திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்


ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



39. கேசாதி பாதம் தொகு

இலக்கணம்:-

கேசாதி பாதம் என்னும் இவ்விலக்கியம் பாட்டுடைத் தலைவரின் திருமேனியின் உறுப்புக்களின் ஆரெழிலை திருவார்கேசத்தை ஆதியாகவும் திருமலரடியை அந்தமாகவும் கொண்டு இயற்றப் பெறுவது

அறல்போற் கூந்தல் பிறைபோல் திருநுதல்
கொலைவில் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண்
இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய் 
பலவுறு முத்தின் பழிதீர் வெண்பல்
மயிர்குறை கருவி மாண்கடை யன்ன
பூங்குழை ஊசல் பொறை சால் காதின்
நாண்அடச் சாய்ந்த நலங்கிளர் எருத்தின்
ஆடு அமைப் பணைத்தோள் அரிமயிர் முன்கை
நெடுவரை மிசைய காந்தள் மெல்விரல்
.................................................................
- பொருநர் ஆற்றுப்படை 25 -47


இவ்வாறாக நலம் பாராட்டலை, கலித்தொகைக் குறிஞ்சிக் கலிப்பாடல்கள், சிலப்பதிகாரத்தில் மனையறம் படுத்தகாதை, பெருங்கதை மற்றும் அரிச்சந்திர புராணம், திருக்குற்றாலக் குறவஞ்சி ஆகிய இலக்கியங்களில் காணலாம். எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் இல்விலக்கியத்தின் பாட்டுடைத்தலைவர்.

எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்

கேசாதிபாத வண்ணம்

காப்பு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்

திருவே! எங்கள் தெய்வமணிச்
செழுஞ்சீ தனமே! பெருவாழ்வே!
அருவே! அறிவின் திருவுருவே!
அன்பின் வடிவே! அறங்கனிந்த
குருவே! குறையாப் பெருநிதியே!
கோலஞ் சிறந்த தவமேரே!
கருவே! கனிந்த கற்பகமே!
கழல்கள் போற்றி! காப்பாமே!

நூல்

திருஉருமால்

திருமால் உருவாய் வருங்காலம்
ஒருமால் தருமால் உருமாலாம்
பெருமால் சிரமேல் புனைகோலம்
புகழார் வண்ணச் சிரமகுடம்
அருள்மால் அதன்மேல் கிள்நாமம்
அணிந்தே திகழ்தல் காணீரோ
குருமால் தவமால் கண்டுய்மின்
குலமுய்ந் திடவுட் கொண்டுய்மின்
(1)
கோணிக் கொண்டை என்றன்றே
குறிப்பாம் தீர்க்க தரிசனம்போல்
தோணி புரத்தார் திருசிரமேல்
திகழப் புனைந்த மாணணிகாண்
காணிக் குரியர் கருணையினால்
கடையேம் பெற்றேம் உய்ந்திட்டோம்
வாணிக் குடையீர் வளர்கயிலை
மன்றில் நடஞ்செய் வானோர்காண்
(2)

திருச்சிகை

இளமைக்காலம்

ஒளிசெய் மேனி இருள்வண்ணம்
ஒருபால் கொண்ட தெனஞானம்
தெளிசெய் தெய்வத் திருமேனி
சிரம்கார் வண்ணச் சிகையழகு
நெளிசெய் திலங்கும் அறல்போலும்
நேர்த்தி காண வாரீரோ!
களிசெய் எழிலைக் காணீரோ!
கதிபெற் றுய்ய வாரீரோ!
(3)

தவம் செய்காலம்

வெள்ளம் போலும் தாழ்சடைதான்
விளங்கும் எழில்கண் டோரெவரும்
உள்ளம் கனிந்து பணிந்தினிதே
உவந்தே ஞானம் பெறஎண்ணும்
கள்ளம் தவிரும் களிகூரும்
காமக் கொடுமை தெளிந்துவிடும்
தெள்ளத் தெளிந்து தரிசிக்க
தேவர் குழுவே வாரீரோ!
(4)

