திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/090.திருமடல்


ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



90.மடல் தொகு

இலக்கணம்:-

மடல் என்னும் சொல் பனை ஏடு, பனங்கருக்கு, பூவிதழ், கண்ணிமை எனப்பல பொருட்களைச் சுட்டும் சொல்லாகும். ஒத்த அன்பினரும் பருவத்தினராயுமுள்ள காதலர் இருவருள் தலைமகன் தன் காதல் நிறைவேறாவுழி தன் மேனியில் நீறுபூசிக் கொண்டு ஆவிரை, பூளை முதலான மலர்களைச் சூடிக் கொண்டு, பனங்கருக்காற் செய்த குதிரை மீதேறி தலைவியின் ஓவியம் வரைந்த கொடியினை ஏந்திக் கொண்டு பலர்காண நாற்சந்தியில் நிற்பது மடலேற்றம் எனப்பெறும். அது கண்ட சான்றோர் அவன் உறுதியினைக்கண்டு தலைவியின் பெற்றோரிடம் எடுத்துரைத்து காதலை நிறைவேற்றி நன்மணம் செய்விப்பர் என்பதாம். ஆயின் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நாற்குணங்கள் பொருந்திய தலைவி அவளுடைய காதல் நிறைவேறாவுழி அவ்வாறு மடலேற்றம் செய்வது இயலாது மற்றும் பொருத்தமுமின்று. ஆதலின் தலைவி தன் காம நோயினைப் பனைமடல் என்னும் ஏட்டில் வரைவதே மடலேற்றம் எனக்கொளலாகும்.

மடன்மாப் பெண்டிர் ஏறார் ஏறுவர்
கடவுளர் தலைவ ராய்வருங் காலே
- பன்னிரு பாட்டியல் 147
எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல்
பொற்புடை நெறிமை இன்மையான
- தொல்காப்பியம். பொருளதிகாரம் - 38
உற்ற அறம் பொருள்வீ டௌளி யுயர்ந்தின்பம்
பொற்றொடி காதற் பொருட்டாகப் - பெற்றி
உரைத்த கலிவெண்பா மடலிறைவ னொண்பேர்
நிரைத்த வெதுகை நிறுத்து
- வெண்பாப் பாட்டியல்  - 50 
அறம்பொருள் வீடெனும் அம்முக் கூற்றின்
திறம்கடிந்து அரிவையர் திறத்துஉறும் இன்பம்
பயன்எனக் கலிவெண் பாவால் தலைவன்
பெயர்எது கையினால் பேசுதல் வளமடல் 
- இலக்கண விளக்கம் 856 

பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு திருமடல் என்னும் நூல் இயற்றப் பெறலாகிறது.

திருமடல்

காப்பு

நேரிசை வெண்பா

கடலளவு பொங்குசிவ காமிப்பெண் பென்னை
மடலேற மாக்காதல் கொண்டேன் - திடமோங்கு
பொன்னரங்க நாயகரே! போற்றிசெயச் சொல்பொருளும்
நன்னயமாய் நல்கும் நயந்து

