துன்பம் தொடரும் நெறி

இயைபுத் தொடை

உய்வழிதந் தம்புவியில் ஓங்கஉயிர்க் கீயுமருள்
மெய்வழிதெய் வத்தின் அருள்.

அளபெடைத் தொடை

விடாஅது தொடரன்பால் வெய்யஎமன் வெம்மை
தொடாஅது காக்கும் இறை.

விகற்பக் குறள்

ஆகாய கங்கை அருள்பெருகும் தேகாயம்
ஆண்டவர்பொன் வாகாயம் காண்.

செந்தொடை

துன்பமென்று செப்பல் மறலியமல் ஒன்றே
சுகமென்னல் தெய்வத் தருள்.

அந்தாதித் தொடை

மெய்வழியொன் றேயிந்த மேதினியில் மன்னுயிர்கள்
உய்வழியென் றுண்மை அறி
அறிநெஞ்சே இவ்வுலகில் ஆதிமுதல் போந்து
நெறிதந்த நீர்மையினைக் காண்
காணாக் கடவுளினைக் காட்டி மயக்கொழித்துப்
பூணாரம் தந்தார் பரன்.
பரமிகத்தில் காட்டிப்பே ரின்பநிலை கூட்டி
வரமளித்த தெய்வத்தாள் வாழ்த்து
வாழ்த்தி வணங்கி வரதர் திருவடியில்
ஆழ்த்தி நிலைத்திரு நெஞ்சே
நெஞ்சே நினைவகலேல் நாதர்பொற் றாள்மலரில்
தஞ்சம் புகுதல் திரு.
திருவோங்கி ஓருருவாய்த் தெய்வம் எழுந்து
அருளோங்க ஈயும் அறம்
அறவாழி மெய்யருள அப்பேறு பெற்றோர்
இறவா வரம்பெற்றார் இன்று
இன்றுமன் றாடுகுணக் குன்றின் பதம்பணிந்து
நன்றுய்ம்மின் என்றுரைப்பேன் நாடு
நாடு நலம்பெருகும் வீடு விடிந்திடருள்
தேடு இதற்கெதுகாண் ஈடு

நேரிசைச் சிந்தியல் வெண்பா

நாடு நலம்பெறுவாய் நண்ணில் உயிர்களித்து
வீடுபதம் இப்பிறப்பில் மேவிடுவாய் - தேடறிய
தெய்வத் திருவடியில் சேர்ந்து

இன்னிசைச் சிந்தியல் வெண்பா

பொய்யைமெய் யென்று புகழ்ந்திருந்த பொய்யனெனை
மெய்யாக மெய்ப்பதத்தில் மேவத் திருவருள்செய்
ஐயர் திருத்தாள் சரண்

நேரிசை வெண்பா

அருளமிர்த வாரியது பொங்கி உலகோர்
மருளொழிந்து இன்பம் வழங்கி - பெரும்பதமாம்
மெய்வழியில் உய்யவைத்த ஐயர்பதம் கைப்பிடித்தோம்
உய்வழியிஃ தொன்றே அறி

இன்னிசை வெண்பா

ஒன்றே குலம்தெய்வம் ஒன்றே எனமூலர்
அன்றுரைத்த நீதம் அனைத்தும் நிறைவேற்ற
நன்றே எழுந்தருள்செய் நாதர் திருவடியை
என்றும் மறவா திரு.

பஃறொடை வெண்பா

நீடாழி சூழுலகில் நீதி மனுக்குலந்தான்
வாடாத் தவநெறியில் வாழவென்று - தேடரிய
மெய்ச்செல்வம் தன்னை மிகவருளும் எங்களுயிர்
தெய்வத் திருமலர்த்தாள் தோத்தரித்தேன் - ஐயம்
செந்தா மரைப்பாதம் தேன்பிலிற்ற மாந்தியுயிர்
நந்தா விளக்கெரிய நாங்களுய்ந்தோம் - சிந்தா
மணிகொடுத்து வானாடர் மாதவத்தாற் பெற்ற
அணிகொடுத்து எங்களையும் ஆண்டார் - பணிந்தவர்கள்
மாரணத் துன்பம் தவிர்த்து நிகரற்ற

ஆரணம் ஆகமங்கள் அத்தனைக்கும் - காரணமாய்
எல்லாம்வல் லார்க்குற்ற ஏர்புடைய சந்ததியாய்
பொல்லாப் பிறப்பொழித்துப் புண்ணியராய்க் - கல்லாரும்
கற்றோரும் இன்பக் களிப்படையச் செய்தயவை
எற்றே எளியேன் இசைப்பேனோ - பொற்றாளைப்
பற்றிச் சிரஞ்சூடி பாருலகோர் மெய்வழியார்
பெற்றபிள்ளை என்றுமிகப் பேசிடவும் - சுற்றித்
திரிவேனென் சிந்தையில் தெய்வஅருள் பொங்கப்
பெரிதைப் பெரிதென்று பாடி - அரிதான
சற்சங்கம் சேர்ந்தினிது சாயுச்யம் தந்தருளப்
பொற்றாளைப் பற்றும் பணிந்து.

வெள்ளொத் தாழிசை

இஃது வேற்றுத்தளை விரவாது வெள்ளோசை கொண்டு ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வந்தமையின் வெள்ளொத்தாழிசை
செய்வழி காணாத் தெளியா உலகீர்க்கு
உய்வழி காட்டிக் குலம்நெறி ஒன்றென்று
மெய்வழி தந்தார் பரன்.

சாநெறி யேகிச் சகமெல்லாம் வீழ்நாளில்
தூநெறி காட்டித் துரியபதம் ஈந்தார்காண்
வானாடர் வள்ளல் பிரான்.

தன்னைத் தலைவனைத் தானறி யாமாந்தர்
தன்னைத் தலைவனைத் தானறி வான்நெறியாய்த்
தன்னையே காட்டும் பரன்.

வெண்டாழிசை

வேற்றுத்தளை விரவி வெண்டளை தட்டு வந்த வெண்டாழிசை

வேதம் திருமேனி மெய்வா னமிர்துகுநற்
போதத் திருவுயர்வாய் போற்றும் மனுக்குலமே
நீதம் அறிந்த குலம்.