சிவச் செங்கோல் ஓச்சும் காலம்

மலையின் முகட்டில் வெண்முகில்போன்
மகதி தவமே ரருள்திருமெய்க்
கலையின் அரசர் திருசிரசில்
காணும் பனிபஞ் செனும்சிகைகாண்
அலையின் நுரைபோன்ம் அழகொளிரும்
அதுகண் டுவக்க வாரீரோ!
நிலையிற் றிரியா நலம்பெறுவீர்!
நனிகண் டுய்ய வாரீரோ!
(5)

திருநுதல்

அந்நா டகத்தின் வான்பிறையோ
அமுதம் பொதிந்த பெட்டகமோ
நன்கூ டகத்தின் பேழையிதோ
நற்கோ குலரின் பட்டயமோ
தென்னா டுடையர் திருநெற்றி
தெரிசித் திடவே வாரீரோ!
என்னா ருயிரின் வான்பிறப்பே!
இன்பம் கொழிக்கக் காணீரோ!
(6)

திருப் புருவம்

பிறவிப் பிணியைத் தீர்த்திடவே
பாங்காய் வளைந்த வில்லிதுவோ
அறங்கூர் அவையின் திருவோங்கும்
அறிவுப் பெருவாள் இதுதானோ
உறங்காப் பெருவான் தவத்தோங்கும்
உத்யோ வனத்தின் வளைமுகப்போ
பிறங்கும் அண்ணல் திருப்புருவம்
பணிந்து தரிசித் திடவாரீர்!
(7)

திரு நயனம்

அமலர் திருவோங் கெழில்நயனம்
அழகின் பேழை அமுதமழை
கமல விழிகள் கதிர்மதிகள்
கருணை பொதிந்து அடைபடுத்த
இமையா நாட்டம் தரிசிக்கில்
இமையோர் ஆவர் எவரெனினும்
நமைமென் கடைநோக் காற்புரக்கும்
நாதர் நயனம் காண்மின்கள்!
(8)
அருணர் கோடிப் பிரகாசம்
அதுவும் நாணும் எழில்நயனம்
கருணைத் திருநோக் காட்பட்டுக்
கதிபெற் றுயிர்கள் இனிதுய்ய
மரணம் தவிரும், மதிபொங்கும்
வினைகள் வீயும், வான்செல்வம்
திருநன் நயனம் காணீரோ!
தெய்வத் தருளைப் பூணீரோ!
(9)
புரங்கள் எரித்த திருநோக்கம்
பொங்கும் காமம் தகித்ததிது
வரங்கள் வளங்கள் தருநோக்கம்
வள்ளல் திருக்கண் கடைநோக்கம்
அரங்கர் பொன்னின் அருள்நோக்கம்
ஆர்க்கும் ஞான அறவாழி
தரங்கம் கொழித்தல் காணீரோ
தெய்வ நயனம் காணீரோ!
(10)

திருக் கன்னம்

தேமாங் கனிநற் றிரள்வடிவ
செய்ய திருக்கன் னக்கதுப்பு
பூமா தனைய பெரியதாய்
பொழிந்த முத்தங் கொழிபுதுப்பூ
கோமான் திருக்கன் னத்தெழில்காண்
குளிர்மென் மலர்போன் திருவனப்பு
நாமா திலங்கும் பொற்கன்ன
நளினம் காண வாரீரோ!
(11)

திருநாசி

எள்ளுப் பூப்போல் வடிநாசி
எழிலார் குமிழ்போன் திருநாசி
விள்ளா மூச்சுத் தவநாசி
விளங்கு மெய்யர் பெருநாசி
கள்ளர் சொக்கர் திருமூக்கு
கண்டார் உய்ந்தார் அருள்தேக்கு
உள்ளம் களிக்க அதைநோக்கு
உயிரும் செழிக்கும் வழிகாண்மின்
(12)

திருவதரம்

முருக்கின் இதழோ செம்பவழம்
முதிர்ந்த அழகோ செவ்வல்லி
திருக்கிக் கிடந்த பேரெழிலோ
சொக்கர் பொன்னர் திருவதரம்
அருக்கன் அந்தி சிவந்தொளிரும்
அரிய தோற்றம் மிளிர்ந்திடுமே
செருக்கார் அதரத் திருக்கண்டு
ஜென்மம் உய்ய வாரீரோ!
(13)