நூல்

கலி வெண்பா

வாழிய! மெய்வழி தெய்வத் திருத்தாள்கள்
வாழிய! மெய்வழியே வையகம் எங்கெங்கும்
வாழிய! மெய்த்தெய்வ வான்புகழ் எண்டிசையும்
வாழிய! பொன்னரங்கர் மெய்யாட்சி என்றென்றும்
வாழிய! பொன்னார் மலர்த்தாள்கள் என்னுளத்தே
வாழிய! மாறாது மாக்காதல் என்நினைவில்
என்னுயிருள் புக்கு எழிலாட்சி செய்நாதா
மன்னவரே! மாதவரே! மாது இளங்கலையாள்
இன்பவடி வம்தருநும் ஈடில்லா மாட்சியினை
அன்புவடி வானவளோர் ஆரணங்கு செப்பினள்காண் (10)
தென்றிசையின் கைலாயர் சீர்புகழைக் கேட்டெளியாள்
நன்று தரிசிக்க நெஞ்சம் மிகவிழைந்தேன்
பேரான நாட்டுப் பெரும்பேர்ப் பெம்மானுங்கள்
பேர்கேட்டேன் கேட்டளவே பேரக்காதல் கொண்டேனால்
ஆயிரம் ஆயிரமாம் அன்புநா மம்உமக்கு
தாயின்மிக் காங்கருணைத் தண்ணளியர் என்றார்கள்
சேயின் பளிங்கிதயச் செம்மலிவர் என்றார்கள்
தூய்மையே ஓருருவாம் தோன்றலிவர் என்றார்கள்
ஊர்கேட்டேன் நெஞ்சில் உவகை பெருகியதே
சீர்கேட்ட போதெளியாள் சிந்தை நெகிழ்ந்தேன்காண் (20)
ஊறல் மலைச்சாரல் உத்யோ வனத்தங்கே
மாறாத பேரழகர் வானோர் உமைக்கண்டேன்
திங்கள் திருமுகமும் சீர்கமல நேத்திரங்கள்
பொங்கும்செவ் வல்லித் திருமலர்வாய் மெல்லிதழ்கள்
மாவலிஏ மன்தனைவெல் பட்டயமாம் நெற்றியதும்
தீவினையைச் சேதிக்கும் சீர்வாள் புருவமதும்
சீர்குமிழார் நாசித் திருக்கன்னம் மாம்பழமாம்
பேரழகு முத்தாரம் பல்,சங்கு மென்கழுத்து
பொள்ளென்று ருண்டு திரண்டிலங்கு பொற்புயங்கள்
வெள்ளானை மத்தகமாம் மார்பழகு கண்டேன்காண் (30)
நேருக்கு நேர்பார்க்க நெஞ்சில் துணிவில்லை
பாராம லேயிருக்கப் பாழ்மனமும் கேட்கவில்லை
நாணித் தலைகவிழ்ந்தேன் நற்கமலத் தாள்கண்டேன்
காணில் வினைதீர்க்கும் கதியருட்தாள் கண்டேனே
வெண்கலம் வார்த்து விளக்கிவைத்த முன்தாள்கள்
விண்ணோர் திருமேனி மாணெழிலைக் கண்டுவந்தேன்
பெம்மானின் பேரழகில் பேதை மயங்கிநின்றேன்
அம்மா! இவர்க்குநிகர் யாருமிலை என்றுணர்ந்தேன்
முக்கனியும் தேனில் மிகக்குழைத்துப் பூங்காரம்
தக்கபடி சேர்த்துத் தருமமுது போல்மொழியர் (40)
கேட்டாற் பிணிக்கும் கிளரினிய வானமுதம்
தேட்டிலுயர் பேரின்ப சித்தியருள் சீருரைகள்
பொற்குன்று போல்வார்என் பொன்னரங்க நாயகரே!
கற்கண்டு சொற்கொண்டு கன்னியெனைத் தானழைத்தீர்
மண்டியிட்டுப் பொன்னார் மலர்த்தாள் பணிந்தேனால்
அண்டிப் பணிந்தயிந்த அன்பினளை அண்ணல்நீர்
ஆசீர் பதித்தீர் அருள்நோக்கால் தான்தடவி
பூசீர் வழங்கிப் பொற்கரத்தால் வானமுதம்
