திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/126.நிறையழிதல்

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் காமத்துப்பால்- கற்பியல் தொகு

பரிமேலழகர் உரை தொகு

அதிகாரம் 126. நிறை அழிதல் தொகு

அதிகார முன்னுரை
அஃதாவது, தலைமகள் மனத்து அடக்கற்பாலனவற்றை வேட்கைமிகுதியான், அடக்கமாட்டாது வாய்விடுதல்; "நிறையெனப்படுவது மறைபிறர் அறியாமை" (கலித்.நெய்தல், 16.) என்றார், பிறரும். அஃது அழிதற்காரணம் நெஞ்சொடு கிளந்தமையின், இது நெஞ்சொடுகிளத்தலின் பின் வைக்கப்பட்டது.

குறள் 1251 ( காமக்கணிச்சி) தொகு

(நாணும் நிறையும் அழியாமை நீ ஆற்றல்வேண்டும் என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. )

காமக் கணிச்சி யுடைக்கு நிறையென்னு ( ) காமக் கணிச்சி உடைக்கும் நிறை என்னும்

நாணுத்தாழ் வீழ்த்த கதவு. (01) நாணுத் தாழ் வீழ்த்த கதவு.

[தொடரமைப்பு: நாணுத்தாழ் வீழ்த்த நிறை என்னும் கதவு, காமக் கணிச்சி உடைக்கும்.]

இதன்பொருள்
நாணுத்தாழ் வீழ்த்த நிறை என்னும் கதவு= நாணாகிய தாழினைக் கோத்த நிறையென்னும் கதவினை;
காமக் கணிச்சி உடைக்கும்= காமவேட்கையாகிய கணிச்சி முறியாநின்றது, இனி அவை நிற்றலும் இல்லை, யான் ஆற்றலும் இல்லை,

எ-று.

உரைவிளக்கம்
கணிச்சி- கூந்தாலி. நாண் உள்ளதுணையும், நிறையழியாதாகலின் அதனைத் தாழ் ஆக்கியும், அகத்துக் கிடந்தன பிறர் கொள்ளாமற் காத்தலின் நிறையைக் கதவாக்கியும், வலியதாய்த் தாமாக நீங்காத அவ்விரண்டனையும் ஒருங்கு நீக்கலின் தன் காமவுேட்கையைக் கணிச்சியாக்கியும் கூறினாள்.

குறள் 1252 ( காமமென) தொகு

( நெஞ்சின்கண் தோன்றிய காமம் நெஞ்சால் அடக்கப்படும் என்றாட்குச் சொல்லியது.)

காம மெனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை ( ) காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை

யாமத்து மாளுந் தொழில். (02) யாமத்தும் ஆளும் தொழில்.

[தொடரமைப்பு: யாமத்தும் என் நெஞ்சத்தைத் தொழி்ல் ஆளும், காமமென ஒன்றோ கண் இன்று. ]

இதன்பொருள்
யாமத்தும் என் நெஞ்சத்தைத் தொழில் ஆளும்= எல்லாரும் தொழில் ஒழியும் இடையாமத்தும் என் நெஞ்சத்தை ஒறுத்துத் தொழில்கொள்ளாநின்றது;
காமம் என ஒன்றோ கண் இன்று= ஆகலான் காமம் என்று சொல்லப்பட்ட ஒன்று கண்ணோட்டம் இன்றாய் இருந்தது, எ-று.
உரை விளக்கம்
'ஓ' என்பது இரக்கக் குறிப்பு. தொழிலின் கண்ணேயாடல்- தலைமகன்பாற் செலவிடுத்தல். தாயைப்பணிகோடல், உலகியல் அன்மையின் 'காமம் என ஒன்று' என்றும், அது தன்னைக் கொள்கின்றது அளவறியாது கோடலிற் 'கண்ணின்று' என்றும் கூறினாள். அடக்கப்படாமை கூறியவாறு.

குறள் 1253 ( மறைப்பேன்மன்) தொகு

(மகளிர் காமம் மறைக்கப்படும் என்றாட்குச் சொல்லியது. )

மறைப்பேன்மற் காமத்தை யானோ குறிப்பின்றித் ( ) மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பு இன்றித்

தும்மல்போற் றோன்றி விடும். (03) தும்மல் போல் தோன்றி விடும்.

[தொடரமைப்பு: காமத்தை யான் மறைப்பேன்மன், குறிப்பு இன்றித் தும்மல்போல் தோன்றி விடும்.]

இதன்பொருள்
காமத்தை யான் மறைப்பேன்மன்= இக்காமத்தை யான் என்னுள்ளே மறைக்கக் கருதுவேன்;
குறிப்பு இன்றித் தும்மல்போல் தோன்றிவிடும்= அதனால் என், இஃது என்கருத்தின் வாராது தும்மல்போல வெளிப்பட்டே விடாநின்றது,

எ-று.