திருப்பற்கள்

தெங்கின் பாளைச் சீர்வரிசை
செறிந்த முத்தின் திருஆரம்
பொங்கும் திருப்பல் காணீரோ
பொன்னின் அரங்கர் எம்முயிருள்
தங்கும் இளமென் நகையொளிரும்
செம்மா துளைமுத் தின்நிரல்போன்
திங்கள் வதனத் திருப்பல்காண்
சிந்தை களிக்கக் காணீரோ!
(14)
முல்லை அரும்பு பச்சமுதம்
முகிழ்த்த வரிசை காண்பீரேல்
எல்லை கடந்த வெம்பிறவி
இடர்கள் கடத்தும் புரிசைகாண்
தொல்லை தவிர்க்கும் இளநகையைச்
செய்யும் திருப்பல் காணீரோ!
இல்லை இதற்கோர் இணையென்று
இன்பத் தமிழ்ந்து கூறீரோ!
(15)

திருநா

செந்தா மரையின் இதழ்செப்பம்
செய்தா லன்ன திருநாகாண்
நந்தா விளக்கு, அறியாமை
நலியச் செய்யும் திருவிளக்கு
சிந்தா மணிநல் லமுதாரும்
தெய்வ கங்கை இதுகாண்மின்
வந்திங் கிடர்செய் மதம்ஜாதி
வன்சிக் கறுக்கும் திருவாள்காண்
(16)
அமுதம் பெருகும் திருஊற்று
அருள்வே தாந்தம் விளைநாற்று
எமனின் படர்தான் இரிந்தோட
இனிதே வரங்கள் அருள்நாவே
சமன்செய் சீரார் துலைகாண்மின்
சர்வ வரங்கள் பொதிபேழை
அமரர்க் கின்பக் கருவூலம்
அண்ணல் திருநா காண்மின்கள்.
(17)
மதிவா னரசின் புகழ்பாடி
மக்கள் இன்பத் தொடுகூடி
இதயப் பொங்கல் பொங்கிடுங்கால்
இதமாய் அமுதம் எடுத்தருளும்
புதுமெய் முக்கூர் கத்தியிது
பொன்னின் அரங்கர் சத்தியிது
கதிர்மெய்க் கனிகள் அருள்சோலை
கனிந்தே அமுதம் தரும்வேலை
(18)
அடியார் பெற்ற பெரும்பேறு
ஆதி யந்தம் அருள்ஆறு
மடியே சுரந்த காமதேன்
வாதம் பித்தம் தெளிமருந்து
குடியாய் அனந்தர் குடிக்கும்கள்
குறையாப் போதை தரும்கஞ்சா
மிடிமை தவிர்க்கும் சஞ்சீவி
வேண்டிக் களிக்கும் எம்ஆவி
(19)
சுவனம் ஏற்றும் துதிக்கைகாண்
தேவ தேவர் மதிக்கைகாண்
கவனம் பாயும் குளிகையிது
கவலை தெளிக்கும் வானமுது
சிவன்மா லயன்மும் மூர்த்திகரம்
செவ்வான் நெறியுள் சேர்த்தகரம்
தவமே ரருள்செய் திருவேதம்
தனிநா யகரெம் குருநாதம்
(20)
படைப்பு முதலா ஐந்தொழில்செய்
பண்ணா ரமுத வானெழில்மெய்
மடையே திறந்த அனந்தருள
வயல்பாய் அமுத வான்கங்கை
விடையே றிவரும் சிவன்கைவேல்
வேத முதலும் முடிவும்தால்
கடையேம் உயிருள் நடிக்கும்தாள்
கதிதந் தெம்மைக் காக்கும்வாள்
(21)
குறிப்பு :- தால் – நாக்கு

இதற்கோ ருவமை இனியேது
இனிதே புகழ்ந்து பணிந்தோது
அதற்கு நிகரொப் பதுகாண்மின்
அழகார் மலர்காண் இதுபூண்மின்
விதிக்கும் மதிக்கும் இதுமூலம்
வேத நாதர் தவக்கோலம்
கதிக்குள் உய்க்கும் திருநாவே!
கடையேம் உய்ய அருள்தேவே!
(22)
வேதன் நடிக்கும் திருமேடை
மெய்த்தேன் பிலிற்றும் தவஓடை
நீதம் செழிக்கும் திருநாவே
நிதிவா னரசின் பெருநாவே
ஏதம் அறுக்கும் ஒருவாளே
எளியேம் பிறந்த திருநாளே!
சீத மலர்த்தாள் குருநாதா!
சிறியேம் உய்ய அருள்தாதா!
(23)