தந்தருளிச் சிந்தை தனில்புகுந்தீர் என்சாமி
விந்தைச் சிகரமெட்டும் வேல்வேந்தர் எற்குரியர் (50)
நாணத்தை விட்டொழித்து நான்கண்டு பூரித்தேன்
ஆணழகர் பொன்மேனி ஆரெழிலி லேமயங்கும்
இன்னவரென் நாயகரென் றக்கணமே நிச்சயித்தேன்
மன்னவரை எந்தன் மணவாள ராய்வரித்தேன்
கண்ணாளர் என்றன் கணவரென்று காதலித்தேன்
விண்ணாளும் வேந்தர்நீர் மெல்லியலென் னுட்புகுந்தீர்
என்னவரை என்ஜீவ சிம்மா சனத்திருத்தி
நன்னயமாய் மெய்வணக்கம் நான்புரிந்து பூரித்தேன்
என்காதல் மன்னவர்பால் ஏக்கம் மிகப்பெருக
அன்போங்க எண்ணி அகத்தில் மகிழ்ந்திருந்தேன் (60)
தென்னவராம் பொன்னரங்கர் விண்ணரசர் ஏந்திழையென்
மன்னியசீர் மாதவரை மாமணியைப் போற்றிநின்றேன்
தன்னை மறந்துதிருச் சன்னிதிமுன் நின்றிருந்தேன்
என்நினைவை என்நிலையை என்னரசு கண்டுகொண்டீர்
சின்னஞ் சிறுமியடி சென்றுவா என்றுரைத்தீர்
சொன்னதிரு உத்தரவுச் சொற்கு மறுப்புமுண்டோ
எத்தனை யோகோடி எண்ணில் அடங்காத
முத்தனையர் தங்கள்பால் மெய்க்காதல் கொண்டார்கள்
அன்றுமூ வாயிரமாம் கோபியர்க்கு அன்பளித்தீர்
இன்றுபல் லாயிரவர் இன்பனந்தர் இன்பமுற்றார் (70)
வித்தகரே! இவ்வடிமை மெல்லியலை ஏற்றருள்வீர்
சித்தம் இரங்கியிந்தச் சின்னவளை ஆதரிப்பீர்
பெண்ணேநீ ஆசைமொழி பேசவெட்கம் கொண்டிலையோ
விண்ணாடர் என்னை வரிக்கத் தகுதியுண்டோ
தென்னா டுடைய சிவமென்னை இச்சித்து
நன்மணமும் கொள்ள நயத்தல் பொருத்தமிதோ
என்றெல்லாம் கேட்டு எளியாளைத் தள்ளாதீர்
மன்றில் நடம்புரியும் மாதவரே! மாமணியே!
நீதி தவறாத நிர்மலரே! நித்தியரே!
சாதி யொருநிரப்பாய் தான்செய்த தானவரே! (80)
கோதை எளியாட்கு இல்லொன்று இங்கிலையோ
பேதை சிறியாட்குப் புக்கிலொன்று கிட்டாதோ
பாற்கடலில் கொஞ்சம் பருகில் குறைந்திடுமோ
வேற்கரத்தீர் மெல்லியல்யான் ஓர்சுமையோ தங்களுக்கு
என்காதல் மன்னவரே ஏக்கம் மிகப்பெருக
நின்பாத மென்மலரை நெஞ்சில் பதித்தேன்காண்
என்பிராண நாயகர்தான் பொன்னரங்கர் ஏந்திழையென்
பொன்கணவர் என்னுளத்தே பூரிப்பாய் நானுரைக்கும்
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாள்போல்
பாடிக் களிப்பித்த பண்பரசி மீராபோல் (90)
நாடித் தவமிருந்த நல்இமவா னின்மகள்போல்
கூடிக் களித்திருந்த கோதைரா தைபோலும்
ஆகத் துடிக்கின்றேன் அன்பே அருள்தருவீர்!
போகப்பே ரின்பத்துள் ஆழ்த்துங்கள் பேதையெனை
கண்ணாளர் உங்கள் கழல்கண்டு காதலுற்றேன்
விண்ணாடர் உங்களுக்கு மிக்கடிமை ஆயினன்யான்
அண்ட சராசரங்கள் யாவும் படைத்தவர்நீர்