ஆசிரியத் தளையான் வந்த வெண்டாழிசை

தெய்வ மொன்று என்று எண்ணார்
உய்வ தென்ப தென்று மின்று
மெய்யி தொன்றே அறி

கலித்தளையான் வந்த வெண்டாழிசை

வான்கயிலை வளநாடார் மனுக்குலமுய்ந் திடவேண்டித்
தான்புவியில் எழுந்தருளித் தருநெறிமெய் வழியறிமின்
கோன்பதத்தில் குடிகொண்மின் கனிந்து

வஞ்சித்தளையான் வந்த வெண்டாழிசை

இலங்குதமிழ் அகத்தில் யாவும் வல்லார்
கலங்குமுயிர்த் துயரம் தவிர்த்திட எழுந்து
நலங்கனிந் தருளீயும் நன்று

வெண்டுறை

ஈற்றடி இரண்டும் இருசீர் குறைந்த ஓரொலி வெண்டுறை

மாதேவர் பொற்றாள்கள் வாழ்த்தினோர் தாம்பெற்ற மாண்பே! மாண்பே!
சீதனம் பெற்றின்ப சாகரத்துள் ஆழ்ந்து
தீதறு முத்திதனைப் பெற்றார் காண்மின்

வேற்றொலி வெண்டுறை

ஈற்றடி இரண்டும் இரண்டு சீர் குறைந்து வந்த வேற்றொலி வெண்டுறை

உத்யோவ னத்தாங்கு உத்தமர்தாள் பற்றினர்தம்
உயர்வு யாதாம்?
வித்யாநற் றத்துவங்கள் அத்தன்பாற் பெற்றவர்தம்
விளைவு என்னாம்?
சத்தியவான் சற்சங்கம் சார்ந்தவர்தம் சீர்பெற்ற
தர்மம் என்னாம்?
நித்தியநற் ஜீவனொடு நிலைபெற்றார் அஃதொன்றோ?
முத்திபெற்றார் தேகத்தும் முடிவில்லா வாழ்வன்றோ?

அடிமறி மண்டில வெளிவிருத்தம்

தேவா! தேவா! தோத்தரிக்கின்றோம் - குருநாதா
மூவா முதல்வா! மாதவ வேந்தே - குருநாதா
ஓவா தின்பம் ஈந்தீர் உய்ந்தோம் - குருநாதா
சாவாத் தன்மை தந்தீர் சரணம் - குருநாதா

எண்டிசையும் மேல்கீழும் ஈடில்லா வான்கருணை எந்தாய் எந்தாய்
மண்டினிஞா லத்துற்ற மாணடிகள் பற்றிநின்றோம் எந்தாய் எந்தாய்
அண்டர்தம் நாயகரே! ஆண்டவரே! வேண்டுகின்றோம் எந்தாய் எந்தாய்
தெண்டனிட்டோம் தேவாதி தேவாநின் தாள்சரணம் எந்தாய் எந்தாய்

ஆசிரியப்பா

குறிப்பு :- முன் உதாரணச் செய்யுட்களில் நேரிசை ஆசிரியப்பா நிலைமண்டில ஆசிரியப்பாக்கள் வந்துள்ளன. கண்டு கொள்க.

வெண் செந்துறை

நாற்சீர் இரண்டியால் வந்த செந்துறை வெள்ளை

ஒன்றே தெய்வம் ஒன்றே குலமென
நன்றே நாட்டிய நற்றாள் போற்றி
ஆதி முதலோர் நீதி உருவாய்
மேதினி மிசையெழு மென்றாள் போற்றி
சீவர் உய்யச் செந்நெறி காட்டிய
தேவ தேவர் திருத்தாள் போற்றி
சாவா நெறியைச் சகத்தோர்க் கீந்த
மூவா முதல்வர் மலர்த்தாள் போற்றி

அறுசீர் அடியான் வந்த செந்துறை வெள்ளை

பொன்னின் மன்றில் ஆடண்ணல் பூம்பாதங்கள் பூவுலகோர்
இன்னல் தீர இங்குலவ யாங்கள் உய்ந்தோம் உய்ந்தோமே!

தென்னன் சீரார் பாண்டியர்தம் ஜீவா மிர்த ஊற்றினிலே
என்னை ஆழ்த்தி இன்பமருள் ஈகை மாண்பிற் கென்கடவேன்!

வானின் கங்கை மண்மீது வந்தே பாய மன்னுயிர்கள்
கோனின் தாளைப் பற்றிவளர் காட்சிக் கிணையில் வாழ்த்துவமே!

தேனும் பாலும் முக்கனியும் சேர்ந்த சுவையை விஞ்சுமுயர்
வானார் அமிர்தம் துதிக்கையால் வழங்கும் மாண்பிற்கென்கடவோம்!

ஆசிரியத் தாழிசை

ஆசிரிய நேர்த்தளையான் ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வந்து ஆசிரிய ஒத்தாழிசை

ஆதி ஐயர் ஞாலம் உய்ய
நீதி மெய்யை நிலைக்கச் செய்யப்
போதந் தார்காண் போற்றி! போற்றி!

வேதம் யாவும் மெய்கொண் டிங்கண்
தீதில் காட்சி கேள்வி ஈந்து
சாதல் மீட்டார் போற்றி! போற்றி!

ஓதும் உன்னும் மக்கள் ஓங்கும்
நீதம் ஒன்றே என்றே செய்த
பாதம் போற்றி! போற்றி! போற்றி!

ஆசிரியப்பா ஒத்தாழிசை சிறப்புடை வெண்டளையான் வந்த ஆசிரிய ஒத்தாழிசை

பொன்னில் அரங்கர் பெருங்கருணைச் சோதியர்
தென்னன் பெருந்துறைத் தேவாதி தேவரே
என்னில் இதயம் குடிகொண்டார் தோழி!

அண்ணல் தனிகை அருந்தவமார் செல்வர்பொன்
வண்ணர் அருட்பெரும் வள்ளல் எளியாள் என்
எண்ணம் நிறைந்தீண் டின்பருள் வார் தோழி!

இன்ப வடிவர் இணையில்வான் வள்ளல் என்
அன்பைப் பொருட்டாய் அகமகிழ்ந் தேற்றென்னை
இன்ப மனையாட்டி என்றார்காண் தோழி!

எண்சீர்க் கழிநெடிலடியால் சிறப்புடைக் கலித்தளையான் வந்த ஆசிரியத் தாழிசை

பாடுங்கள் பரந்தாமர் பரிசை எண்ணிப்
பவவினைகள் வீழ்ந்ததெனப் போற்றி! போற்றி!
ஆடுங்கள் அருள்மாரிப் பொழிவை யுண்டு
அன்னாட்டு வித்தெடுத்த தயவைப் போற்றி
சூடுங்கள் பொற்பாதம் சிரத்தில் இந்தச்
சகமெல்லாம் இறைநாமம் புகழ்ந்து போற்றி.

சிறப்புடை ஆசிரியத்தளையான் வந்த ஆசிரியத்தாழிசை

வானக மிருந்தருட் பெருந்தய வமிர்துக
கானக மெழுந்தனை கருணையின் திருவுரு
கோனும திருபத முளரிகள் பணிந்தனம்

ஏந்நிசைத் தூங்கல் சிந்நடி வஞ்ஞிப்பா
புவியுள மாந்தர்கள் பொற்சபை மன்றுள்ளே புகுதீராயின்
தவியுயிர்த் தாபம் கெடும் உயர் வான்பதம் தலைவரீயும்
சிவநெறி யேகும் செல்வர்தம் குழுவுள் சேர்ந்து
தவநெறி மாண்பினீர் தேர்ந்திட உய்ந்திட முந்துமினே!

