திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/71.குறிப்பறிதல்

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- அங்கவியல் தொகு

பரிமேலழகர் உரை தொகு

அதிகாரம் 71. குறிப்பறிதல் தொகு

அதிகார முன்னுரை
அஃதாவது, அரசர்கருதிய அதனை அவர் கூறாமல் அறிதல். இது மன்னரைச் சேர்ந்து ஒழுகுதற்கு இன்றியமையா தாகலின், அதன்பின் வைக்கப்பட்டது.

குறள் 701 (கூறாமை) தொகு

கூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்று () கூறாமை நோக்கிக் குறிப்பு அறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக் கணி. () மாறா நீர் வையக்கு அணி.

இதன்பொருள்
குறிப்புக் கூறாமை நோக்கி அறிவான்= அரசனால் குறித்த கருமத்தை அவன் கூறவேண்டாவகை அவன் முகத்தானும் கண்ணானும் நோக்கி அறியும் அமைச்சன்; எஞ்ஞான்றும் மாறா நீர் வையக்கு அணி= எஞ்ஞான்றும் வற்றாத நீரால் சூழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஓர் ஆபரணமாம்.
உரை விளக்கம்
ஒட்பம் உடையவனாய் எல்லார்க்கும் அழகுசெய்தலான், 'வையக்கணி' என்றார். 'குறிப்பு'ம் 'வைய'மும் ஆகுபெயர். வையத்திற்கு என்பது விகாரப்பட்டு நின்றது.

குறள் 702 (ஐயப்படா) தொகு

ஐயப் படாஅ தகத்த துணர்வானைத் () ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்

தெய்வத்தோ டொப்பக் கொளல். (01) தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.

இதன்பொருள்
அகத்தது ஐயப்படாஅது உணர்வானை= ஒருவன் மனத்தின்கண்நிகழ்வதனை ஐயப்படாது ஒருதலையாக உணரவல்லானை; தெய்வத்தோடு ஒப்பக் கொளல்= மகனே ஆயினும், தெய்வத்தோடு ஒப்ப நன்கு மதிக்க.
உரை விளக்கம்
உடம்பு முதலியவற்றான் ஒவ்வான் ஆயினும், பிறர் நினைத்தது உணரும் தெய்வத்தன்மை உடைமையின் 'தெய்வத்தோடொப்ப' என்றார்.

குறள் 703 (குறிப்பிற்) தொகு

குறிப்பிற் குறிப்புணர் வாரை யுறுப்பினுள் () குறிப்பின் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள்

யாது கொடுத்துங் கொளல். (03) யாது கொடுத்தும் கொளல்.

இதன்பொருள்
குறிப்பின் குறிப்பு உணர்வாரை= தம் குறிப்பு நிகழுமாறு அறிந்து; அதனான் பிறர் குறிப்பு அறியும் தன்மையாரை; உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்= அரசர் தம் உறுப்பினுள் அவர் வேண்டுவது ஒன்றனைக் கொடுத்தாயினும், தமக்குத் துணையாகக் கொள்க.
உரை விளக்கம்
உள்நிகழு நெறி யாவர்க்கும் ஒத்தலின், பிறர் குறிப்புஅறிதற்குத் தம் குறி்ப்புக் கருவியாயிற்று. உறுப்புக்களாவன: பொருளும், நாடும், யானை குதிரைகளும் முதலிய புறத்துறுப்புக்கள். இதற்குப் பிறர் குறிப்பானே அவர் மனக்குறிப்பு உணர்வாரை# என்று உரைப்பாரும் உளர்.
இவை மூன்று பாட்டானும் குறிப்பறிவாரது சிறப்புக் கூறப்பட்டது.
#. மணக்குடவர்.

குறள் 704 (குறித்தது) தொகு

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை () குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை

யுறுப்போ ரனையரால் வேறு. (04) உறுப்பு ஓர்அனையரால் வேறு.

இதன்பொருள்
குறித்தது கூறாமைக் கொள்வாரோடு= ஒருவன் மனத்துக் கருதிய அதனை அவன் கூறவேண்டாமல் அறியவல்லாரோடு; ஏனை உறுப்பு ஓரனையர்= மற்றை மாட்டாதார் உறுப்பால் ஒருதன்மையாராக ஒப்பாராயினும்; வேறு= அறிவான் வேறு.
உரை விளக்கம்
கொள்ளாதார் என்பதூஉம், ஆயினும் என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. சிறந்த அறிவின்மையின், விலங்கு என்னும் கருத்தான் 'வேறு' என்றார்.

குறள் 705 (குறிப்பிற்) தொகு

குறிப்பிற் குறிப்புணரா வாயி னுறுப்பினு () குறிப்பின் குறிப்பு உணராவாயின் உறுப்பினுள்

ளென்ன பயத்தவோ கண். (05) என்ன பயத்தவோ கண்.

இதன்பொருள்
குறிப்பின் குறிப்பு உணராவாயின்= குறித்தது காணவல்ல தம் காட்சியாற் பிறர் குறிப்பினை உணரமாட்டாவாயின்; உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ= ஒருவன் உறுப்புக்களுள் சிறந்த கண்கள் வேறென்ன பயனைச் செய்வன?
உரை விளக்கம்
முதற்கண் 'குறிப்பு' ஆகுபெயர். குறிப்பறிதற்கண் துணையாதல் சிறப்புப் பற்றி உயிரது உணர்வு கண்மேல் ஏற்றப்பட்டது. அக்கண்களால் பயனி்ல்லை என்பதாம்.
இவை இரண்டு பாட்டானும் குறிப்பு அறியாரது இழிபு கூறப்பட்டது.