தொண்டரித யம்உமக்குத் தூயபளிங் காசனமாம்
கொண்டற் கொடைக்கரத்துக் கோமானும் தாங்களன்றோ
வண்டற்கும் வம்பர்க்கும் வாளாவீர் எம்பெருமான் (100)
கல்லார்க்கும் கற்றவர்க்கும் வல்லார்க்கும் மாட்டார்க்கும்
எல்லார்க்கும் மெய்யமுது ஈந்தருள்வான் வள்ளலன்றோ!
எத்தனை எத்தனையோ ஏரார் அவதாரம்
முத்தனையார் நீரெடுத்து வையகத்தில் வானகத்தை
கொண்டுவந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வை
அண்டிநின்ற பேர்களுக்கு அன்பாய் வழங்கினீர்கள்
மச்சாவ தாரம்செய் மாமணியே! ஞானியர்க்கு
இச்சை பிறங்கீட்டு இயல்மொழியர் தாங்களன்றோ
கூர்மாவ தாரம்செய் கோமகனே! மெய்யருக்கு
சீர்மேவு மெய்ஞ்ஞானச் செம்பொருள்தந் தாண்டீர்கள் (110)
வாமணம்தான் கொண்டு மறைபொழிந்தீர் செண்பகமாம்
பூமணமார் மேனிகொண்ட பொன்னாடர் தாங்களையா!
கோதண்டம் கொண்டு அரக்கர்குலம் வேரறுத்து
மாதரசி சீதையினை வெஞ்சிறையி னின்மீட்டீர்
சங்குசக்ர தாரியெனச் சற்சனரை ஆதரித்த
எங்கள் குலதெய்வமே! எங்களுயிர் தாங்களன்றோ!
தூணில் துரும்பிலுமே தோன்றும் நரசிம்மம்
காணரு விஸ்வரூபக் காட்சிதந்த கண்ணபிரான்
தேவர் குலங்காக்கும் பூவரா கப்பெருமான்
சாவா வரந்தருமெய்ச் சாயுச்யர் தாங்களன்றோ (120)
வாசிக் குதிரையெனும் வெண்புரவி ஏறிவரும்
தேசிகர் எம்பெருமான் தேவாதி தேவரன்றோ
காலகா லம்கடந்த காருண்யர் சாமிநீர்!
சீலமெல் லாம்சிறந்த செவ்வை நெறியாளர்!
நியதியெல் லாம்வகுத்து நீதியர சாள்கின்றீர்!
தயவே உருவான தண்ணளியர் தற்பரர்நீர்!
கலைக ளெலாம்திரண்ட கலைவல்லார் தாங்கள்
நிலைவாழ்வு மாந்தருக்கு நல்குமுயர் நற்றவத்தீர்!
வித்தாதி வித்தாம் விமலர்காண் எங்கோவே!
சத்திய சுத்தரென்னும் சன்மார்க்க ஸ்தாபகர்நீர்! (130)
ராகமெனும் பக்திமிக்க ராதையின் கண்ணனும்நீர்!
சோகம் தவிர்த்தாளும் சுந்தரரும் தாங்களன்றோ
புருடார்த்தம் இன்பம் அறம்பொருளும் வீடாம்
அருளால் வழங்கும் அறவாழி தாங்கள்தான்
மாயாவ தாரர் மறுவில்லா மாமணியாம்
தூயோர் இதயத் தூமணிமா டத்துள்ளீர்!
தூங்காத ஆண்மைத் துலங்கும்தவ கோமானே!
ஆங்கிரச கோத்ர ஆளுடையார் எம்பெருமான்
கல்வி கலைகளெலாம் ஓருருவில் வந்தவரே!
சொல்விற் பனம்கடந்த தேவாதி தேவர்நீர்! (140)
துணிவோர் உருவாகித் தீமறலி யைவென்ற
அணியார் அருண்மணியர் அன்புருவே ஆண்டவரே!
நீங்கா நிலத்தாள்கை நித்தியரே! சத்தியரே!
பூங்கமலத் தேவனருள் பொங்கும்ஆ காயகங்கை
காளிங்க நர்த்தனம்செய் கார்மேக வண்ணன்நீர்
