திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/104.ஞான விளக்கு நிலை


ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



✫ 104. விளக்கு நிலை தொகு

இலக்கணம்:-

மாற்றார் மேல் படையெடுத்துச் செல்ல எண்ணிய அரசன் திருவிளக்கு ஏற்றி இறைவனைப் பரவி நிற்க, அவ்விளக்கின் திரியானது வலப்புறமாகச் சுழன்று கொழுந்து விட்டு எரியின் வெற்றி கிட்டும் என்றும் இடப்புறமாகச் சுழன்று எரியின் வெற்றி கிட்டாது என்றும் கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையாக இயற்றப் பெறுவது விளக்குநிலை.

அடரவிர் பைம்பூண் வேந்தன் தன்னைச்
சுடரொடு பொருவினும் அத்துறை யாகும்
- புறப்பொருள் வெண்பாமாலை கொளு 201
துளக்கமில் மன்னர்க் காம்விளக் குரைப்பது 
விளக்கு நிலைஎன வேண்டினர் புலவர் 
- பன்னிரு பாட்டியல்  - 207
வேலும்வேற் றலையும் விலங்கா தோங்கிய
வாறுபோற் கோலொடு விளக்கு மொன்றுபட்
டோங்குமா ரோங்குவ தாக வுரைப்பது
விளக்கு நிலையென விளம்பப் படுமே 
- முத்துவீரியம் 1097
விளக்கு நிலையே வேலும் வேல்தலையும் 
விலங்காது ஓங்கியவாறு போல
கோலொடு விளக்கும் ஒன்றுபட்டு ஓங்குமாறு
ஓங்குவதாக உரைத்தல் என்ப 
- பிரபந்த தீபம் 64

இங்ஙனமாக இலக்கணம் வகுக்கப்பெற்ற (புறத்தில் ஒளிரும்) விளக்குநிலை என்னும் இவ்விலக்கியப் பொருண்மையை அருட்பெருஞ்சோதித் தனிப்பெருங்கருணையராகிய பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் திருவருளால் ஏற்றப்பெற்ற விளக்குகளாகிய அனந்தாதி தேவர்களை அகவிளக்காய் உயிர்விளக்காய் ஜீவஜோதியாய் மாற்றி உருவகித்துப் பாடப்பெற்றது இச்சிற்றிலக்கியம் என்பதாம். விளக்கின் சுடரில் தீய சக்திகள் இடப்புறமாகச் சுழல்வதாகவும் நற்பண்புகள் வலப்புறமாகச் சுழல்வதாகவும் உருவகிக்கப் பெற்றதாமென்க.

ஞான விளக்கு நிலை

காப்பு

நேரிசை வெண்பா

துளக்கமுற ஜீவர்களை தீமையினின் மீட்கும்
விளக்குநிலை பாட விழைந்தேன் - களக்கமற
ஏடெழுத் தாணி தவறாமல் நின்றருள் செய்
பீடுயர்ந்த பொற்றாள் துணை.

