திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/103.குடிசெயல்வகை

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- ஒழிபியல் தொகு

பரிமேலழகர் உரை தொகு

அதிகாரம் 103. குடிசெயல்வகை தொகு

அதிகார முன்னுரை
அஃதாவது, ஒருவன் தான் பிறந்தகுடியை உயரச்செய்தலின் திறம். இது தாழ்வின்கண் நாணுதலை உடையார்க்கு உளதாவது ஆகலின் நாணுடைமையின் பின் வைக்கப்பட்டது.

குறள் 1021 (கருமஞ் ) தொகு

கருமஞ் செயவொருவன் கைதூவே னென்னும் () கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும்

பெருமையிற் பீடுடைய தில். (01) பெருமையின் பீடு உடையது இல்.

தொடரமைப்பு: கருமம் செயக் கைதூவேன் என்னும் பெருமையின், ஒருவன் பீடு உடையது இல்.

இதன்பொருள்
கருமம் செயக் கைதூவேன் என்னும் பெருமையின்= தன் குடிசெய்தற்பொருட்டுத் தொடங்கிய கருமம் முடியாமையின் எண்ணிய கருமம் செய்தற்கு யான் கையொழியேன் என்னும் ஆள்வினைப் பெருமைபோல; ஒருவன் பீடு உடையது இல்= ஒருவனுக்கு மேம்பாடுடைய பெருமை பிறிதில்லை.
உரை விளக்கம்
குடிசெய்தற்கு என்பது, அதிகாரத்தான் வந்தது. பலவகைத்தாய கருமச் செயலான், செல்வமும் புகழும் எய்திக் குடி உயருமாகலின், 'பீடுடையது இல்' என்றார். குடிசெய்தற் கருமமே நடத்தலால், தன் கருமம் செய்ய என்றும், பிறர் கருமம் செய்ய என்றும் உரைப்பாருமுளர்; தன் கருமமும் அதுவேயாகலானும், பிறர் ஏவல் செய்தல் தலைமை அன்மையானும் அவை உரையன்மை அறிக்.

குறள் 1022(ஆள்வினையு ) தொகு

ஆள்வினையு மான்ற வறிவு மெனவிரண்டி () ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்

னீள்வினையா னீளுங் குடி. (02) நீள் வினையான் நீளும் குடி.

தொடரமைப்பு: ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள் வினையான், குடி நீளும்.

இதன்பொருள்
ஆள்வினையும் ஆன்றஅறிவும் என இரண்டின் நீள்வினையான்= முயற்சியும், நிறைந்த அறிவும் என்ற சொல்லப்பட்ட இரண்டினையும் உடைய இடையறாத கருமச்செயலால்; குடி நீளும்= ஒருவன் குடி உயரும்.
உரை விளக்கம்
நிறைதல்: இயற்கையறிவு, செயற்கையறிவோடு கூடி நிரம்புதல். 'ஆள்வினை' மடி புகுதாமற்பொருட்டு. 'ஆன்ற அறிவு' உயர்தற்கு ஏற்ற செயல்களும், அவை முடிக்குந் திறமும் பிழையாமல் எண்ணுதற் பொருட்டு.
இவை இரண்டு பாட்டானும் அச்செயற்குக் காரணம் கூறப்பட்டது.

குறள் 1023 (குடிசெய்வல் ) தொகு

குடிசெய்வ லென்னு மொருவற்குத் தெய்வ () குடி செய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும். (03) மடி தற்றுத் தான் முந்துறும்.

தொடரமைப்பு: குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் , தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும்.

இதன்பொருள்
குடி செய்வல் என்னும ஒருவற்கு= என் குடியினை உயரச்செய்யக் கடவேன் என்றுகொண்டு அதற்கு ஏற்ற கருமங்களின் முயலும் ஒருவனுக்கு; தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும்= தெய்வம் ஆடையைத் தற்றுக்கொண்டு தான் முந்துற்று நிற்கும்.
உரை விளக்கம்
முயற்சியை அதன் காரணத்தாற் கூறினார். தற்றுதல்: இறுக உடுத்தல். முன்நடப்பார்செயல் நியதிமேல் ஏற்றப்பட்டது.