உரை விளக்கம்
மன்- ஒழியிசைக்கண் வந்தது. ஓகாரம்- இரங்கற்கண் வந்தது. தும்மல் அடங்காதாற்போல அடங்குகின்றதில்லை என்பதாம்.

குறள் 1254 ( நிறையுடையே) தொகு

(இதுவுமது )

நிறையுடையே னென்பேன்மன் யானோவென் காம ( ) நிறையுடையேன் என்பேன்மன் யானோ என் காமம்

மறையிறந்து மன்று படும். (04) மறை இறந்து மன்று படும்.

[தொடரமைப்பு: யான் நிறையுடையேன் என்பேன்மன், என் காமம் மறை இறந்து மன்றுபடும்.]

இதன்பொருள்
யான் நிறையுடையேன் என்பேன்மன்= இன்றின் ஊங்கெ்ல்லாம் யான் என்னை நிறையுடையேன் என்று கருதியிருந்தேன்;
என் காமம் மறையிறந்து மன்றுபடும்= அதனால் என், இன்று என்காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வெளிப்படாநின்றது, எ-று.
உரை விளக்கம்
மன்னும் ஓவும் மேலவற்றின்கண் வந்தன. மன்றுபடுதல்- பலரும் அறிதல். இனி என்வரைத்தன்று என்பதாம்.

குறள் 1255 (செற்றார்பின் ) தொகு

(நம்மை மறந்தாரை நாமும் மறக்கற்பாலம் என்றாட்குச் சொல்லியது.)

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோ () செற்றார் பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்

யுற்ற ரறிவதொன் றன்று. (05) உற்றார் அறிவது ஒன்று அன்று.

[தொடரமைப்பு: செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை, காமநோய் உற்றார் அறிவது ஒன்றன்று. ]

இதன்பொருள்
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை= தம்மை அகன்றுசென்றார் பின் செல்லாது தாமும் அகன்றுநிற்கும் நிறையுடைமை;
காமநோய் உற்றார் அறிவது ஒன்றுஅன்று= காமநோயினை உறாதார் அறிவது ஒன்றன்றி உற்றார் அறிவது ஒன்றன்று, எ-று.
உரை விளக்கம்
இன்பதொடு கழியும் காலத்தைத் துன்பத்தொடு கழியுமாறு செய்தலின் செற்றார் என்றாள். பின்சேறல்- மனத்தால் இடைவிடாது நினைத்தல். பெருந்தகைமை ஈண்டு ஆகுபெயர். காமநோயுறாதார்- மானமுடையார். நன்று என உணரார்மாட்டும் சென்றே நிற்கும், யான் அறிவது ஒன்றன்று என்பதாம்.

குறள் 1256 (செற்றவர்பின் ) தொகு

(இதுவுமது )

செற்றவர் பின்சேறல் வேண்டி யளித்தரோ ( ) செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்து அரோ

வெற்றென்னை யுற்ற துயர். (06) எற்று என்னை உற்ற துயர்.

[தொடரமைப்பு: செற்றவர் பின் சேறல் வேண்டி, என்னை உற்ற துயர் எற்று அளித்தரோ.]

இதன்பொருள்
செற்றவர் பின் சேறல் வேண்டி= என்னை அகன்று சென்றார் பின்னே யான் சேறலை வேண்டுதலான்;
என்னை உற்ற துயர் எற்று அளித்தரோ= என்னை உற்றதுயர் எத்தன்மையது, சால நன்று, எ-று.
உரை விளக்கம்
'செற்றவர்' என்றது, ஈண்டும் அப்பொருட்டு. வேண்ட என்பது வேண்டி எனத்திரிந்து நின்றது. 'அளித்து' என்பது, இகழ்ச்சி்க் குறிப்பு. இக்காமநோய் யான் சொல்லவும் கேட்கவும் ஆவதொன்றன்று, சாலக்கொடிது என்பதாம்.

குறள் 1257 ( நாணென) தொகு

(பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனோடு நிறையழிவான் கூடிய தலைமகள், 'நீ புலவாமைக்குக் காரணம் யாது' என்ற தோழிக்குச் சொல்லியது. )

நாணென வொன்றோ வறியலங் காமத்தாற் ( ) நாண் என ஒன்று அறியலம் காமத்தான்

பேணியார் பெட்ப செயின். (07) பேணியார் பெட்ப செயின்.