ஆளிங் கெனையாக்கி ஆளவந்த ஆண்டவரே!
குன்றுருவ வேல்வாங்கி கோரமிகு சூர்வென்று
அன்றுமயில் சேவலென்று ஆட்கொண்ட தீரரும்நீர்!
பரபோகம் ஈயும் பரந்தாமர் தாங்களையா!
வரஆகம் தானாய் வரம்கொடுத்த வள்ளல்நீர்! (150)
அன்றிரண்யன் ஆகம் பிளந்தருளி ஆட்கொண்டீர்!
மன்றில் நடம்புரியும் மாதவரே! சீமானே!
ஊணுறக்கம் அற்ற ஒருதலைவ! எம்பெரும!
காணரிய காட்சியெலாம் காட்டியருள் கண்ணாளா!
தேவாதி தேவத் திருக்கயிலை வாசரும்நீர்!
சாவா வரந்தருமெய்ச் சாயுச்யர் சாமியும்நீர்!
மூவா முதல்வர்நீர் முன்னுபின்னு இல்லாதார்!
கோவேந்தர் ஈடிணைகள் கூறவொண்ணாக் கோதில்லார்!
மறுவில்லா மாணிக்கம் வையகமே உய்யவந்தீர்!
அறவாழி என்னும் அருண்மணியர் வானரசர் (160)
ஆசை பெருகியெழும் அன்பு உருகிவரும்
நேசம்நெ ருங்கிநிற்கும் நெஞ்சம் உருகியழும்
பல்லாயி ரம்பேர்க்கும் பொங்கிவரும் காமத்தீ
எல்லாம் அவித்தடக்கும் இன்பமழை தாங்களன்றோ?
சொல்லால் பொருளால் சுகமளிக்கும் சோடசமே!
வல்லாளர் மெய்யின் வழியாண்ட வாமணரே!
மதவெறிகொண் டிந்த வையம் அழிகாலம்
இதமருளி எம்மதமும் சம்மதமென் றாக்கினிரே
ஒன்றே குலமும் ஒருவனே தேவனென
நன்றாக மெய்யின் வழிநிறுவு நற்றவரே! (170)
தன்பெருமை தானறியாத் தானவரே! தண்ணளிசேர்
பொன்னரங்க நாயகரே போற்றியெலாம் பொன்னடிக்கே
முன்னுபின்னு இல்லா முதல்வரே மேலவரே!
நின்பின்னே நான்தொடர்ந்தேன் நேசமிகு நாயகரே!
இங்கேஎன் அன்பு எழிலாய்ப் பொலிந்திருக்க
அங்கேஎன் இல்லில் அழகாய் எனைவளர்த்த
நற்றாய் செவிலியொடு நங்கைமார் கேள்விகட்கு
எற்றே மறுமொழியும் யானுரைப்பேன் என்னவரே!
ஏடி! இளங்கலையே என்னாயிற் றுன்றனக்கு (180)
வாடி மெலிகிறதேன் வன்பசலை மேனியிலேன்
பாடிக் களிக்கின்றாய் பண்ணிசைத்து உண்ணாமல்
ஆடி மகிழ்கின்றாய் ஆரேடி நின்மனதில்
கூடிக் கலந்தஅந்தக் கோமகன்யார் கூரேடி
சேடியர் எங்களுக்கு செப்படிநீ உண்மையினை
யாரைநீ எண்ணி ஏக்கம்கொண் டாய்சொல்வாய்
பேரை உரையாயோ பித்துற்றாய் கொல்நீயும்
என்று மிகக்கேட்டு இளைப்பிக்கின் றார்மன்னோ
நன்று பதிலுரைக்க நான்மயங்கி நிற்கின்றேன்
பேரில்லார் ஆயிரமாம் பேர்க்குரியர் என்னவர்காண் (190)
ஊரில்லார் ஊரெல்லாம் அன்னவரின் ஊராகும்
தாயில்லார் எவ்வுயிர்க்கும் தாயாவார் தாங்கிவளர்
ஆய்மதியர் தந்தையில்லார் எல்லார்க்கும் தந்தையவர்
சாதியிலார் சர்வேசர் சாதிகளின் கர்த்தரிவர்
மேதினியில் அன்னவரே மேலாம் குலமானாம்
சத்திய தேவ பிரம்மகுல மென்றார்கள்
நித்திய நின்மலராம் நீதமிகு என்சாமி
