திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/110.குறிப்பறிதல்

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் காமத்துப்பால்- களவியல் தொகு

பரிமேலழகர் உரை தொகு

அதிகாரம் 110. குறிப்பறிதல் தொகு

அதிகார முன்னுரை
அஃதாவது, லைமகன் தலைமகள் குறிப்பினை அறிதலும், தோழி குறிப்பினை அறிதலும், அவள்தான் அவ்விருவர் குறிப்பினையும் அறிதலுமாம். தகையணங்குற்ற தலைமகன் தலைமகளைக் கூடுங்கால் இது வேண்டும் ஆகலி்ன் தகையணங்குறுத்தலின்பின் வைக்கப்பட்டது.

குறள் 1091 (இருநோக்கு ) தொகு

(தலைமகன் தலைமகள் உளப்பாட்டுக் குறிப்பினை அவள் நோக்கினான் அறிந்தது.)

இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு ( ) இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. (01) நோய் நோக்கு ஒன்று அந் நோய் மருந்து.

தொடரமைப்பு:
இவள் உண்கண் உள்ளது இருநோக்கு, ஒரு நோக்கு நோய் நோக்கு ஒன்று அந்நோய் மருந்து.

இதன்பொருள்
இவள் உண்கண் உள்ளது இரு நோக்கு= இவளுடைய உண்கண் அகத்ததாய நோக்கு இதுபொழுது என்மேல் இரண்டு நோக்காயிற்று;
ஒருநோக்கு நோய் நோக்கு ஒன்று அந்நோய் மருந்து= அவற்றுள் ஒருநோக்கு என்கண் நோய்செய்யும் நோக்கு, ஏனையது அந்நோய்க்கு மருந்தாய நோக்கு.
உரைவிளக்கம்
உண்கண்: மையுண்ட கண். நோய்செய்யும் நோக்கு, அவள் மனத்தினான் ஆய காமக்குறிப்பினை வெளிப்படுத்துகின்ற நோக்கு; மருந்தாய நோக்ககுத் தன்கண் நிகழ்கின்ற அற்பு நோக்கு; நோய் செய்யும் நோக்கினைப் பொதுநோக்கு என்பாரும் உளர்; அது நோய் செயின் கைக்கிளையாவதல்லது அகம் ஆகாமை அறிக. இவ்வருத்தம் தீரும் வாயிலும் உண்டாயிற்று என்பதாம்.

குறள் 1092 (கண்களவு ) தொகு

(இதுவும் அது)

கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற் ( ) கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தில்

செம்பாக மன்று பெரிது. (02) செம்பாகம் அன்று பெரிது.

தொடரமைப்பு:
கண் களவு கொள்ளும் சிறு நோக்கம், காமத்தில் செம்பாகம் அன்று பெரிது.

இதன்பொருள்
கண் களவு கொள்ளும் சிறு நோக்கம்= இவள் கண்கள் யான் காணாமல் என்மேல் நோக்குகின்ற அருகிய நோக்கம்;
காமத்தில் செம்பாகம் அன்று பெரிது= மெய்யுறுபுணர்ச்சியின் ஒத்த பாதியளவு அன்று, அதனினும் மிகும்.
உரை விளக்கம்
தான் நோக்கியவழி நாணி இறைஞ்சியும், நோக்காவழி உற்று நோக்கியும் வருதலால் 'களவுகொள்ளும்' என்றும், அஃது உளதாததல் காலம் சிறிதாகலின் 'சிறுநோக்கம்' என்றும், அஃது உளப்பாடுள்வழி நிகழ்வதாகலின் இனிப் புணர்தல் ஒருதலை என்பான் 'செம்பாகம் அன்று பெரிது' என்றும் கூறினான்.

குறள் 1093 (நோக்கினாள் ) தொகு

(நோக்கினானும், நாணினானும் அறிந்தது.)

நோக்கினா ணோக்கி யிறைஞ்சினா ளஃதவள் ( ) நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள்

யாப்பினு ளட்டிய நீர். (03) யாப்பினுள் அட்டிய நீர்.

தொடரமைப்பு:
நோக்கினாள், நோக்கி இறைஞ்சினாள், அஃது யாப்பினுள் அவள் அட்டிய நீர்.

இதன்பொருள்
நோக்கினாள்= யான் நோக்காவளவில் தான் என்னை அன்போடு நோக்கினாள்;
நோக்கி இறைஞ்சினாள்= நோக்கி ஒன்றனை யுட்கொண்டு நாணி இறைஞ்சினாள்;
அஃது யாப்பினுள் அவள் அட்டிய நீர்= அக்குறிப்பு இருவேம் இடையும் தோன்றிய அற்புப்பயிர் வளர அதன்கண் அவள் வார்த்த நீராயிற்று.
உரை விளக்கம்
'அஃது' என்னும் சுட்டுப்பெயர், அச்செய்கைக்கு ஏதுவாய குறிப்பின்மேன் நின்றது. யாப்பினான் ஆயதனை 'யாப்பு' என்றார். ஏகதேச உருவகம்.