ஈற்றயல் அடிகுறைந்து இயற்சீர் சிறப்புடை வெண்டளையானும் சிறப்பில் வெண்டளையானும் வந்த ஆசிரிய நேர்த்துறை

தேனமர் சோலைத் திருவமர் எம்சாலை புகுதிராயின்
வானவர் தம்முள் வதிந்திடும் வான்செல்வம் வரங்களீயும்
ஈனமும் மாய்ந்திடும் இன்பநன் னாட்டின்
கோனென ஓங்கிடக் கொற்றவர் அருள்தரும் முந்துமினே

ஈற்றடி குறைந்து இடைமடக்காய் நான்கடியாய் வெண்டளையான் வந்த ஆசிரிய

நேர்த்துறை

தென்னகம் வந்த தவப்பயனே வாழி!
திருவோங்கு நற்றாள் அருளினீர் வாழி!
என்னகம் புக்கு எனைமணந்தீர் வாழி!
எழில்பெருக இன்பஅருள் ஈந்தீரே வாழி!
இன்பஅருள் ஈந்துஎமை ஏன்றுகொண்ட தெய்வமே!
இனிமைமிக மெய்ஞானம் தந்தீரே வாழி!
அன்புஅருள் பொங்குதவ ஆண்டவரே வாழி!
அடியேங்கள் நின்தாள் அடைக்கலமே வாழி!

இடையிடைக் குறைந்து இடை மடக்காய் நான்கடியாய் வந்த ஆசிரிய இணை குறட்டுறை

அரங்கரிக் கலிதவிர்க்க அம்புவிமேற் போந்து
இரங்கி அருள்வழங்கி ஈயும்பொற்றாள் இனிதுய்ந்தேம்
இரங்கி அருள்வழங்க ஈயப் பெற்றோம்
வரங்கள் பெருகமரர் வாழ்வுற் றின்புற் றினிதுய்ந்தேம்

பூந்தளிர் பொன்னடி பூமிசை படிய
காந்தரென் நாயகர் கருணையும் செய்தார்
காந்தரென் நாயகர் கருணையும் ஆழ்ந்து
வாழ்ந்திடு மாதவர் பலரே

முதல் அயலடி ஒருசீர் குறைந்து ஏனை மூன்றும் நாற்சீர் அடியாய் இடைமடக்காய் வந்த ஆசிரிய நேர்த்துறை

திருகொள் சிரசில் முடியும் பிறையும்
பெருநற் சீர்மை ஓங்கவே
பெருநற் சீர்மை ஓங்கப் பரமர்
வருகை தருவர் அருள்வர் பணிமின்

நடு இருசீர் குறைந்து ஏனையடி இரண்டும் அறுசீரான் வந்த ஆசிரிய இணை குறட்டுரை

ஆடகப்பொன் னார்மன்றில் ஆடும் பரம்பொருள்தான்
அருளால் தோன்றி
வீடுபெற எளியேன் மீது கனிந்தினிது
சூடினம் பொற்றாள் சிரமீது சூடப்பெற்
றாடும் களிப்புமிகப் பாடும்பூம் பொற்கமலப்
பதங்கள் போற்றி

நடு ஈரடியும் மிக்கு வந்த ஆசிரியத்துறை

வேதன் வந்து நீதி மெய்யை நாட்டவே
நாதன் என்ற நாமம் ஏறி நங்கள் ஜீவன் உயந்ததே
சாதல் வென்று தீத கன்று நீதம் ஒன்று என்றெழில்
பாதம் எங்கள் சிந்தை யின்பம் பூத்ததே

வஞ்சிப்பா

ஏந்திசைத் தூங்கல் ஓசையான் வந்த குறளடி வஞ்சிப்பா
கூன்பிறையணி குருஇறையாம்
வான்கொடைதவ முனிதிருவாய்
தான்வழங்கிடு அருள்அமிழ்தாய்
வான்கனிதரும் மரணமும்போம்

பணிமின்

மெய்வழி இறையடி போற்றி
வணங்குமின் சிரமேல் சூடுமின் மனனே
அருள்வான்புனல் அனைத்துயிர்களும் அகமகிழ்ந்திட
இருள்தான்கெட இனிதுயர்ந்திட இறப்பொழிந்திட
திரு வோங்கிடும் உருவடைந்தது தரணியுய்ந்தது
மருள் மாய்ந்தது மறலி செயிடர் மருள்ஒழிந்தது
வரந்தருந்திரு நிரந்தரம் தரும் வளமுயர்ந்தது
சிரந்தனிலணி திகழ்ந்திலங்கிடச் சிறப்புயர்ந்தது

உயர்நெறி

ஒருதனி முதல் அருள் வழங்கிடும்
அருள்தர வான்பதம் விளைந்து
குருதிசை தொழஉயர் கதிசிறந் திடுமே!

வஞ்சி நிலைத்துறை

கற்றுளோம் எனுமாந்தர்
கற்றிலாப் பெருநிதியே!
பெற்றுளோம் எனும்பேரும்
பெற்றிலாப் பெரும் பொருளே!

கண்டுளோம் எனுமெளியர்
காண்கிலாக் கலைநிதியே!
விண்டிடும் எனுமவராய்
விண்டிடா வியன் கலையே!

வஞ்சிநிலைத் தாழிசை (குறளடி)

ஒரு பொருண்மேல் மூன்றாய் அடிமறி ஆகாதே வந்த குறளடி வஞ்சிநிலைத்தாழிசை

வருமறலி செயுமிடரை
அருள்திருநோக் ககல்விக்கும்
குருவடிவம் பெருங்கருணை
திருவுயரப் பதம்பிடிமின்

கொடுமறலி இடர்தவிர
திடமுயர்மெய் வழிஇறைவர்
தடகமலம் பதமலர்கள்
படிமிசைவான் பரிசறிமின்

மறலிமயல் மடிந்தோட
அறஞ்செயுமோர் திருவுருவம்
அறவாழி குருநாதர்
மறைபுகழும் பதம்கதிகாண்

வஞ்சிநிலை விருத்தம்

சிந்தடி நான்காய் அடிமறி ஆகாதே வந்தது

தேனார் சாலைத் தேம்பொழில்
வானோர் கூடும் சீர்பதி
கோனார் தெய்வத் தாள் சரண்
ஆனோர் உய்வர் வான் கதி

வஞ்சி மண்டில விருத்தம்

அடிமறியாய் வந்தது

உய்யப் பற்றுமின் மெய்வழி
தெய்வ நற்பதி மெய்வழி
வையம் உய்வழி மெய்வழி
மெய்யர் சார்நெறி மெய்வழி

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் மாதிரிகள்

தெய்வநற் றாளைப் போற்று
திருவெலாம் எய்த லாகும்
உய்வதற் கிதுவே மார்க்கம்
உலகினில் பிரிதொன் றில்லை
வையகம் உய்ய வென்றே
வந்தெழுந் தருளிச் செய்யும்
மெய்வழிச் சாலைத் தெய்வ
மேதகு தாள்கள் காப்பே!

வேறு

பண்டு பெரியோர் பண்பாய்ப்
பகர்ந்து மறைகள் யாவும்
விண்டு உரைக்கும் முடிபு
விமலர் தாளைப் பற்றல்
கண்டு இதனைக் கைக்கொள்
கடைநாள் துயரம் ஒழியும்
உண்டு சுவர்க்க வாழ்வு
உறுதி இறைதாள் பற்றே!