எம்மதத்தோர் என்றார்கள் எம்மதமும் சம்மதமே
தம்மதத்தைத் தானறிய தான்வழங்கும் மெய்வரங்கள்
வன்மறலி கைதீண்டா மெய்ம்மதத்தார் அன்புமிளிர் (200)
பொன்மனத்தார் கட்கிவரே பொருந்தும் தயவருள்வார்
இங்ஙனம் அன்னோர்க் கெடுத்துரைத்தேன் என்தேவே
அங்கவரின் உள்ளம் அதையேற்கா தேயுரைத்தார்
பெற்றோர் பெரியோர்கள் பூதலத்தோர் மாதலத்தார்
உற்றார்கள் நாங்கள் உனக்குமணம் செய்யோமோ
நீயே மணமகனை நிச்சயித்துக் கொண்டாயோ
சேயே உனக்கிதுதான் சீர்வழியாய்த் தோன்றியதோ
நன்மைதீ மையெல்லாம் நீயறியக் கூடிடுமோ
பொன்மயிலே சற்றுப் பொறுத்திருக்க லாகாதோ
வருங்காலம் எப்படியோ மாதே நலங்கள் (210)
தருங்காலம் தேர்ந்தாயோ சிந்திக்க லாகாதோ
தாய்சொல்லைத் தட்டாமல் தானிருந்தாய் பைங்கிளியே!
சேயுனக்குச் செல்லம் கொடுத்ததனால் வந்தவினை
தந்தை யிதையறிந்தால் தாங்காச் சினம்கொள்வார்
உந்தனுக்கு நெஞ்சில் உரமதிகம் தான்மகளே!
உடன்பிறந்தோர் கேட்டால் உளம்கொதிப்பர் மிக்க
இடம்கொடுத்து விட்டீர்கள் என்றென்னை ஏசாரோ!
எங்கட்குச் சொல்லாமல் ஏனிவ் வழிதேர்ந்தாய்
பொங்கிவரும் சுற்றத்தார் புன்மொழிகள் பேசிடுவார்
எப்படி நீதுணிந்தாய் யார்கெடுத்தார் நின்மனத்தை (220)
இப்படி யாகத்தாய் என்பால் சினந்துரைத்தாள்
யான் சொன்னேன்
“அன்னாய் இதுகேட்பாய் அன்பால்நான் தேர்ந்தவழி
மன்னியசீர் மெய்வழிகாண் வையகத்தோர் வானகத்தோர்
எல்லாரும் உய்ந்திடவே ஏற்றவழி என்ஐயர்
பொல்லாப் பிறப்பொழிக்கும் பொன்னரங்க நாயகர்காண்
தெள்ளத்தெளிவாகச் சிந்தித்தால் மெய்தெளியும்
உள்ளம் உவகையுறும் உங்களுக்கும் உற்றவர்க்கும்
கள்ளம் கருகிவிடும் காருண்ய ரால்ஞான
வெள்ளம் பெருகிவரும் வெம்மறலி தீண்டான்காண்.
ஆருயிர்க்குச் சீரளிக்கும் அற்புதமாம் மெய்வழியே (230)
பாருலகில் இஃதொன்றே பற்றும் அறநெறிநான்
கொண்ட முடிவிதனில் குன்றிமணி பின்னடையேன்
அண்டர்க் கரியர் அவனிதனில் போந்துற்றார்
ஆவி உடல்பொருளும் அன்னவர்க் கேதத்தம்
தேவாதி தேவர்பொற் றாளில் சமர்ப்பித்தேன்
அரனோர் உருவான ஆதிபால் பேதை
சரணா கதியடைந்தேன் தாயே இதுசத்யம்
தேனில் சுவையானார் செம்புலப்பெ யல்நீர்போல்
ஊனில் கலந்து உயிரில்நிலைத்து விட்டார்
என்னுயிரை அன்னவர்க்கே ஈந்துவிட்டேன் (240)
மன்னவரே என்றன் மணவாளர் என்றறிவாய்”
இவ்வாறு தாய்க்கு எடுத்துரைத்தேன் மற்றவரும்
செவ்வையாய் என்னுளத்தின் தீர்க்க முடிவறிந்தார்
சொல்கேளாப் பெண்ணென்று தீர்மானம் செய்துவிட்டார்