குறள் 1094 (யானோக்குங் ) தொகு

(நாணினாலும் மகி்ழ்ச்சியினாலும் அறிந்தது.)

யானோக்குங் காலை நிலனோக்கு நோக்காக்காற் ( ) யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக் கால்

றானோக்கி மெல்ல நகும். (04) தான் நோக்கி மெல்ல நகும்.

தொடரமைப்பு:
யான் நோக்குங்காலை நிலன் நோக்கும், நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்.

இதன்பொருள்
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும்= யான் தன்னை நோக்குங்கால் தான் எதிர் நோக்காது இறைஞ்சி நிலத்தை நோக்காநிற்கும்;
நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்= அஃது அறிந்து யான் நோக்காக்கால் தான் என்னை நோக்கித் தன்னுள்ளே மகிழாநிற்கும்.
உரை விளக்கம்
மெல்ல: வெளி்ப்படாமல். மகிழ்ச்சியால் புணர்தற் குறிப்பு இனிது விளங்கும். மெல்ல நகும் என்பதற்கு முறுவலிக்கும் என்று உரைப்பாரும் உளர்.

குறள் 1095 (குறிக்கொண்டு ) தொகு

(இதுவும் அது.)

குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண் () குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண்

சிறக்கணித்தாள் போல நகும். (05) சிறக்கணித்தாள் போல நகும்.

தொடரமைப்பு:
குறிக்கொண்டு நோக்காமை அல்லால், ஒரு கண் சிறக்கணித்தாள் போல நகும்.

இதன்பொருள்
குறிக்கொண்டு நோக்காமை அல்லால்= நேரே குறிக்கொண்டு நோக்காத் துணையல்லது;
ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும்= ஒருகண்ணைச் சிறக்கணித்தாள் போல என்னை நோக்கிப் பின் தன்னுள்ளே மகிழாநிற்கும்.
உரை விளக்கம்
சிறக்கணித்தாள் என்பது செய்யுள் விகாரம். சிறங்கணித்தல்:சுருங்குதல். அதுதானும் வெளிப்பட நிகழாமையின் 'போல' என்றான். நோக்கி என்பது, சொல்லெச்சம். இனி இவளை எய்துதல் ஒருதலை என்பது குறிப்பெச்சம்.

குறள் 1096 (உறாஅதவர் ) தொகு

(தோழி சேட்படுத்தவழி அவள் குறிப்பறிந்த தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.)

உறாஅ தவர்போற் சொலினுஞ் செறாஅர்சொ ( ) உறாஅதவர் போல் சொலினும் செறாஅர் சொல்

லொல்லை யுணரப் படும். (06) ஒல்லை உணரப் படும்.

தொடரமைப்பு:
உறாஅதவர் போல் சொலினும், செறாஅர் சொல் ஒல்லை உணரப் படும்.

இதன்பொருள்
உறாஅதவர் போல் சொலினும்= புறத்து நொதுமலர்போலக் கடுஞ்சொல் சொன்னாராயினும்;
செறாஅர் சொல் ஒல்லை உணரப்படும்= அகத்துச் செறுதல் இலாதார் சொல் பிற்பயத்தல் குறையுற்றாரான் கடிதின் அறியப்படும்.
உரை விளக்கம்
கடுஞ்சொல் என்பது, இவ்விடம் காவல் மிகுதியுடைத்து, வரற்பாலீர் அல்லீர் என்றன் முதலாயின. 'செறார்' எனவே, அருளுடைமை பெறப்பட்டது. தன் குறை முடிக்கக்கருதியே சேட்படுக்கின்றமை குறிப்பான் அறிந்து, உலகியன்மேல் இட்டுக் கூறியவாறு. இதுவருகின்ற பாட்டிற்கும் ஒக்கும்.

குறள் 1097 (செறாஅச் ) தொகு

(இதுவுமது)

செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கு ( ) செறாஅச் சிறு சொல்லும் செற்றார் போல் நோக்கும்

முறாஅர்போன் றுற்றார் குறிப்பு. (07) உறாஅர் போன்று உற்றார் குறிப்பு.

தொடரமைப்பு:
செறாஅச் சிறு சொல்லும், செற்றார் போல் நோக்கும், உறாஅர் போன்று உற்றார் குறிப்பு.