வேறு

இறைதிருத் தாளைப் பற்ற
இயம்புதி வழியொன் றென்றால்
மறையெலாம் போற்றும் அந்த
மாதவ இறையே மக்கள்
குறைகடந் துய்ய வேண்டிக்
குருவென வருவார் மண்ணில்
துறையிது தெளிமின் உய்யத்
துணைகுரு பாத மாமே!

வேறு

குருபாத மேவு கோதிலார்
குறையாவும் தீர்ந்து வாழுவார்
கருவாசல் மீண்டு மேகிடார்
கருங்கூற்றை வென்று வானவர்
வரவேற்க வான மேகுவார்
வரம்யாவும் பெற்று மாணுவார்
பெருஞால மீதில் வான்குரு
பெருமைக்கு யாதும் ஈடிலை

வேறு

ஈடில் புகழ்த்திரு சற்குரு இன்னவர்
என்றறி வெங்கனுறும்
சீடன்த னக்கெழும் ஐயமெ லாமொரு
சொல்லில் விளக்குபவர்
தேடிய லைந்திட லின்றி திருக்கதி
சேர்ந்துநற் பேரின்பம்
கூடுஇ ருக்கக் கோடுத்தருள் மாமுனி
கோதறு சற்குருவாம்

வேறு

குருவென் றொருபேர் தாங்கிக்
குவல யத்தில் பலபேரும்
வருவர் அவரை நம்பி
வழுக்கில் வீழ்வர் பலமாந்தர்
குருவோ ஒருவர் உலகில்
கதிரோன் போல வருவார்காண்!
இருள்சேர் வினைகள் கெடவே
இணையில் இன்பம் தருவார்காண்!

வேறு

தராத லத்தினில் மெய்க்குரு
நற்றவர் ஒருவரெம் பெருமானே!
ஒரேகு லத்தெமை ஒன்றென
வைத்தனர் குருபரர் எனதையர்
வரோத யர்புவி வாழ்ந்திட
வந்தருள் தருபவர் திருத்தாளைப்
பராவி டப்பவ வன்பிணி
வான்கதிர் படுபனி எனமாயும்

வேறு

நிலையா வாழ்வை நிலையென்று
நினைத்தே அலைந்து நாடோறும்
குலையே நிரப்பி உறங்கிமயல்
கொண்டே இனத்தைப் பெருக்கியுழல்
புலையீர் கூற்றம் வருங்காலை
புரிவ தென்னென் றறியீர்காண்
நிலையாம் வாழ்வை அருள்தெய்வம்
நிலவும் பதியை நாடுமினே!

வேறு

நாடுமினென் றுரைபுகன்றும் நாடாது நலிவிலுறும்
நானி லத்தீர்!
கூடிதுவிட் டுயிர்போம்கால் தேடிவைத்த
குவைவருமோ கூடக் கூற்றம்
சாடுகையில் துளைகளெல்லாம் சல்லடைபோல்
ஒழுக்குறவும் துன்பம் இங்கு
ஆடுகின்ற ஆட்டத்தின் பலனங்கு தெரியுமன்று
தெரிந்தென் செய்வீர்?

வேறு

உலகில் உலவு நாளினில்
உளபல் நுகர்வில் மேவுவார்
நலமென் றுரைசெய் மாணடி
நினைவில் சிறிதும் போற்றிடார்
அலறி நரகில் வீழவே
அழியும் பொருளும் தேடுவார்
தலைவன் அடியைப் பேணிடார்
துயர்கொள் நரகில் வீழுவார்

வேறு

திருவடி தொழுதல் மனுக்கடன்
தெளிவிது பெறுவோர் சுரர்க்குலம்
குருவடி பணிதல் அதற்குள
நெறிமுறை அறிமின் இருட்கெட
பெருவர மருளும் தவத்திரு
பெரியவர் திருத்தாள் பிடித்திடு
வருமிடி தவிரும் மயக்கறும்
மதிமிகும் நிலைவாழ் வுனக்குறும்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் மாதிரிகள்

சித்தர் முத்தர் ஞானி தேவர்
தூயர் யோகர் யாவரும்
அத்தன் உங்கள் வரவு நோக்கி
ஆர்ந்து தீர்க்க நல்லுரை
தந்த மக்குத் தோற்ற மாய
வாறு ரைத்து நோற்றவை
இத்த லத்தது வந்தி வண்வி
டிந்த காட்சி மாட்சியே!

வேறு

பிறந்த நின்கடமை பேசு நான்மறைகள்
பேணி டாதமட நெஞ்சமே
இறந்து துன்புறுதல் ஈங்கு கண்டுமனம்
ஏங்கிலை மதியில் பஞ்சமே
சிறந்த வானரசு செந்த மிழ்ப்புவியில்
திகழும் மாண்பதனை எண்ணுக
அறந்தி கழ்நெறியில் அன்பொ டேகிடுக
அவர்ப தம்பெறவும் எண்ணுக!

வேறு

உய்யும் நெறிதனை உரைத்தா லும்அதை
உணரா நெஞ்சினர் கடைநாளில்
நையும் அலறிடும் நரகே புக்கவண்
நடுங்கித் துன்புறும் இதையோர்ந்து
மெய்யாம் வழிதனில் மதியோ டேகுவர்
மகிழ்வோ டின்பர கதிசேர்வர்
செய்யும் பணிஅறி திருநற் றாள்பணி
தவமெய்க்குருவே இறையாகும்.

வேறு

அருளமு தளித்துஅக இருள் கெடஅ றுத்துதிரு
அரன்கழல்ப ணிந்து நிதமும்
பெருநலவ ணக்கமது இரவுபக லன்புமிக
புரிபவர்து றக்க அமரர்
குருமணியின் நற்கமல பதமதுது ணைப்பிடிமின்
குலமுழுது உய்ய வழிகாண்
கருவழிகெ டுத்து உயர் திருவழிபு குத்திறைவர்
குருவெனத்தெ ளிந்தோர் அறிவார்

வேறு

வானகு லத்திரு நற்றவர் மண்ணுல
கத்தினில் வந்துளர் இந்நாள்
ஏனித னைத்தெரி கிற்றிலர் இந்நில
மக்களி னம்மெனக் கொள்வார்
ஈனமொழித்தெமை மெய்க்குல மும்பெற
எத்திய எந்தையிப் புவியில்
ஞானநல் வித்தகர் பொய்க்கலி மாற்றுவர்
நித்தியம் வேண்டுவர் வம்மின்

வேறு

மலையெ னக்குவை சுவடி கற்றிடல்
கலையென் றொப்புவர் சாகாக்
கலையொன் றிப்புவிக் கணுள வித்தகம்
கழறில் ஒப்பிடார் சாவார்
நிலையில் பொய்ப்பொருட் கலைவர் நித்தியத்
திருநல் முத்தியை மேவார்
தலைவர் சற்குரு கழல்கள் பற்றிடார்
நிரயம் புக்கவன் வீழ்வார்

வேறு

புவியுயிர் அனைத்தும் மனுவினுக் கெனவே
படைத்தனர் இறையெனும் மறையே
இவைபெறும் மனுவும் அனுபவித்தனைத்தும்
இறையடி பரவுதல் கடனே
தவனெறி மேவி னித்தியம் பெறுவோர்
திருநிறை பேரின்ப முறுவார்
அவனியில் இதனை நவில்வது வேதம்
அறிபவர் வான்கதி உறுவார்

வேறு

அறமெ லாம்திரள் உருவ மேஎங்கள்
ஆதியே! உயர் நீதியே!
திறமெ லாம்வடி வான தெய்வமே
திருவடி பணிந் தேத்தினோம்
உறவு கைவிட் டொதுங்கு நாளினில்
ஒருதுணை தங்கள் திருவருள்
மறப்பிலாதுமை வழுத்து மாதிறம்
வழங்க வேண்டுதும் ஐயனே!

