திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/129.புணர்ச்சிவிதும்பல்

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் காமத்துப்பால்- கற்பியல் தொகு

பரிமேலழகர் உரை தொகு

அதிகாரம் 129. புணர்ச்சி விதும்பல் தொகு

அதிகார முன்னுரை
அஃதாவது, தலைமகனும் தலைமகளும் புணர்ச்சிக்கண்ணே விரைதல். மேற்புணர்ச்சி மிகுதிபற்றித் தலைமகன் பிரிதற் குறிப்பு அறிவுறுத்த தலைமகள் அவன்மாட்டே நிகழாது வேட்கை மிகவினாற் தன்கண்ணே நிகழ்தலான், இது குறி்ப்பறிவுறுத்தலின் பின் வைக்கப்பட்டது.

குறள் 1281 (உள்ளக்களி ) தொகு

( 'பிரிதற் குறிப்பினன் ஆகியானோடு நீ புலவாமைக்குக் காரணம் யாது', என நகையாடிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.)

உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங் ( ) உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

கள்ளுக்கில் காமத்திற் குண்டு. (01) கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு.

[தொடரமைப்பு: உள்ளக் களித்தலும், காண மகிழ்தலும், கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு.]

இதன்பொருள்
உள்ளக் களித்தலும்= நினைந்த துணையானே களிப்பு எய்தலும்;
காண மகிழ்தலும்= கண்ட துணையானே மகிழ்வு எய்தலும்;
கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு= கள்ளுண்டார்க்கு இல்லை, காமம் உடையார்க்கு உண்டு, எ-று.
உரைவிளக்கம்
களித்தல்- உணர்வு அழியாதது. மகிழதல்- அஃது அழிந்தது. இவ்விரண்டும் உண்டுழியல்லது இன்மையின் கள்ளுக்குஇல் என்றாள். உண்டு என்பது இறுதிவிளக்கு. அப்பெற்றித்தாய காமம் உடைய யான் புலத்தல் யாண்டையது என்பதாம்.

குறள் 1282 ( தினைத்துணையும்) தொகு

(இதுவுமது )

தினைத்துணையு மூடாமை வேண்டும் பனைத்துணையுங் ( ) தினைத் துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும்

காம நிறைய வரின். (02) காமம் நிறைய வரின்.

[தொடரமைப்பு: காமம் பனைத்துணையும் நிறைய வரின், தினைத்துணையும் ஊடாமை வேண்டும்.]

இதன்பொருள்
காமம் பனைத்துணையும் நிறைய வரின்= மகளிர்க்குக் காமம் பனையளவினும் மிக உண்டாமாயின்;
தினைததுணையும் ஊடாமை வேண்டும்= அவரால், தங்காதலரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை வேண்டப்படும், எ-று.
உரை விளக்கம்
'பனைத் துணையும்' என்புழி, ஐந்தன் உருபு விகாரத்தான் தொக்கது. ஊடின் வருத்தம் மிகும் எனப் பிறர்க்கு உறுதி கூறுவாள் போன்று, தன் விதுப்புக் கூறியவாறு.

குறள் 1283 ( பேணாதுபெட்ப) தொகு

(இதுவுமது )

பேணாது பெட்பவே செய்யினுங் கொண்கனைக் ( ) பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்

காணா தமையல கண். (03) காணாது அமையல கண்.

[தொடரமைப்பு: பேணாது பெட்பவே செய்யினும், கொண்கனைக் காணாது கண் அமையல.]

இதன்பொருள்
பேணாது பெட்பவே செய்யினும்= நம்மை அவமதித்துத் தான் வேண்டியனவே செய்யுமாயினும்;
கொண்கனைக் கண் காணாது அமையல= கொண்கனை என்கண்கள் காணாது அமைகின்றன இல்லை, எ-று.
உரை விளக்கம்
தன்விதுப்புக் கண்கள் மேல் ஏற்றப்படடது. அத்தன்மையேன் புலக்குமாறு என்னை என்பதாம்.

குறள் 1284 ( ஊடற்கண்) தொகு

(இதுவுமது )

ஊடற்கண் சென்றேன்மற் றோழி யதுமறந்து ( ) ஊடற்கண் சென்றேன்மன் தோழி அது மறந்து

கூடற்கட் சென்றதென் னெஞ்சு. (04) கூடல்கண் சென்றது என் நெஞ்சு.