இதன்பொருள்
செறாஅச் சிறுசொல்லும்= பின் இனிதாய் முன் இன்னாதாய சொல்லும்;
செற்றார்போல் நோக்கும்= அகத்துச் செறாதிருந்தே புறத்துச் செற்றார் போன்ற வெகுளிநோக்கும்;
உறாஅர் போன்று உற்றார் குறிப்பு= நொதுமலர் போன்று நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப்பற்றி வருவன.
உரை விளக்கம்
குறிப்பு ஆகுபெயர். இவை உள்ளே ஒருபயன் குறித்துச் செய்கின்றன; இயல்பல்லவாகலான், இவற்றிற்கு அஞ்சவேண்டா என்பதாம்.

குறள் 1098 (அசையியற் ) தொகு

(தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு தலைமகன் கூறியது.)

அசையியற் குண்டாண்டோ ரேஎர்யா னோக்கப் ( ) அசை இயற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்கப்

பசையினள் பைய நகும். (08) பசையினள் பைய நகும்.

தொடரமைப்பு:
யான் நோக்கப் பசையினள் பைய நகும்,அசையியற்கு ஆண்டு ஓர் ஏஎர் உண்டு.

இதன்பொருள்
யான் நோக்கப் பசையினள் பைய நகும்= என்னை அகற்றுகின்ற சொற்கு ஆற்றாது யான் இரந்து நோக்கியவழி அஃது அறிந்து நெகிழ்ந்து உள்ளே மெல்ல நகாநின்றாள்;
அசை இயற்கு ஆண்டு ஓர் ஏர் உண்டு= அதனால் நுடங்கிய இயல்பினை உடையாட்கு அந்நகையின்கண்ணே தோன்றுகின்றதோர் நன்மைக் குறிப்புண்டு.
உரை விளக்கம்
ஏர் ஆகுபெயர். அக்குறிப்பு இனிப் பழுதாகாது என்பதாம்.

குறள் 1099 (ஏதிலார்போலப் ) தொகு

(தோழி மதியுடம்படுவாள் தன்னுள்ளே சொல்லியது.)

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் ( ) ஏதிலார் போலப் பொது நோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே யுள. (09) காதலார் கண்ணே உள.

தொடரமைப்பு:
ஏதிலார் போலப் பொது நோக்கு நோக்குதல், காதலார் கண்ணே உள.

இதன்பொருள்
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்= முன் அறியாதார் போல ஒருவரை யொருவர் பொதுநோக்கத்தான் நோக்குதல்;
காதலார் கண்ணே உள= இக்காதலை உடையார்கண்ணே உளவாகாநின்றன.
உரை விளக்கம்
'பொதுநோக்கு': யாவர்மாட்டும் ஒருதன்மைத்தாய நோக்கு. நோக்குதல் தொழில் ஒன்றே யாயினும், இருவர்கண்ணும் நிகழ்தலானும், ஒருவர்கட்டானும் குறிப்பு வேறுபாட்டான் பலவாம் ஆகலானும், 'உள' எனப் பன்மையாற் கூறப்பட்டது. இருவரும் "மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சி போல, உள்ளத்துள்ளே மகிழ்" 1தலின், அதுபற்றிக் 'காதலார்' என்றும், அது புறத்து வெளிப்படாமையின் 'ஏதிலார் போல' என்றும் கூறினாள்.
1."ஏனல் காவல் இவளுமல்லள்" என்ற பாட்டு. இதனை இறையனார் அகப்பொருள், 8-ஆம் சூத்திரத்து உரையிலும், தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல் 23-ஆம் சூத்திரத்துரையிலும் காண்க.

குறள் 1100 (கண்ணொடு ) தொகு

(இதுவுமது)

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்க () கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய்ச் சொற்கள்

ளென்ன பயனு மில. (10) என்ன பயனும் இல.

தொடரமைப்பு:
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின், வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல.

இதன்பொருள்
கண்ணொடு கண்ணிணை நோக்கு ஒக்கின்= காமத்திற்குரிய இருவருள் ஒருவர் கண்களோடு ஒருவர் கண்கள் நோக்கல் ஒக்குமாயின்;
வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல= அவர் வாய்மைதோன்றச் சொல்லுகின்ற வாய்ச்சொற்கள் ஒரு பயனும் உடையவல்ல.
உரை விளக்கம்
நோக்கால் ஒத்தல் காதல் நோக்கினவாதல். 'வாய்ச்சொற்கள்': மனத்தின்கண் இன்றி, வாயளவில் தோன்றுகின்ற சொற்கள். இருவர் சொல்லும் கேட்டு உலகியன்மேல் வைத்துக் கூறியவாறு. இருவர் சொல்லுமாவன அவள் புனங்காவன்மேலும், அவன் வேட்டத்தின்மேலும் சொல்லுவன. பயனில் சொற்கள் ஆகலின், இவை கொள்ளப்படா என்பதாம். இவை புணர்தல் நிமி்த்தம்.