நல்லனந்தர் கோவே! நாயகரே! நும்தாளில்
மண்டியிட்டேன் மன்றாடி வேண்டுகின்றேன் மாதவரே!
அண்டிப் பணிந்தயிந்த அடிமையெனை ஏற்றருள்வீர்!
என்னினைவில் ஓவா திலங்குகின்ற காரணத்தால்
என்துயிலில் நன்கனவில் ஏதோ உளறுகின்றேன்
நாதா! அருள்தாதா! என்று நவின்றேனாம் (250)
பாதா! பரமேசா! போற்றுகின்றேன் என்றேனாம்
நீதியொரு மேனிகொண்டு நீணிலத்தில் வந்தவரே!
ஆதி முழுமுதலே! ஆதரிப்பீர்! என்றேனாம்
மோகம் தவிர்த்தாள்க என்று விழைந்தேனாம்
தாகம் தணிவித்த தேன்கடலே! பேரின்ப
வாழ்வெனக்குத் தந்தாள்க! மாதவரே! வானவரே!
தாழ்வொழித்த என்றன் தயாநிதியே! என்றேனாம்
சாகா வரமெனக்குத் தருபவரே! என்றேனாம்
ஆகா!நிற் கார்நிகரென் றாச்சரிய முற்றேனாம்
இறப்பொழிக்கும் என்சாமி என்னைத் திருவுள்ளம் (260)
மறப்பொழித்து ஆள்கவென மன்றாட்டு சொன்னேனாம்
சாதிமதம் இனமும் தேசம் மொழிகடந்த
வேதமுத லே!வணக்கம் என்று விளம்பினனாம்
வித்தாதி வித்தேநீர் வாழி!யென வாழ்த்தினனாம்
முத்தாபம் தீர்த்தருளும் மாதவரே! என்றேனாம்
தேடரிய சீதனமே! செம்மைமிகு மாதனமே!
ஆடலரசே! என்னை ஆதரிப்பீர் என்றேனாம்
மாதவரே! ஏற்று வரமருள்வீர் என்றேனாம்
நின்கடைக்கண் காட்டியே நேசிப்பீர் என்றேனாம்
பொன்மலர்த்தாள் எல்லோர்க்கும் புக்கிலென்று சொன்னேனாம் (270)
என்னுயிரில் தான்கலந்து இலங்குகின்றீர் என்றேனாம்
மண்தீண்டாப் பாதம் வருந்த நடம்புரிந்து
விண்ணேற்றி வைக்கும் வேதாவே! என்றேனாம்
தேன்மொழியால் இவ்வெளியாள் சிந்தை கவர்ந்தவரே!
வானமுதம் ஈயும் வரோதயரே! என்றேனாம்
ஏமனையும் வெல்லாற்றல் ஏந்தலரே! ஏழைசிவ
காமம் தணித்தாள்க என்று கழறினனாம்
வருணம் கடந்தாள் மணவாளா! ஆளும்
தருணம் இதுவென்று செப்பிமிக ஏங்கினனாம்
ஏழ்பிறப்பின் மெய்ப்பொருளை எற்கு அறிவித்து (280)
பாழ்நரகி னின்மீட்பீர் என்று பகர்ந்தேனாம்
நீடாழி சூழ்உலகில் நித்தியத்தைத் தந்தருளும்
வாடா நெறிமுழங்கும் மெய்வழியில் கொண்டேற்றும்
தேடாப் பெருநிதியே! தெய்வமே! போற்றுகின்றேன்
கோடா யிதம்கைக்கொள் கோமானே! சீமானே!
அல்லும் பகலும் அனவரத மும்நினைந்து
இல்லில் அனல்மெழுகாய் ஏங்கியுருகி நிற்கும்
உண்ணா துறங்காது உங்களை எண்ணியுருகும்
பெண்ணிவளை சின்னவளைப் பேதை இளங்கலையை
ஏற்றருள்க! சாமி! இரங்கிடவே வேண்டி (290)
கோற்றேன் மொழிமிழற்றும் கோமான்நின் சன்னிதிமுன்
பண்ணாரும் தீந்தமிழில் பேதை சமர்ப்பிக்கும்
விண்ணப்பப் பென்னை மடல்.

திருமடல் இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!