குறள் 1024 (சூழாமற்றானே ) தொகு

சூழாமற் றானே முடிவெய்துந் தங்குடியைத் () சூழாமல் தானே முடிவு எய்தும் தம் குடியைத்

தாழா துஞற்று பவர்க்கு. (04) தாழாது உஞற்றுபவர்க்கு.

தொடரமைப்பு: தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு, சூழாமல் தானே முடிவு எய்தும்.

இதன்பொருள்
தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு= தம் குடிக்கு ஆம் வினையை விரைந்து முயல்வார்க்கு; சூழாமல் தானே முடிவு எய்தும்= அவ்வினை முடிக்குந்திறம் அவர் சூழவேண்டாமல் தானே முடிவு எய்தும்.
உரை விளக்கம்
குடி ஆகுபெயர். தெய்வம் முந்துறுதலான் பயன் கூறியவாறு.
இவை இரண்டு பாட்டானும், அதற்குத் தெய்வம் துணையாதல் கூறப்பட்டது.

குறள் 1025 (குற்றமிலனாய் ) தொகு

குற்ற மிலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் () குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்று முலகு. (05) சுற்றமாச் சுற்றும் உலகு.

தொடரமைப்பு: குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானைச், சுற்றமாச் சுற்றும் உலகு.

இதன்பொருள்
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானை= குற்றமாயின செய்யாது தன் குடியை உயரச்செய்து ஒழுகுவானை; சுற்றமாச் சுற்றும் உலகு= அவனுக்குச் சுற்றமாக வேண்டித் தாமே சென்று சூழ்வர் உலகத்தார்.
உரை விளக்கம்
குற்றமாயின, அற நீதிகட்கு மறுதலையாய செயல்கள். தாமும் பயன் எய்தல் நோக்கி, யாவரும் சென்று சார்வர் என்பதாம்.

குறள் 1026(நல்லாண்மை ) தொகு

நல்லாண்மை யென்ப தொருவற்குத் தான்பிறந்த () நல் ஆண்மை என்பது ஒருவற்குத் தான் பிறந்த

வில்லாண்மை யாக்கிக் கொளல். (06) இல் ஆண்மை ஆக்கிக் கொளல்.

தொடரமைப்பு: ஒருவற்கு நல்லாண்மை என்பது, தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

இதன்பொருள்
ஒருவற்கு நல்லாண்மை என்பது= ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று உயர்த்துச் சொல்லப்படுவது; தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்= தான் பிறந்த குடியினை ஆளும் தன்மையைத் தனக்கு உளதாக்கிக் கோடல்.
உரை விளக்கம்
போர்த் தொழிலின் நீக்குதற்கு 'நல்லாண்மை' என விசேடித்தார். குடியினை ஆளும் தன்மை: குடியில் உள்ளாரை உயரச்செய்து தன்வழிப்படுத்தல். அதனைச் செய்துகோடல், நல்லாண்மையாமாறு வருகின்ற பாட்டான் பெறப்படும்.

குறள் 1027 (அமரகத்து ) தொகு

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்து () அமர் அகத்து வன்கண்ணர் போலத் தமர் அகத்தும்

மாற்றுவார் மேற்றே பொறை. (07) ஆற்றுவார் மேற்றே பொறை.

தொடரமைப்பு: அமரகத்து வன்கண்ணர் போலத், தமரகத்தும் பொறை ஆற்றுவார் மேற்றே.

இதன்பொருள்
அமர் அகத்து வன்கண்ணர் போல= களத்தின்கண் சென்றார் பலராயினும் போர்தாங்குதல் வன்கண்ணர்மேலது ஆனாற்போல; தமரகத்தும் பொறை ஆற்றுவார் மேற்றே= குடியின்கண் பிறந்தார் பலராயினும், அதன் பாரம்பொறுத்தல் அது வல்லார் மேலதாம்.
உரை விளக்கம்
பொருட்கு ஒக்க வேண்டும் சொற்கள் உவமைக்கண் வருவிக்கப்பட்டன. நன்கு மதிக்கப்படுவார் அவரே என்பதாம்.
இவை மூன்று பாட்டானும், அது செய்வார் எய்தும் சிறப்புக் கூறப்பட்டது.