குறள் 706 (அடுத்தது) தொகு

அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங் () அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்

கடுத்தது காட்டு முகம். (06) கடுத்தது காட்டும் முகம்.

இதன்பொருள்
அடுத்தது காட்டும் பளிங்குபோல்= தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்குபோல; நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும்= ஒருவன் நெஞ்சத்து மிக்கதனை அவன் முகம்தானே கொண்டுகாட்டும்.
உரை விளக்கம்
'அடுத்தது' என்பது ஆகுபெயர். 'கடுத்தது' என்பது கடி என்னும் உரிச்சொல் அடியாய் வந்த தொழிற்பெயர். உவமை ஒருபொருள் பிறிதொரு பொருளின் பண்பைக் கொண்டு தோற்றுதலாகிய தொழில் பற்றிவந்தது.

குறள் 707 (முகத்தின்) தொகு

முகத்தின் முதுக்குறைந்த துண்டோ வுவப்பினுங் () முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்

காயினுந் தான்முந் துறும். (07) காயினும் தான் முந்துறும்.

இதன்பொருள்
உவப்பினும் காயினும் தான் முந்துறும்- உயிர் ஒருவனை உவத்தலானும், காய்தலானும்உறின், தானறிந்து அவற்றின்கண் அதனின் முற்பட்டு நிற்கும்ஆகலான்; முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ- முகம்போல அறிவு மிக்கது பிறிதுண்டோ? இல்லை.
உரை விளக்கம்
உயிர்க்கே அறிவுள்ளது, ஐம்பூதங்களான் இயன்ற முகத்திற்கு இல்லை என்பாரை நோக்கி, உயிரது கருத்தறிந்து அஃது உவக்குறின் மலர்ந்தும் காய்வுறின் கருகியும் வரலான் உண்டென மறுப்பார் போன்று குறிப்பறிதற்குக் கருவி கூறியவாறு.

குறள் 708 (முகநோக்கி) தொகு

முகநோக்கி நிற்க வமையு மகநோக்கி () முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி

யுற்ற துணர்வார்ப் பெறின். (08) உற்றது உணர்வார்ப் பெறின்.

இதன்பொருள்
அகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின்- குறையுறுவானும் தன் மனத்தைக் குறிப்பான்அறிந்து தானுற்ற அதனைத் தீர்ப்பாரைப்பெறின்; முகம் நோக்கி நிற்க அமையும்- அவர் தன் முகம் நோக்கும் வகை, தானும் அவர் முகநோக்கி அவ்வெல்லைக்கண் நிற்க அமையும்.
உரை விளக்கம்
'உணர்வார்' எனக் காரியத்தைக் காரணம்ஆக்கிக் கூறினார். அவ்வெல்லையைக் கடந்து சொல்லுமாயின் இருவருக்கும் சிறுமையாகலின், அது வேண்டா என்பதாம். குறையுறுவான் இயல்பு கூறுவார்போன்று கருவி கூறியவாறு.
இவை மூன்று பாட்டானும் குறிப்பறிதற்கருவி முகம் என்பது கூறப்பட்டது.

குறள் 709 (பகைமையுங்) தொகு

பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்குங் கண்ணின் () பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின்

வகைமை யுணர்வார்ப் பெறின். (09) வகைமை உணர்வார்ப் பெறின்.

இதன்பொருள்
கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்= வேந்தர்தம் நோக்கு வேறுபாட்டின் தன்மையை அறியவல்ல அமைச்சரைப் பெறின்; பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும்- அவர்க்கு மனத்துக்கிடந்த பகைமையையும், ஏனைக் கேண்மையையும் வேற்று வேந்தர் சொல்லிற்றிலர் ஆயினும் அவர் கண்களே சொல்லும்.
உரை விளக்கம்
இறுதிக்கட் 'கண்' ஆகுபெயர். நோக்குவேறுபாடாவன, வெறுத்த நோக்கமும், உவந்த நோக்கமும். உணர்தல் அவற்றை அவ்வக் குறிகளான் அறிதல்.

குறள் 710 (நுண்ணிய) தொகு

நுண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்காற் () நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணுங்கால்

கண்ணல்ல தில்லை பிற. (10) கண் அல்லது இல்லை பிற.

இதன்பொருள்
நுண்ணியம் என்பார் அளக்கும் கோல்- யாம் நுண்ணறிவு உடையேம் என்று இருக்கும் அமைச்சர் அரசர் கருத்தினை அளக்கும் கோலாவது; காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற- ஆராயுமிடத்து அவர்கண்ணல்லது பிற இல்லை.
உரை விளக்கம்
அறிவின் உண்மை அஃதுடையார்மேல் ஏற்றப்பட்டது. இங்கிதம், வடிவு, தொழில், சொல் என்பன முதலாகப் பிறர் கருத்தளக்கும் அளவைகள் பல. அவையெல்லாம் முன்னறிந்தவழி அவரான் மறைக்கப்படும். நோக்கம் மனத்தொடு கலத்தலான் ஆண்டு மறைக்கப் படாது என்பதுபற்றி, அதனையே பிரித்துக் கூறினார். இனி அலைக்குங்கோல் என்று பாடம்ஓதி, நூண்ணியம் என்றிருக்கும் அமைச்சரை அலைக்கும் கோலாவது கண்ணென உரைத்து, தன் வெகுளி நோக்கால் அவர் வெகுடற் குறிப்பறிக என்பது கருத்தாக்குவாரும் உளர்.
இவை இரண்டு பாட்டானும் நுண்கருவி நோக்கு என்பது கூறப்பட்டது.