திருவதனம்

முழுநல் மதியின் மாசகற்றி
முதிர்ந்த அமுதைக் குழைத்திட்டு
எழில்பொன் னிழைத்த ஏரார்ந்த
இறைவர் வதனம் காணீரோ!
வழங்கும் கருணைப் பிரவாக
வதன மதியைக் காணீரோ!
அழகார் கோடி சூரியர்நாண்
அருட்பொன் வதனம் காணீரோ!
(24)
திருவார் வதனம் கண்டற்றே
தீர்ந்தோம் வினைகள் பவப்பிணிகள்
மருவார் மரணம் பேரின்ப
வாழ்வில் என்றும் உய்வார்கள்
குருவார் திருவார் அருள்வதனம்
கண்டார் கொண்டார் நித்தியமே!
தருவார் அருள்வார் தரிசனமே!
பெறுவார் உறுவார் சத்தியமே!
(25)

திருக்கண்டம்

விண்டெங் கட்கு அமுதோசை
விளங்கும் திருவார் குரல்நாண்சேர்
அண்டர் போற்றும் திருக்கண்டம்
அழகுப் பொன்னின் காரைகளும்
இண்டை முத்து நவரத்னம்
இணைந்த எழிலார் ஆரங்கொள்
கண்டங் காண்மின் காண்மின்கள்
கண்டங் கடந்தே உய்மின்கள்
(26)
கமுகின் எழிலோ சங்கதனின்
காணற் கரிய எழில்சுற்றோ
அமுதம் பொதிந்த யாழோசை
அதனை விஞ்சும் பெட்டகமோ
எமதன் புத்தென் பாண்டியர்தம்
ஏரார் கண்டத் தோற்றம்காண்
இமையோர் கண்டின் பத்தோங்க
இணையில் கண்டங் காண்மின்கள்
(27)

திருமார்பம்

மத்தக் களிற்றின் நெற்றியென
வளமார் திருமார் பம்காண்மின்
முத்து வயிரம் நவரத்ன
மாலை புரளும் திருமார்பம்
மெத்தக் கமழும் நறுஞ்சாந்தம்
மிகவே இலங்கும் எழில்காண
சித்தம் கனிந்து வாரீரோ
செகத்தீர் உய்ய வாரீரோ!
(28)

திருத்தோள்

முழவுபோன்று எழில் திகழும்
முனிநா யகரின் திருத்தோள்காண்
எழிலார் தந்தம் வளைத்திட்ட
ஏரார் திருத்தோள் காண்மின்கள்
அழகார் கதலித் தண்டுவளை
அணிகொள் திருத்தோள் காணீரோ!
முழுமெய் முதலாம் இளங்குருத்து
மென்றோள் காண்மின் காண்மின்கள்!
(29)

திருக்கரம்

அண்டர்க் கனைவர்க் கபயமருள்
அழகு திருக்கை காண்மின்கள்
கொண்டற் கொடையை விஞ்சருளின்
குளிர்சாந் தணிந்த திருக்கைகாண்
விண்டெம் உயிர்க்கே நல்லமுதம்
வழங்கும் திருக்கை காணீரோ
தண்டு சங்கு சக்கரம்வேல்
சன்ன தம்தாங் கும்பொற்கை
(30)

திருவிரல்கள்

செங்காந் தட்பூ எழிலார்ந்த
சீரோங் கினிய திருவிரல்கள்
பொங்கா ரொளிசேர் கசிதங்கள்
பதிந்த அழகுக் கணையாழி
தங்கும் இனிய கனிவிரல்கள்
திருவைக் காண வாரீரோ
நங்கட் காசி நல்கும்சீர்
நளின விரல்கள் காணீரோ!
(31)
சின்முத் திரையின் சீரெழிலால்
திருவார் சபைக்கு உபதேசம்
நன்முத் திரைகள் பதிக்கின்ற
நற்பொன் விரல்கள் காணீரோ!
வன்வெவ் வினைதீர் பிரசாதம்
வழங்குந் திருவார் விரல்காண்மின்
மன்னும் முதல்நூல் வரைந்தருள்செய்
மணியார் பொன்னின் விரல்காண்மின்
(32)