வேறு

அமுதுகு வரையே! அழகொளிர் வடிவே!
அணிதிகழ் சாலையாண் டவரே!
எமதுயிர்க் குயிரே! இனிமையின் குவையே!
இன்பமெ லாம்கனி பொதியே!
அமரர்கட் கரசே! அனைத்துளும் நிறைந்து
அனைத்தையுள் அடக்கிய பெரிதே!
எமர்க்குயர் பரிசே! இடர்தவிர் துறையே!
என்றும்நின் தாள்மலர் கதியே!

மன்றாடு வேதமணி வந்நாரென் நாதரென
மங்காத வாழ்வுதர இதுநாளில்
பொன்றாத மாவரங்கள் தந்தாளு மாதயவு
பூமாது தான்மகிழ நடமாடும்
குன்றாது இன்பமினி சென்றேமன் வாதையகல்
கோதான மண்ணல்தரும் கனிவாக
நன்றாடு நீமகிழ்ந்து இன்றோடு தீர்ந்ததிடர்
நந்தாவி ளக்கொளியில் நனிவாழ்க!

வேறு

சிற்றின்ப மேகுறியென் றலைகின்ற தரணியீர்
தெய்வநற் றாள் பணிவதே
கற்றபலன் என்றுபல புவிமறைமு ழக்கிடுதல்
கனவினும் கருதிலிரே
மற்றுமது நிறைவினி லிடித்துரைகள் செய்திட
வந்தபெரி யோர்க்கிடுக்கண்
முற்றுபுரி கின்றதேன் முடிவுநர கென்றறிமின்
மதிபெற்று உய்ய எழுமின்

வேறு

குருகொண்ட லெங்கள் இறைதந்த செல்வக்
குவைகொண்டு யாங்கள் நிதமும்
அருள்கொண் டுயர்ந்த அமுது ண்டு என்றும்
அழியாத வாழ்வு பெறுதும்
திருகொண் டமர்ந்த திருநாடு செல்லும்
திறன்யாவும் பெற்று மகிழ்ந்தும்
வருகின்ற மாந்தர் அவைபெற்று வாழ்வர்
வரம்யாவும் பெற்று உய்வர்

வேறு

நீபல நூலினை யோதிடி னேதுறு
மாமதி மேவிடு மோவுரை
மாபல னேதுமி லாநிலை யோகலை
மாமறை கூறுப கேளிது
பூபதி யாயினு மேஎம னேவர
பேதுறு நீதமு நீயறி
தேபதி பாதம தேகுடி மாகுரு
தேடிடு சாவினை மேவிடு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் மாதிரிகள்

உலகனைத்தும் நன்குபடைத் திறைவர் தானும்
உயர்மனுவை அழியாமைக் கென்றே ஈன்றார்
நலமனைத்தும் நல்கியதோ டான்றோர் மூலம்
நன்மறைகள் நவிலுவித்தார் யுகங்கள் தோறும்
வலதனைத்தும் சன்னதங்கள் மாண்புங் கொண்டு
மனுப்போலே உடம்பெடுத்துத் தோன்றி மாந்தர்
குலமனைத்தும் உய்யஅறை கூவும் மெய்யைக்
குவலயத்தீர் இனியேனும் கேட்டுய் வீரே!

வீரமிகும் வெற்றிமலி தமிழகத்தில் இன்று
மெய்வழியின் ஆண்டவராய் எழுந்தருளி நின்று
தீரமொடு வையகமே உய்ந்திடுக என்று
திருவருளைத் தருமொருநற் கற்பகங்காண் ஒன்று
கோரமொடு கொடுங்கலியர் செய்தஇடர் வென்று
கோதறுநல் வாழ்வருள நின்றார்குணக் குன்று
பாரனைத்தும் மறைபுகழும் மெய்வழிக்குச் சென்று
பரமரடி பணிந்திடுவீர் பவம்கடப்பீர் நன்று

வேறு

நன்று திருவடியைக் கண்டு வழிபடுமின்
நஞ்ச மெனுமறலி கெஞ்சு மிதுஅறிமின்
என்றும்நி லைத்திடுவாழ் வொன்றுஉ ளதறிமின்
எங்கள்இ றைவரருள் ஈயும் அதுபெறுமின்
பொன்று ருசிமதிப்புக் காமவெறி விடுமின்
பொங்கு திருவருளைப் பெற்றே உய்ய அறிமின்
ஒன்றேஉய் தற்குவழி ஓர்ந்து இதையறிமின்
ஓங்கி உயர்மெய்வழி தெய்வம் அறம்தருமன்

வேறு

தருமர் தருந்நிரு பெறுமனு உய்ந்திடும்
தனையு முணர்ந்திடும் தலைவரைக் கண்டிடும்
இருமை ஒழிந்திடும் இணையில் நலம்பெறும்
எமபயம் பொன்றிடும் அமரர் நிலையுறும்
திருநல வீடுறும் திகழும்பே ரின்புறும்
தரணியில் வந்தக டமையு முடிந்திடும்
குருவடி தந்திடும் பெருவர மிஃதினைக்
கருது பவங்கெட உறுதி சுவர்க்கமே

வேறு

குருவென் றுரைசெய் கிறநின் இறைவர்
கனிவோ டியற்றும் ஒருதொண் டுரைமின்
திருகொண் டவரேல் சிறுஊர் முதலாய்
வருகின் றிலரேல் இதுநும் வினவல்
உருகொண் டுலகம் பிறவா முதற்கொண்
டுரைக்க வியலா உயிர்பல் படைத்தும்
தருதொட் டெழுபல் வகையும் மனுவின்
துணைக்கென் றியற்றி அறிவும் அளித்தார்.

