திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/12.நடுவுநிலைமை

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 12.நடுவுநிலைமை

பரிமேலழகர் உரை தொகு

பரிமேலழகரின் அதிகார முன்னுரை
நடுவு நிலைமை :அஃதாவது, பகை நொதுமல் நண்பென்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்பநிற்கு நிலைமை. இது நன்று செய்தார்மாட்டு அந்நன்றியினை நினைத்தவழிச் சிதையுமன்றே. அவ்விடத்துஞ் சிதையலாகாது என்றற்கு, செய்ந்நன்றியறிதலின்பின் வைக்கப்பட்டது.

திருக்குறள் 111 (தகுதியென) தொகு

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்.
தகுதி என ஒன்று நன்றே பகுதியான்
பால் பட்டு ஒழுக பெறின்.(01)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
தகுதி என ஒன்று நன்றே- நடுவுநிலைமையென்று சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று;
பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின்= பகை நொதுமல் நண்பு என்னும் பகுதிதோறும் தன் முறைமையை விடாது ஒழுகப்பெறின்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
தகுதியுடையதனைத் தகுதி என்றார். "ஊரானோர் தேவகுலம்" என்பது போலப் பகுதியான் என்புழி ஆறன் உருபு தோறும் என்பதன் பொருட்டாய் நின்றது. பெறின் என்பது, அவ்வொழுக்கத்து அருமை தோன்ற நின்றது.
இதனான் நடுவுநிலைமையது சிறப்புக் கூறப்பட்டது.

திருக்குறள் 112 (செப்பமுடையவன்) தொகு

செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி
யெச்சத்திற் கேமாப் புடைத்து.
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. (02)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
செப்பம் உடையவன் ஆக்கம்= நடுவுநிலைமையை உடையவனது செல்வம்;
சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து= பிறர் செல்வம்போல் அழிவின்றி அவன் வழியின் உள்ளார்க்கும் வலியாதலை உடைத்து.
பரிமேலழகர் உரைவிளக்கம்
விகாரத்தால் தொக்க எச்ச உம்மையான் இறக்குந்துணையும் அவன் தனக்கும் ஏமாப்புடைத்து என்பது பெற்றாம். அறத்தொடு வருதலின் அன்னதாயிற்று. தான் இறந்து எஞ்சி நிற்பது ஆகலின், 'எச்சம்' என்றார்.

திருக்குறள் 113 (நன்றேதரினும்) தொகு

நன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை
யன்றே யொழிய விடல்.
நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல். (03)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
நன்றே தரினும்= தீங்கன்றி நன்மையே பயந்ததாயினும்;
நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்= நடுவுநிற்றலை ஒழிதலான் உண்டாகின்ற ஆக்கத்தை அப்பொழுதே யொழிய விடுக.
பரிமேலழகர் உரைவிளக்கம்
நன்மை பயவாமையின், 'நன்றே தரினும்' என்றார். இகத்தலான் என்பது இகந்து எனத் திரிந்து நின்றது.
இவையிரண்டு பாட்டானும் முறையே நடுவுநிலைமையான் வந்த செல்வம் நன்மைபயத்தலும், ஏனைச்செல்வம் தீமைபயத்தலுங் கூறப்பட்டன.

திருக்குறள் 114 (தக்கார்) தொகு

தக்கார் தகவில ரென்ப தவரவ
ரெச்சத்தாற் காணப் படும்.
தக்கார் தகவு இலர் என்பது அவர்அவர்
எச்சத்தால் காணப்படும் (04)
பரிமேலழகர் உரை (இதன் பொருள்)
தக்கார் தகவிலர் என்பது= இவர் நடுவுநிலைமை யுடையர், இவர் நடுவு நிலைமையிலர் என்னும் விசேடம்;
அவர் அவர் எச்சத்தால் காணப்படும்= அவரவருடைய நன்மக்களது உண்மையானும், இன்மையானும் அறியப்படும்.
பரிமேலழகர் உரை விளக்கம்
தக்கார்க்கு எச்சம் உண்டாதலும், தகவிலார்க்கு இல்லையாதலும் ஒருதலையாகலின், இருதிறததாரையும் அறிதற்கு அவை குறியாயின.
இதனால், தககாரையும் தகவிலாரையும் அறியுமாறு கூறப்பட்டது.

திருக்குறள் 115 (கேடும் பெருக்கமும்) தொகு

கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி (05)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
கேடும் பெருக்கமும் இல் அல்ல= தீவினையாற் கேடும் நல்வினையாற் பெருக்கமும் யாவர்க்கு முன்னே அமைந்து கிடந்தன;
நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி= அவ்வாற்றை அறிந்து அவை காரணமாக மனததின்கட் கோடாமையே அறிவான் அமைந்தார்க்கு அழகாவது.
பரிமேலழகர் உரைவிளக்கம்
அவை காரணமாகக் கோடுதலாவது, அவை இப்பொழுது வருவனவாகக் கருதிக் கேடுவாராமையைக் குறித்தும் பெருக்கம் வருதலைக்குறித்தும் ஒருதலைக்கண்நிற்றல். அவற்றிற்குக் காரணம் பழவினையே; கோடுதலன்று என உண்மையுணர்ந்து நடுவுநிற்றல் சால்பினை யழகு செய்தலின், சான்றோர்க்கணி யென்றார்.