திருவுதரம்

மதுரம் கனிந்த செண்பகப்பூ
வாச மொளிரும் திருமேனி
உதரத் தெழிலைக் காணீரோ
ஒளிசெய் அழகைப் போற்றீரோ
இதமெய் விரதம் தனிலன்று
ஏற்றம் புரிந்த மெய்யழகர்
உதரம் காண்மின் காண்மின்கள்
உயிருய்ந் தினிதே வாழ்மின்கள்
(33)

திருவுந்திக்கமலம்

சிந்திப் பரிய நந்தேவர்
செவ்வா ழைமென் குருத்தழகின்
உந்திக் கமலங் காணீரோ!
உவந்து பாடிப் போற்றீரோ!
வந்தித் தழகை வாழ்த்தீரோ!
வணங்கிப் பணிந்து போற்றீரோ!
செந்தாமரை மெல் லிதழழகின்
திருவார் உந்தி காணீரோ!
(34)

திருஇடை

பொன்னின் சதங்கை அரைஞாணும்
பூட்டும் மருங்கு காணீரோ!
மின்னார் எழிலை விளைக்கின்ற
வேதன் மருங்கு காணீரோ!
தன்னே ரில்லாத் தலைவர்தாம்
துடிபோன் மருங்கு காணீரோ!
அன்னே என்று அழைத்திட்டு
அகமே குளிர்ந்து போற்றீரோ!
(35)

திருமேனி

பொன்னா லியன்ற புரிநூலைப்
பூண்ட எழிலைக் காணீரோ!
மின்னல் திரட்டி அமைந்தஎழில்
மேனி அணிந்த அழகங்கி
உன்னி உன்னி உருகிடவே
உளத்தில் பதியும் வண்ணமிழை
பொன்னின் அரங்கர் அங்கிதனைப்
பூரித் தினிதே காணீரோ!
(36)

திருப்பக்கம்

ஏகன் தவத்தில் எழில்பொங்க
இரீஇய பக்கங் காணீரோ!
போகம் பெருகும் பேரின்பம்
பொன்னார் மேனித் திருமிளிரும்
யோகத் தமரும் எழில்பக்கம்
உள்ளங் களிக்கக் காணீரோ!
சோகம் தவிரப் போற்றீரோ!
திருவார் அழகைப் பேணீரோ!
(37)

திருத்தொடைகள்

பாழைப் போக்கிப் பலனீயும்
பரமர் மேனி வயிரத்தூண்
வாழைத் தண்டின் வடிவொத்த
வளமார் தொடைகள் காணீரோ!
யாழைப் பழிக்கும் பண்ணழகர்
எழிலார் தொடைகள் காணீரோ!
ஊழைத் தவிர்த்து உய்யச்செய்
ஒளிசெய் அழகைக் காணீரோ!
(38)

திருமுழந்தாள்

கனகக் கிண்ணம் கவிழ்த்தனைய
கடைந்த சந்தக் குமிழ்போன்ற
கனக மன்றில் நடமாடும்
கண்ணின் மணியர் முழந்தாள்காண்
வனமெங் கணுமே வலஞ்செய்து
வையம் வாழத் தண்ணளிசெய்
தினமும் புதியர் முழந்தாள்காண்
தொழுது வணங்க வாரீரோ!
(39)

திருமுன்தாள்

சொக்கத் தங்கம் வார்த்தெடுத்துச்
சீராய் மெருகிட் டழகார்ந்து
பக்கந் திரண்ட முன்திருத்தாள்
பார்த்துக் களிக்க வாரீரோ!
சிக்கல் தவிர முன்தாழ்ந்து
தழுவிப் பணிந்து பேரின்பம்
மிக்கப் பெருகக் காணீரோ
முன்தா ளெழிலைக் காணீரோ?
(40)

திருக்கணுக்கால்

தங்கக் குமிழை மெருகேற்றித்
தன்னேர் அழகுக் காப்பணிந்த
பொங்கும் எழிலார் கணுக்கால்கள்
பூசித் திடவே வாரீரோ!
எங்கும் நடஞ்செய் தகிலவலம்
இயற்றும் கணுக்கால் காணீரோ!
நங்கள் பிறவிப் பிணியறவே
நன்கு பணிய வாரீரோ!
(41)