வேறு

அறிவோடு தனியுரிமை தருதாதை உலகிலொரு
அருள்ஞான குருவெனவந் தறியாமை மயர்வறவும்
நெறியோதி நிலமிசைநன் நிலைவாழ்வும் பெறுகவென
நகர்ஊர்கள் தெருமுனையில் நெடுநாட்கள் பலஉரைத்தும்
சிறிதேனும் உணர்விலர்கள் திருமேவ வரவுமிலை
திகழ்நாதர்க் கிடர்கள்செய கொலைபாத கருமுயல
அறவாழி அவைகடந்து மதிமேவி அரசுசெய
அறியாமல் சிலஉளறல் கடந்தேவந் தடைதியறம்

வேறு

மதிநலம ளித்தயிறை குறியெனவெ னக்கருத
மறதிகொளு மக்கள்எனின் மொழியது செவிக்கொளுக
நிதிபலநி லத்திலுற நினையவைவ ளர்த்தருள
நிலைசுகமி கத்தருகும் நலமிகுசு வர்க்கமுள
கதியிறைதி ருப்பதங்கள் கடமையவை பெற்றிடுதல்
கழறறுந லத்தகைபு வியிலுளப லக்குவைகள்
அதிலுனையு யர்த்திடவும் அறமறைகள் சற்குருவும்
அறிவறிய நிற்குமதி அறிக இது இப்புவியீர்

வேறு

நரரான பேர்மனுவின் இனமாகி தேவரென
நலவாழ்வு தான்பெறவும் அருள்ஞான தாதைபதம்
பரவாது வாழுவது படிமீது வீணறிக
பணமோக மேவருசி படர்காம வீண்மதிப்பு
நரகேகி யேநலிய வழியாகு மீதறிக
நிலையான வாழ்வுபெற நினையாத தேன்மனுவே
சுரர்வாழ்வு வாழஒரு விழைவேவந் தேஇவணோர்
சுகமேவ வாருமென அறைகூவும் வானுலகம்

வேறு

தமிழ்நாடு பூமிதனில் உயர்ஞான மேவுமகம்
தவமேரு நாதரருள் தருதேவர் ஆகுமிதம்
அமிழ்தான வான்மறைகள் அவையாவும் கூடிமகிழ்
அறமோது ஜீவநெறி புவிமீது ஓர்மெய்வழி
நமவாத னைகளற திருவீடு ஏகநிலை
நிதிதாரு வானரசர் நிலமீது ஆள்தருணம்
எமதூதர் மேல்வருமுன் இறைபாத மேபெறுமின்
இருலோக மும்புகழ நிலையான வாழ்வுறுமின்

வேறு

வழங்குதிரு வானமர வள்ளலிது நாளில்
மாதவர்ப ராவிடுயர் பொன்னரங்க மேவி
முழங்கியறம் மாநிதிகள் மக்களிடை யீந்து
முதல்தரும தேவயுக வித்துக ளெடுத்து
பழங்கலையி தேதெனவி னாவுமுயர் ஞான
பேரமுத வேதநெறி யாவுமழை போல
புழங்கியறி யாதனஅ றிந்தடைய வைத்த
பொன்னடிகள் போற்றுதுமெம் நெஞ்சமதை வாழ்த்தும்

வேறு

விண்போற்றும் எந்தைதிருத் தாள்கள் போற்றி
வெண்மைமனத் துறைகமலத் தாள்கள் போற்றி
மண்விண்ணும் மற்றெங்கும் நிறைதாள் போற்றி
மகத்தான திருவருள்செய் நற்றாள் போற்றி
பண்பான இன்பமருள் பொற்றாள் போற்றி
பரவிடுவோர் துயரறச்செய் பரன்தாள் போற்றி
எண்ணியங்கு பணிந்துயர்ந்தோர்க் கின்நாள் போற்றி
என்னிதயம் நிலைபெறுந்தாள்போற்றி போற்றி

வேறு

புண்ணியம்செய் கிறோமென்று பூதலத்தோர் உரைப்பீர்!
புண்ணியமென் றாலெனவென் றுய்த்துணர்ந்து தேரீர்
புண்ணியமோர் திருவுருவாய்ப் புவியிடையே வந்து
புண்ணியம்செய் கின்றதனைப் புரிந்துபயன் அடைவீர்
கண்ணியம்கண் ணியமென்று கதறுகின்றீர் கிடந்து
கண்ணியத்தின் கருத்ததனைக் கனவதிலும் அறியீர்
மண்ணகத்தே குருவுருவாய் வந்துஇவை வழங்கும்
மாதேவர் திருவருளை மதிக்கமறந் துழன்றீர்

வேறு

தமிழ்வாழ்க எனமுழங்கித் தரணிமிசை பலபேரும்
தமிழ்த்தொண்டென் றுரைசெய்து உளறல் உண்டு
அமிழ்தான தமிழ்மாது அழகொளிர்மெய் உருவெடுத்து
அகிலமெலாம் உய்யவென்று வந்த பான்மை
இமிழ்கடல்சூழ் ஞாலத்தோர் என்றறியப் போகின்றீர்
அறிந்நமக்கள் அம்மைதய வதனால் உய்ந்து
அமிழ்தருந்தி எமபடரைக் கடந்துமகிழ் குன்றேறி
அமரரென வதிந்திடுதல் காண்மின் காண்மின்

வேறு

தென்பா லுதித்தின்று சிவஞான அருள்மாரி
பெய்வித்து உய்வித்த பெருமானை அறிவோர்
தென்பால் தவச்செல்வம் அன்பால் மிகக் கொண்டு
தீங்கற்ற பாங்குற்றுத் திருவோங்க வாழ்வார்
இன்பால் உயிர்க்குள்ளே இனிக்கின்ற எம்தெய்வம்
இணைகூற இயலாத தவமேரு அன்பர்
என்பே கரைந்துருக இனிதாகத் துதிபாடி
எந்நாளு மழியாத பேரின்பம் பெறுவோம்

வேறு

பொன்னரங் கையர் பொற்பதம் எண்ணில்
வன்பவ நோயும் வெவ்வினை மாயும்
இன்னல்கள் ஏதும் என்றுமில் லாகும்
ஏமனின் வெம்மை இடர்தரல் இல்லை
பன்னலம் பூக்கும் வான்மறை யாவும்
புத்தெழில் பொங்கப் பொலிந்து விளங்கும்
தென்னகத் தின்று சாலையில் வந்த
தேவர்தம் தேவே திருவடி போற்றி!

ஒன்பதின் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

முழங்கு தெண்டிரை இலங்கு வாரிதி
வளைந்த நீள்புவி இருளி ரிந்திட விளங்கெழில்
செழுங்க திர்க்குலம் சகஸ்தி ரம்மென
சகந்த னில்உறு மனுக்கு லம்உய அருள்கொடு
முழுமு தற்பொருள் திருவு ருக்கொடு
மெய்வ ழிப்பதி உய்க தித்தர வருகுநாள்
தொழுதி டும்உயிர் பழுத றும்இனி
தூய மேநிலை பெரிய வான்பதம் நிலைபெறும்

பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்'

அங்கு மிங்கும் ஓடி நாடி ஆயி ரங்கள்
நூல்கள் தேடி ஆய்வு செய்தும்
சங்க டங்கள் தீர்ந்த தில்லை சாவ தும்க
டந்த தில்லை வான்க னிந்து
இங்கு வந்து பொன்ன ரங்கர் அஞ்ச லென்று
தஞ்சம் தந்து அங்க மென்று
எங்கள் ஜீவன் உய்ந்து வாழ தங்கள் தாள்க
னிந்த ளித்த இன்பம் நன்றே

பதினொரு சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்'

இமையோர் பணிந்து இனிதங்கு வேண்ட
இருளாழி சூழ உலகோர்கள் உய்ய
இறைநாதர்சிந்தை இரங்கி
தமிழாளு மிந்த நிலமீதி வர்ந்து
தகைசான்ற மெய்யர் தமையாண்டு கொண்டு
தருமெய்யின் இன்பம் இனிதே
அமிழ்திங்கு பொங்கி அறமிங்கி லங்க
அருள்பொங்க நெஞ்சம் அழியாவ ரங்கள்
                                                                                        அவைதந்து ஆளு மரசே!
கமழ்செண்ப கங்கள் கனிமேனி கண்டு
கடையேனை உய்த்த குருநாத ருங்கள்
                                                                                       கழலார விந்தம் சரணம்.