நூல்

மருட்பா

ஆதி இருட்கோள மாயிருந்து ஆரருளால்
நீதிமிக் கோங்க நிலவுலகெ லாம்படைத்து
எல்லாப் படைப்பினத்தும் ஏற்றமிகும் ஓர்படைப்பாய்
வல்லமைகள் எல்லாம் வழங்கிமனு வையியற்றி
ஏரார் அருட்ஜோதி எல்லாம்வல் லார்தெய்வம்
சீரார் ஜீவர்களை சிற்ஜோதி யாய்ஏற்ற
நன்றாய் ஒளிர்ந்து நலஞ்சிறந்து வாழ்ந்திருந்து
குன்றாது பேரொளியில் கூடியே ஐக்கியமாய்
ஒன்றி இணைகவென ஓர்நியதி யும்வகுத்தார்
என்றும் வலஞ்சுழன்று ஈடிணையில் பேரின்ப
சித்திப் பெருவாழ்வில் சிறக்கும் நெறிகாட்டி
நித்தியத்தில் என்றும் நிலைத்திருக்கச் செய்தார்கள்
நீதிச்செங் கோலாட்சி நிலவியஓர் நற்காலம்
பேதக் கலியரசன் பெரும்இருளின் வன்றலைவன்
ஒளிரும் கதிரோனைக் கருமுகில்கள் தாமறைத்து
ஒளிமறைத்தல் போலும் உற்றநற் ஜீவர்களை
மாயை எனும்கலியன் வந்து மறைத்துநின்று
தீய வழிப்படுத்தும் தீத்திறமும் ஆயினகாண்
ஆணவம் காமியமும் மாய்கையெனும் மும்மலங்கள்
பேணொனாக் காமமொடு கோபம் குரோதமுடன்
மோகம் மதம்மாற் சரியம் எனும்குணங்கள்
மேகமூட் டங்களென மெய்ம்மை தனைமறைக்கும்
வல்ல கலியரசன் வெம்போர்ப் படைக்கலங்கள்
நல்ல உயிர்களுக்கு நலம்கெடுக்கும் ஆயுதங்கள்
வெல்ல வியலாத வன்கொடிய சத்துருக்கள்
பார்த்தார்கள் எங்கோன் பரமேசர் தாம்படைத்த
சீர்திகழும் ஜீவஒளி சீர்மெய் விளக்கேற்ற
வேல்முனைபோல் மேனோக்கி வலஞ்சுழன்று தானெரியும்
கோலோச்சும் ஐயன் குலதெய்வ தேவேசர்
மெய்வழியின் ஆண்டவர்கள் வானோர் தவத்தரசர்
பொய்யன் கலியரக்கன் பொல்லானை வென்றிடவே
திருவுள்ளம் கொண்டார்கள் தெய்வத் தனிப்பெருமான்
அருள்கனிந்து மெய்விளக்கு அண்ணல் இனிதேற்றும்
பெருஞ்சோதி தன்னிலொளி பெற்றஎழில் தீபங்கள்
கருணையரால் ஆட்கொள்ளப் பெற்றசீர் கண்ணியத்தார்
வெங்கலியின் ஆட்சியினில் வீழ்ந்திருக்கும் ஜீவர்களை
பொங்கெழிலார் பேரருளால் பண்பால் பெருநோக்கால்
அன்பால் அறத்தால் அருந்திறனார் மெய்ம்மறையால்
தென்போங் கமுதத் திருவாக்கால் சற்குணத்தால்
கலியன் கொடுங்குணத்தை கடிந்தடக்கி வென்றார்கள்
வலியனின் வன்செயலை வாட்டிப் பணியவைத்தார்
கடைச்சனிய னின்ஆட்சி கவிழ்ந்து மடியச்செய்தார்
திடமோங்கு மெய்ஞ்ஞான தேவபிரான் மெய்யாட்சி
வையகத்தில் வானகமே வந்த திருவாட்சி
துய்ய தவமாட்சி துலங்கத் திருவோங்கும்
முன்னைப் பழம்பொருட்கும் முன்னவராம் என்னையர்
பன்னிரு சன்னதங்கள் பதிந்த திருக்கரத்தார்
தென்னன் பெருந்துறையார் எல்லாம்செய் வல்லார்காண்
ஜீவன்மெய்ஞ் ஞானஒளி சிறந்தோங்கும் தேவாதி
தேவன் பிரகாசம் சீர்நிறையும் வம்புசெறி
கூற்றுவனின் ஆற்றல் குன்றி அருட்சக்தி
ஏற்றமுறும் செந்நெறியில் எல்லாம் வழிநடக்கும்
நற்குணங்கள் நம்பிக்கை நற்சுசிலம் நல்லொழுக்கம்
பொற்புயர்ந்த பக்தி வைராக்யம் பண்புடைமை
சத்தியம் சான்றாண்மை சற்சனர்பால் சார்ந்திருத்தல்
பத்தியம் கைப்பிடித்தல் நித்தியத்தில் நெஞ்சுவப்பு
வணக்கம் தவறாமை மறையோதும் மாண்புடைமை
இணக்கம் இறையடியே எப்போதும் சிந்தித்தல்
மந்திரங்கள் ஓதல் மனத்தூய்மை வாய்மையெனும்
இந்தவித மாட்சிமைகள் எல்லாம் உயர்ந்தோங்க
சேமநெறி மெய்வழியே சகத்தில் விளங்கிடவே
பூமிக்கு வந்ததுகாண் பொற்புயர்ந்த நல்வசந்தம்
அருட்ஜோதி தெய்வம் அறமோங்கு ஜீவர்களாம்
இருட்கெடவே ஏற்றும் எழிலார் திருவிளக்கு
சாவா வரம்பெருகும் சற்சனர்தம் மெய்விளக்கு
ஓவா தறம்திகழ ஓங்கும் உயிர்விளக்கு
தீவா தனைதீரச் சிறக்கும் அருள்விளக்கு
மூவா முழுமுதல்வர் ஏற்றும் ஒளிவிளக்கு
ஆலமுண்ட கண்டர் ஆண்டவர்ஜோ திவிளக்கு
காலம் கடந்த காருண்யர் மெய்விளக்கு
பூலோகம் உள்ளளவும் பொய்யருகி மெய்வாழ
மேலோகம் காட்டி மிளிரும்பொருள் விளக்கு
தூண்டா மணிவிளக்கு துன்பம் தவிர்விளக்கு
ஆண்டவர்கள் ஏற்றும் அணையாப் பெருவிளக்கு
மறலிகை தீண்டா வானோர் அணிவிளக்கு
அறவாழி அந்தணர் ஐயர் மணிவிளக்கு
அனந்தர் உயிர்விளக்கு அன்பாய் ஒளிர்ந்ததுகாண்
வனமாம் உத்யோவனத்தில் மிக்கிலங்கும் சீர்விளக்கு
பிறவாழி நீந்தஒளி ஈயும் குருவிளக்கு
இறவாப் புகழுடம்பிற் கேற்றும் எழில்விளக்கு
தென்றிசையின் கைலாயர் திருவடிசேர் மெய்விளக்கு
மன்றில் நடம்புரியும் மாதவர்தம் பொன்விளக்கு
என்றென்றும் மெய்வழியே எங்கும் துலங்கஒளிர்
பொன்றாப் புகழ்விளக்கு காண்!

ஞான விளக்கு நிலை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!