வெள்ளிச் சதங்கைப் பொற்கொலுசு
விளங்கும் காப்புச் சிலம்பார்ப்ப
அள்ளி யணைக்கப் பேரின்பத்
தழுந்தும் ஐம்பொன் னெழில்காரை
வெள்ளம் போலின் பம்பெருக
வினைகள் விலக்கும் மென்றாள்கள்
உள்ளங் களிக்கக் காணீரோ
உவந்து முத்திப் பேணீரோ?
(42)

திருத்தாள்

தந்தம் பவழம் அபரஞ்சித்
தங்க மிழைத்த எழில்நகமார்
விந்தை விளங்கும் ஈரைந்து
விரல்கள் திகழும் பாதங்கள்
முந்தை யோர்க்கும் முழுமுதலாம்
மெய்யர் தாள்கள் காணீரோ!
தொந்தம் அறவே தவமருளும்
திருப்பா தங்கள் காணீரோ!
(43)

செந்தா மரையின் அரும்பனைய
திருத்தாள் பொன்னின் விரல்தம்மில்
விந்தை அழகார் பொன்மெட்டி
விளங்கும் அழகைக் காணீரோ!
சிந்தா குலங்கள் தளிர்த்தருளும்
தெய்வத் திருவைக் காணீரோ!
பைந்தார் துளபம் அணிமெய்யர்
பேரார் எழிலைக் காணீரோ!
(44)

திருப்பூம்பாதம்

அம்பொன் பிசைந்து அனிச்சஇதழ்
அளைந்த மென்மை அழகுதிகழ்
உம்பர் தலைவர் பூம்பாதம்
உவந்து காண வாரீரோ!
செம்பொன் திருத்தாள் முகம்சேர்த்து
சிரத்தில் சூட வாரீரோ!
செம்பூ விதழால் முத்தியிடச்
சிந்தை கனிந்து வாரீரோ!
(45)

திருக்காஷாயம்

திருவார் கழுத்தில் திகழ்கின்ற
சீரார் அணியாம் காஷாயம்
வருவார் சிந்தை சிரம்திருவார்
மார்பில் புனைந்த அணியாரம்
குருவாம் தனிகைக் குலமரபின்
குறிப்பே திகழல் காணீரோ!
பெருவா தனைதீர் பொன்னரங்கர்
பூணா ரங்கண் டுய்வீரே!
(46)

திருவிடைக்கச்சம்

மின்னார் மேனி விளங்கிடையில்
மிளிரும் பொன்னா ரிடைக்கச்சம்
தன்னே ரில்லாத் தனியழகைத்
தரிசித் திடுவீர் புவியோரே!
மன்னாப் பிறவி மயக்கறவே
வம்மின் காண்மின் உய்மின்கள்
தென்னா டுடைய சிவபெருமான்
திருவைக் காண வாரீரோ?
(47)

திருப்பஞ்சகச்சம்

வெம்பும் பிறவி வினைவீய
வேத நாதர் அவதாரம்
உம்பர் தலைவர் திருமேனி
உவந்தே அணிந்த பேரெழிலார்
செம்பட் டணிபஞ் சகச்சத்
திருவைக் காண வாரீரோ!
தெம்புற் றினிதே தெரிசித்து
சீரோங் கிடவே சேரீரோ!
(48)

திருப்பாதுகை

மண்தீண் டாத மலர்ப்பாதம்
மனுக்க ளுய்ய மண்தோய்ந்து
விண்ணோர் வதியும் மெய்குண்டம்
விளையாட் டயரும் அதுகாலை
அண்ணல் அணிசெய் பாதுகைகாண்
அங்கம் களித்துக் காணீரோ!
வண்ணம் பொதிநற் பாதுகையை
வணங்கிச் சிரமேல் பூணீரோ!
(49)

திருவடி நிழல்

அன்னை அத்தன் அருட்குருவும்
ஆன்ற தெய்வம் அனைத்துமெனும்
பொன்னின் அரங்கர் ஆண்டவர்கள்
பொற்றாள் மலரின் நிழல்படிந்தோர்
வின்னம் வாரா துய்திபெறும்
மெய்வாழ் வதுவே கைவல்யம்
தன்னே ரில்லாத் தனித்தலைமைச்
சாலை அண்ணல் தாள் போற்றி
(50)

எழில் மணிமுடி திருமலரடி வண்ணம் இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!