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வேதமு மாகமம் ஆரண மாதிய
மாதவர் ஞானத போதனர் ஆயினர்
                                                       மெய்யுரை செப்பிய வண்ணமி வர்ந்தருள்
பாதம தேகதி நீதமொ ரேநெறி
பாருல கெங்கினும் உய்வழி மெய்வழி
                                              பண்ணகர் என்னகர் விண்ணவர் மெய்ந்நிலை
போதம தேயுணர் சாதல றும்மினி
பொய்ம்மல மாய்கைகள் பற்றுகள் நைந்திடும்
                                                          பூரண ஞானம்பொ லிந்திடும் வான்புகழ்
ஓதுமின் உய்யுமின் ஒண்மலர்த் தாளிணை
உம்சிரம் சூடுமின் உய்தரு நாயகர்
                                                                         தாள்சர ணாகதி! தாள்சர ணாகதி!

பதிமூன்று சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஒன்றே சாதி ஒன்றே தெய்வம் என்று அன்று மூலர் சொன்ன
உண்மை யின்று மெய்ய தான ஓர்வழி
நன்றே கண்டு நாடிக் கூடி நாதர் தாளில் சீரைத் தேடி
நன்மை பெற்றுக் கொண்டோம் இஃதே நேர்வழி
மன்றி லாடும் வானின் ஈசர் இன்றும் முள்ளே இன்பம் நல்கும்
ஈடில் பேறு எல்லாம் ஈயும் சீர்வழி
பொன்றா வாழ்வு பேரின் பம்மஃதின்றே கொண்டு ஏற்றும்விண்ணில்
என்றும் சாவா வாழ்வில் வாழ்தல் மெய்வழி.

கட்டளைக் கலிப்பா

நேரசை முதலாக பதினொரு எழுத்துக்களால் இயன்றது

தெய்வ மென்பது மெய்வழித் தெய்வமே
தீதி லானெறி சேர்தரு தெய்வமே
உய்வ திங்கினி துற்றவர் மீண்டிடும்
உறுதி யற்றவர் கூற்றினில் மாண்டிடும்
செய்வ தென்பது தெய்வ வணக்கமே
சீரி லாதவர் நரகிற் கிணக்கமே
மெய்வ ழித்தவ மாமணி ஆட்சியே
சார்ந்து உய்ந்தவர் திருவுயர் மாட்சியே

கட்டளைக் கலிப்பா

நிரையசை முதலாகப் பனிரெண்டு எழுத்துக்களால் இயன்றது

அமுது பொங்கிடும் அண்ணல் நிறைமொழி
அண்டர் நாயகர் வான்செய் மறைமொழி
எமது யிர்க்கிது வேதழை யும்மழை
இன்ப வான்விளை ஏழ்க ணுக்கழை
தமதெ மதெனில் தாம்வினை நத்திடும்
தயவை நாடிடில் வானினுக் கெத்திடும்
நமது நல்வழி செய்வழி உய்வழி
நலந்த ரும்வழி நற்றவ மெய்வழி

வெண் கலிப்பா

போனகத்தைத் தருமரசர் பொன்னரங்கர் என்தெய்வம்
வானகத்தை வையகத்துள் வழங்கமுத கொடைக்கரத்தார்
சீரோங்கு திருமலர்த்தாள் தனைப்பணிந்தோர் சிந்தைகளி
கூரோங்கு குலம் விளங்கும் திருவிளங்கும் மெய்துலங்கும்
கோதகலும் பாரோங்கு பலநலமும் பெருகி வரும் மறைதுலங்கும்
நேரோங்கும் அறிவொளிரும் கொடுவினைகள் நலிந்நொழியும்
செல்லாத மேனிலைமேற் செல்லவைக்கும் சிந்தைகனிந்
தெல்லாம்வல் லான்மலர்த்தாள் ஏத்து

கலிவெண்பா

கனிமொழியாய் கேளாய்! கான்பொழில்காண் வேட்டு
இனிதாக யானுமென் தோழியும் சென்றோமா
உத்யோவ னச்சோலை ஒண்பொழிலில் வானகத்தின்
வித்தைக்கள் ளர்எழிலார் மின்வீசும் பொன்மேனி
பொன்னரங்கர் மெய்யழகர் போந்துற்றார் கண்டற்றே
என்னை இழந்தேன்பேர் இன்பக் களிபொங்க
நாணித் தலைகவிழ்ந்தேன் நாயகர்நற் றாள்கண்டேன்
ஆணிப்பொன் னாரெழில்சேர் அம்புயர்த்தா ளிற்சரிந்தேன்
செந்தூர மாயப் பொடிகொண்டு தூவின ரோ
சிந்தை கவர்கள்வர் சீராளர் தாள்கண்டால்
விந்தை அழகதனில் வையகத்தில் வேறுண்டோ
கைபிடித்தார் மாலையிட்டார் கானகத்தில் காந்தருவ
மெய்ம்மணமும் செய்வித்தார் வானமுதம் தானளித்தார்
விண்ணகத்தில் பொன்வீட்டில் மெல்லியலே நல்லறஞ்செய்
மண்ணகம்நிற் கில்லை மணம்கொண்டேன் என்றுரைத்தார்
வெட்டாத சக்கரத்தால் மேவியவோர் வாகனத்தால்
எட்டாத மேனிலைக்கே ஏற்றினார் கிட்டாத
இன்பம் தளும்பும் இறையாத தீர்த்தத்துள்
அன்பாக மூழ்குவித்தார் அங்கோர் பொருளால்
ஈரடிகள் காட்டி இனிதாக முச்சுடரில்
சேரடி யென்றெற்குத் தந்தார்கண் நாற்கரங்கள்
ஐவண்ண நாதர் ஆறுபுரிக் கோட்டை
செய்வண்ண ஏழ்நிலைமா டத்துள்ளே சென்றேற்றி
எட்டும் இரண்டும் எழிலோங்கக் காட்டியங்கே
மட்டில்லா இன்ப மயக்களித்தார் மற்றாங்கே
ஒன்பான்வா யில் அடைக்கும் ஓர்நிலையைக் காட்டினார்
தன்பால்பத் தென்றால் தருமதுரை என்னுயிரின்
பண்போங்கு நாதர் பொற்றாளே என்கதிதான்
விண்பாங்கு காட்டும் மெய்த்தெய்வம் என் கணவர்
என் செய்வேன் தோழி எனதருமைத் தாய்க்குரைப்பாய்
நின் மகளாங் குற்றாள் நினைவெல்லாம் வான்தலைவர்
பொன்மலர்த்தா ளிற்சாற்றிப் பித்தானாள் எத்தாலும்
நின்பால்வா ராளென்று நீசெப்பு தாய்கேட் பாள்
யாரவர்காண் எங்குற்றார் அத்தலைவர் என்றாளேல்
பேராயி ரம் உடையார் பேராப் பிறவியறச்
சீராய் வரமருளும் தேவாதி தேவர்காண்
அண்டர் தலைவர் அனைத்தும்செய் வல்லார்காண்
கொண்டற் கொடைக்கரத்தார் கோதற்றார் கோன்புகழை
விண்டுரைக்க யார்வல்லார் மீளாள் மகள் கொண்கண்
தானே முழுமுதலாம் தற்பரர்காண் அன்னவர்தான்
வான்தனிகை வள்ளல் சுதன்.

மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா

மதிநிறைநல் ளருளமுத மழைபொழியப் புவியுயிர்கள்
கதிபெறநல் லறிவறியக் கலிக்கடையில் அனந்தர்தொழ

நரர்மனுவாய் மனுசுரராய் நனிசிறப்ப அருள்தருவாய்!
பரம்பொருளே! பதிமுதலே! பரிந்து சுகம் புரந்தருளி

உயர்மெய்வழி உவந்தருளி ஒளிர்பொன்னரங் கினில்விளங்கும்
தயை யுருவே! தமிழ்ப்பொழிலே! திருநிதியே! கயிலையினின்(று)

எழுந் தெளியேற் கிரங்கியொரு குருவடிவாய் இனிதுவந்த
செழுங்கனிநின் திருவடிகள் சிரமலராய் அணிந்தனமே!

தாழிசை

வன்பிறவித் தளையறுத்து வளங்கொழிக்கும் பெருந்துறைவான்
இன்பிறவித் தலஞ்சேர்த்து எழில்சுரந்து தருந்துரையே!

மறையனைத்தும் தெளியவொரு வகையளித்து மனத்தகத்தின்
கறையனைத்தும்கழியநிறை மொழியருளும் கலையரசே!

அனைத்துலகும் படைத்தளித்து அருளிமறைத் தழித்தமரர்
நினைத் தொழநின் றினித்திடுகற் பகத்தருவே! கனிச்சுவையே!

ஒருகதிரோன் உலகுவப்ப ஒளிர்கதிரோன் சுரர்க்கமிழ்தம்
தருகதிரே தலைசெழிக்கத் தயைதருதற் பரவெளியே

பெருந்தவநின் னடியிணையைப் பொருந்துவர்கள் அருந்தவர்கள்
அருந்துவர்நின் திருமுலைப்பால் அளக்கரிய பெரும்புகழோய்

கலியழிக்கும் கரப்படையோய் கசடுடையென் னுளக்கலியை
நலியொழித்து நலஞ்சிறக்க நனிபுரப்பீர் அருட்குருவே!

அராகம்

பிரணவப் பொருள்தனைப் பரிவுடன் அருளிய
அரன்நினை வழுத்துவர் அறிவறி தெளிவினர்
பலமத குலமொரு நெறிபுக பவமற
நலமிக நிறைதவ சுரர்தொழு குருபரர்
மறைபுகழ் பரவிட குறைகெட அருள்தரு
நிறைமதி யரசரின் திருவடி பெறுபவர்
இகபர சுகநிறை புகழொடு வதிபவர்
தகவுயர் மகதிநின் மலரடி சரணமே!

தாழிசை

பொய்ச்சுகமார் சுவைகாமம் புகழ்வெறிக்கே அலைந்த எமை
மெய்ச்சகத்தில் குடியேற்ற மேனிகொண்டீர் தவவேந்தே!

எத்தனைபா டருமுயற்சி எண்ணரிய பெருந்தவங்கள்
மெத்தஇடர் பட்டதெல்லாம் வாழ்வெமக்குத் தந்திடவே!

அன்னையும தரும்பெருமை அறியாமல் அலைக்கழிந்தோம்
பின்னையதும் பொறுத்தருளும் பெருந்தயவுக் கேதிணையே!

புன்மைதந்து நன்மைபெறல் பொய்யளித்து மெய்கொளுதற்
கென்னுவமை சாற்றுவம்யாம் இறைஞ்சிநின்றோம் ஆண்டகையே!

அம்போதரங்கம்

ஆதியாய் அமர்ந்தீ ர் நீ ர்
அனாதியாய்ச் சிறந்தீ ர் நீ ர்
நீதியாய் நிறைந்தீ ர் நீ ர்
மேதினி படைத்தீ ர் நீ ர்
வாதனை அறுத்தீ ர் நீ ர்
சாதனைத் தவிர்த்தீ ர் நீ ர்
எங்கலி தீர்த்தீ ர் நீ ர்
வெங்கலி அழித்தீர் நீர்
அருவுநீர் உருவுநீ ர்
அறிவுநீர் தருவுநீ ர்
அருளுநீர் பொருளுநீ ர்
அன்புநீர் இன்பம்நீ ர்
அகமுநீர் சகமுநீ ர்
முதலுநீர் முடிவுநீ ர்
அகிலநீர் சகலநீ ர்
ஜீவன்நீர் தேவன்நீ ர்

சுரிதகம்

வன்கலி இருளான் இந்நிலம் அழுங்கவும்
இன்னலைத் துடைக்க இன்னருள் சுரக்க
விண்ணகத் திருந்து மண்ணகத் திறங்கிய
ஒண்புகழ் சிகரத் தண்ணல்நின் திருவடி
சிரமிசைச் சூடிப் பரவுதும் பாடி
அரவெனும் கரவுளம் வெருவிட இருவினை
பொய்ம்மலி புன்மை வெய்துயர் கெடவும்
மெய்வழி தெய்வம் உய்வழி அருள்க
துய்த்திடு நலங்கள் துய்யநின் திருவருள்
எய்திடு இடர்யான் செய்பிழைப் பரிசு

அடியேன்

சிற்றறி வுடையேன் குற்றவன் மடையன்
நற்றவர் பற்று சற்றுமில் கடையன்
தீமைகள் நிறைந்த சேமக் கலமெனும்
காமப் பெட்டகம் பூமிக் கொருசுமை
ஆயின்ஆட் கொண்டு சேயெனைப் புரக்கும்
தாயின்நல் லன்பின் தாயகம் நீரே!
நெஞ்சினில் வஞ்சகம் பஞ்செனப் பறந்திட
அஞ்செழுத் தருளி அஞ்ஞானம் தவிரென
தஞ்சம் தந்தருள் விஞ்சையர் கோவே
கஞ்ச மலர்த்தாள் போற்றி!
செஞ்சொல்நல் வாரிதி தஞ்சம் தயாநிதி!

நன்மதியரசர் பன்மணிமாலை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!