திருக்குறள் 116 (கெடுவல்யான் தொகு

கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச
நடுவொரீஇ யல்ல செயின்.
கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம்
நடுவு ஒரீஇ அல்ல செயின் (06)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின்= ஒருவன் தன்னெஞ்சம் நடுவுநிற்றலை யொழிந்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின்;
யான் கெடுவல் என்பது அறிக= அந்நினைவை யான் கெடக்கடவேன் என்று உணரும் உற்பாதமாக அறிக.
பரிமேலழகர் உரை விளககம்
நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், செயின் என்றார்.

திருக்குறள் 117 (கெடுவாக) தொகு

கெடுவாக வையா துலக நடுவாக
நன்றிக்கட் டங்கியான் றாழ்வு
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு(07)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு= நடுவாக நின்று அறததின்கண்ணே தங்கினவனது வறுமையை;
கெடுவாக வையாது உலகு= வறுமையென்று கருதார் உயர்ந்தோர்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
கெடுவென்பது முதனிலைத்தொழிற்பெயர். செல்வம் என்று கொள்ளுவர் என்பது குறிப்பெச்சம்.
இவை மூன்று பாட்டானும் முறையே கேடும் பெருக்கமும் கோடுதலான் வாரா வென்பதூஉம், கொடுதல் கேட்டிற்கு ஏதுவாம் என்பதூஉம், கோடாதவன் தாழ்வு கேடுஅன்று என்பதூஉம் கூறப்பட்டன.

திருக்குறள் 118 (சமன்செய்து) தொகு

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி.
சமன் செய்து சீர் தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி (08)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல்= முன்னே தான்சமனாகநின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்குந் துலாம்போல
அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி= இலக்கணங்களான் அமைந்து ஒருபக்கத்துக் கோடாமை சான்றோர்க்கு அழகாம்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
உவமையடையாகிய சமன்செய்தலும் சீர்தூக்கலும் பொருட்கண்ணும், பொருளடையாகிய அமைதலும் ஒருபாற் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி, சான்றோர் சீர்தூக்கலாவது, தொடைவிடைகளாற் கேட்டவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும், ஒருபாற் கோடாமையாவது, அவ்வுள்ளவாற்றை மறையாது பகை நொதுமல் நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க. இலக்கணங்களான் அமைதல் இருவழியும் ஏற்பன கொள்க.

திருக்குறள் 119 (சொற்கோட்ட) தொகு

சொற்கோட்ட மில்லது செப்ப மொருதலையா
வுட்கோட்ட மின்மை பெறின்.
சொல் கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உள் கோட்டம் இன்மை பெறின் (09)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
செப்பம் சொல் கோட்டம் இல்லது= நடுவுநிலைமையாவது, சொல்லின்கட் கோடுதல் இல்லாததாம்;
உள்கோட்டம் இன்மை ஒருதலையாப் பெறின்= அஃது அன்னதாவது, மனத்தின்கட் கோட்டம் இன்மையைத் திண்ணிதாகப் பெறின்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
'சொல்' ஊழான் அறுத்துச் சொல்லும் சொல். காரணம்பற்றி ஒருபாற் கோடாத மனத்தோடு கூடுமாயின், அறங்கிடந்தவாறு சொல்லுதல் நடுவுநிலைமையாம் எனவே, அதனோடு கூடாதாயின் அவ்வாறு சொல்லுதல் நடுவுநிலைமை அன்று என்பது பெறப்பட்டது.

திருக்குறள் 120 (வாணிகஞ்) தொகு

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தமபோற் செயின்
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தம போல் செயின் (10)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
பிறவும் தமபோல் பேணிச் செயின்= பிறர் பொருளையுந் தம் பொருள்போலப் பேணிச் செய்யின்;
வாணிகம் செய்வார்க்கு வாணிகம்= வாணிகஞ் செய்வார்க்கு நன்றாய வாணிகமாம்.
பரிமேலழகர் உரை விளக்கம்
பிறவுந் தமபோற் செய்தலாவது, கொள்வது மிகையுங் கொடுப்பது குறையுமாகாமல் ஒப்ப நாடிச் செய்தல்.
இப்பாட்டு மூன்றனுள், முன்னைய இரண்டும் அவையத்தாரை நோக்கின; ஏனையது வாணிகரை நோக்கிற்று, அவ்விருதிறத்தார்க்கும் இவ்வறம் வேறாகச்சிறந்தமையின்.