குறள் 1028 (குடிசெய்வார்க் ) தொகு

குடிசெய்வார்க் கில்லை பருவ மடிசெய்து () குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து

மானங் கருதக் கெடும். (08) மானம் கருதக் கெடும்.


தொடரமைப்பு: மடி செய்து மானம் கருதக் கெடும், குடி செய்வார்க்குப் பருவம் இல்லை.

இதன்பொருள்
மடி செய்து மானம் கருதக் கெடும்= தம் குடியினை உயரச்செய்வார், அச்செயலையே நோக்காது காலத்தை நோக்கி மடியினைச் செய்துகொண்டு, மானத்தையும் கருதுவாராயின் குடி கெடும்; குடி செய்வார்க்குப் பருவம் இல்லை= ஆகலான், அவர்க்குக் காலநியதி இல்லை.
உரை விளக்கம்
காலத்தை நோக்கி மடிசெய்தல்: வெயில், மழை, பனி என்பன உடைமை நோக்கிப் பின்னர்ச் செய்தும் என்று ஒழிந்திருத்தல். மானம் கருதுதல்: இக்குடியில் உள்ளார் யாவரும் இன்பமுற இக்காலத்துத் துன்பமுறுவேன் யானோ என்று உட்கோடல். மேல், "இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது"1 என்றது உட்கொண்டு, இவர்க்கும் வேண்டுமோ என்று கருதினும் அது கருதற்க என்று மறுத்தவாறு.

1. குறள், 481.

குறள் 1029 (இடும்பைக்கே) தொகு

இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக் () இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்

குற்ற மறைப்பா னுடம்பு. (09) குற்றம் மறைப்பான் உடம்பு.

தொடரமைப்பு:குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு, இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ

இதன்பொருள்
குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு= மூவகைத் துன்பமும் உறற்பாலதாய தன் குடியை அவை உறாமல் காக்க முயல்வானது உடம்பு; இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ= அம்முயற்சித் துன்பத்திற்கே கொள்கலமாம் அத்துணையோ, அஃது ஒழிந்து இன்பத்திற்காதல் இல்லையோ?
உரை விளக்கம்
"உறைப்பெயல் ஓலை போல, மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே"2. என்புழியும் மறைத்தல் இப்பொருட்டாயிற்று. என் குடிமுழுதும் இன்புற்று உயரவே நான் இருமையும் எய்துதலான் இம்மெய்வருத்தம் மாத்திரம் எனக்கு நன்று, என்று முயலும் அறிவுடையான் அஃது ஒருஞான்றும் மொழியாமை நோக்கி, 'இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ' என்றார். இது குறிப்பு மொழி.
இவை இரண்டு பாட்டானும், அவர் அது செய்யும் இயல்பு கூறப்பட்டது.

2. புறநானூறு, 260.

குறள் 1030 (இடுக்கண்கால் ) தொகு

இடுக்கண்கால் கொன்றிட வீழு மடுத்தூன்று () இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும்

நல்லா ளிலாத குடி. (10) நல் ஆள் இலாத குடி.

தொடரமைப்பு: இடுக்கண் கால் கொன்றிட வீழும், அடுத்து ஊன்றும் நல் ஆள் இலாத குடி.

இதன்பொருள்
இடுக்கண் கால் கொன்றிட வீழும்= துன்பமாகிய நவியம் புகுந்து தன் முதலை வெட்டிச் சாய்க்க ஒரு பற்றின்றி வீழாநிற்கும்; அடுத்து ஊன்றும் நல்லாள் இலாத குடி= அக்காலத்தும் பற்றாவன கொடுத்துத் தாங்கவல்ல நல்ல ஆண்மகன் பிறவாத குடியாகிய மரம்.
உரை விளக்கம்
முதல்: அதன் வழிக்குரியார். வளர்ப்பாரைப் பெற்றுழி வளர்ந்துபயன்படுதலும் அல்லாவழிக் கெடுதலும் உடைமையின், மரமாக்கினார்; "தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளன்ன, ஓங்குகுல நையவதன் உட்பிறந்த வீரர், தாங்கல் கடன்"3என்றார் பிறரும். இது குறிப்புருவகம்.
இதனான் அவர் இல்லாத குடிக்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.

3. சீவகசி்ந்தாமணி- காந்தருவதத்தையார் இலம்பகம், 6.