[தொடரமைப்பு: பேணியார் காமத்தான் பெட்ப செயின், நாண் என ஒன்றோ அறியலம். ]

இதன்பொருள்
பேணியார் காமத்தான் பெட்ப செயின்= நம்மால் விரும்பப்பட்டவர் வந்து, காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்யுமளவின்;
நாண் என ஒன்றோ அறியலம்= நாண் என்று ஒன்றையும் அறியமாட்டேமாய் இருந்தேம், எ-று.
உரை விளக்கம்
'பேணியார்' எனச் செயப்படுபொருள் வினைமுதல்போலக் கூறப்பட்டது. விரும்பியன- வேட்கைமிகவினாற் கருதியிருந்த கலவிகள். நாண்- பரத்தையர் தோய்ந்த மார்பைத் தோய்தற்கு நாணுதல். ஒன்று என்பது, ஈண்டுச் சிறிது என்னும் பொருட்டு. இழிவு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. நிறையழிவான் அறியாது கூடிய தன்குற்றம் நோக்கி, அவளையும் உளப்படுத்தாள்.

குறள் 1258 ( பன்மாயக்) தொகு

( இதுவுமது )

பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம் ( ) பல் மாயக் கள்வன் பணி மொழி அன்றோ நம்

பெண்மை யுடைக்கும் படை. (08) பெண்மை உடைக்கும் படை.

[தொடரமைப்பு: நம் பெண்மை உடைக்கும் படை, பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோ. ]

இதன்பொருள்
நம் பெண்மை உடைக்கும் படை= நம் நிறையாகி அவர் அணை அழிக்கும் தானை;
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோ= பல பொய்களை வல்ல கள்வனுடைய தாழ்ந்த சொற்கள் அன்றோ; ஆனபின் அது நிற்குமாறு என்னை, எ-று.
உரை விளக்கம்
'பெண்மை' ஈண்டுத் தலைமை பற்றி நிறைமேல் நின்றது. வந்தால் புலக்கக்கடவேம் என்றும், புலந்தால் அவன் சொற்களானும், செயல்களானும் நீங்கேம் என்றும், இவை முதலாக எண்ணிக்கொண்டிருந்தன யாவும் காணாது, கலவிக்கண் தன்னினும் முற்படும் வகை வந்து தோன்றினான் என்பாள், 'பன்மாயக் கள்வன்' என்றாள். பணிமொழி- நம்மினும் தான் அன்புமிகுதியுடையனாகச் சொலலும் சொற்கள். அவன் அத்தன்மையனாக, சொற்கள் அவையாக, நம் நிறை அழியாது ஒழியுமோ என்பதாம்.

குறள் 1259 (புலப்பலென ) தொகு

(இதுவுமது )

புலப்ப லெனச்சென்றேன் புல்லினே னெஞ்சங் ( ) புலப்பல் எனச் சென்றேன் புல்லினேன் நெஞ்சம்

கலத்த லுறுவது கண்டு. (09) கலத்தல் உறுவது கண்டு.

[தொடரமைப்பு: புலப்பல் எனச் சென்றேன், நெஞ்சம் கலத்தலுறுவது கண்டு புல்லினேன். ]

இதன்பொருள்
புலப்பல் எனச் சென்றேன்= அவர் வந்தபொழுது புலக்கக்கடவேன் என்று கருதி முன் நில்லாது பிறிது ஓர் இடத்துப் போயினேன்;
நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு புல்லினேன்= போயும், என்னெஞ்சம் நிறையில்லாது அறைபோய் அவரோடு கலத்தல் தொடங்குதலை அறிந்து, இனி அது வாயாது என்று புல்லினேன், எ-று.
உரை விளக்கம்
வாயாமை- புலத்தற் கருவியாய நெஞ்சுதானே, கலத்தற் கருவியாய் நிற்றலின் அது முடியாமை.

குறள் 1260 (நிணந்தீ ) தொகு

( இதுவுமது )

நிணந்தீயி லிட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ () நிணம் தீயில் இட்டு அன்ன நெஞ்சினார்க்கு உண்டோ

புணர்ந்தூடி நிற்பே மெனல். (10) புணர்ந்து ஊடி நிற்பேம் எனல்.

[தொடரமைப்பு: நிணம் தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு, புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் உண்டோ. ]
]

இதன்பொருள்
நிணம் தீயில் இ்ட்டன்ன நெஞ்சினார்க்கு= நிணத்தைத் தீயின்கண்ணே இட்டால், அஃது உருகுமாறுபோலத் தம் காதலரைக் கண்டால் நிறையழிந்து உருகும் நெஞ்சினையுடைய மகளிர்க்கு;
புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் உண்டோ= அவர் புணர யாம் ஊடிப் பின்பு உணராது அந்நிலையே நிற்கக்கடவேம் என்று கருதுதல் உண்டாகுமோ, ஆகாது எ-று.
உரை விளக்கம்
புணர்தல்- ஈண்டு மிக நணுகுதல்; எதிர்ப்படலுமாம். புணர என்பது, புணர்ந்து எனத் திரிந்துநின்றது. யான் அத்தன்மையேன் ஆகலின் எனக்கு அஃது இல்லையாயிற்று என்பதாம்.