[தொடரமைப்பு: தோழி ஊடற்கண் சென்றேன்மன், என் நெஞ்சு அது மறந்து கூடற்கண் சென்றது.]

இதன்பொருள்
தோழி= தோழீ;
ஊடற்கண் சென்றேன்= காதலரைக் காணாமுன் அவர்செய்த தவற்றைத் தன்னொடுநினைந்து யான் அவரோடு ஊடுதற்கண்ணே சென்றேன்;
என்நெஞ்சு அதுமறந்து கூடற்கண் சென்றது= கண்டபின் என் நெஞ்சு அதனை மறந்து கூடுதற்கண்ணே சென்றது எ-று.
உரை விளக்கம்
சேறல்நிகழ்தல் நினைத்த நெஞ்சிற்கும் ஒத்தலின், 'அது மறந்து' என்றாள். அச்செலவாற் பயன் என் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. அவ்வெல்லையிலே நெஞ்சு அறைபோகலான், அது முடிந்ததில்லை என்பதாம்.

குறள் 1285 ( எழுதுங்காற்) தொகு

( இதுவுமது)

எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோற் கொண்கன் () எழுதும்கால் கோல் காணாக் கண்ணே போல் கொண்கன்

பழிகாணேன் கண்ட விடத்து. (05) பழி காணேன் கண்ட இடத்து.

[தொடரமைப்பு: எழுதுங்கால் கோல் காணாக் கண்ணே போல், கொண்கன் பழி கண்டவிடத்துக் காணேன்.]

இதன்பொருள்
எழுதுங்கால் கோல் காணாக் கண்ணேபோல்= முன்னெல்லாங் கண்டிருந்தும் எழுதும் காலத்து அஞ்சனக் கோலின்இயல்பு காணமாட்டாத கண்ணேபோல்;
கொண்கன் பழிகண்டவிடத்துக் காணேன்= கொண்கனது தவறு, காணாதவிடத்தெல்லாம் கண்டிருந்து, அவனைக் க்ணடவிடத்துக் காண மாட்டேன், எ-று.
உரை விளக்கம்
கோ்ல ஆகுபெயர். இயல்பு- கருமை. என்னியல்பு இதுவாகலின் மேலும் அது முடியாது என்பதாம்.

குறள் 1286 ( காணுங்காற்) தொகு

( இதுவுமது )

காணுங்காற் காணேன் றவறாய காணாக்காற் ( ) காணும்கால் காணேன் தவறாய காணாக்கால்

காணேன் றவறல் லவை. (06) காணேன் தவறு அல்லவை.

[தொடரமைப்பு: காணுங்கால் தவறாய காணேன், காணாக்கால் தவறல்லவை காணேன்.]

இதன்பொருள்
காணுங்கால் தவறாய காணேன்= கொண்கனை யான் காணும்பொழுது அவன் தவறாயவற்றைக் காண்கின்றிலேன்;
காணாக்கால் தவறல்லவை காணேன்= காணாதபொழுது அவையேயல்லது, பிறவற்றைக் காண்கின்றிலேன், எ-று.
உரை விளக்கம்
செயப்படுபொருள் அதிகாரத்தான் வந்தது. முன்பு நான் நின்னொடு சொல்லிய தவறுகள் இதுபொழுது காணாமையின் புலந்திலேன் என்பதாம்.

குறள் 1287 ( உய்த்தலறிந்து) தொகு

(இதுவுமது )

உய்த்த லறிந்து புனல்பாய் பவரேபோற் ( ) உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல்

பொய்த்த லறிந்தென் புலந்து. (07) பொய்த்தல் அறிந்து என் புலந்து.

[தொடரமைப்பு: உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல், பொய்த்தல் அறிந்து புலந்து என்.]

இதன்பொருள்
உய்த்தல் அறிந்து புனல்பாய்பவரே போல்= தம்மை ஈர்த்துக்கொண்டு போதல் அறிந்துவைத்து, ஒழுகுகின்ற புனலுட் பாய்வார் செயல் போல;
பொய்த்தல் அறிந்து புலந்து என்= புலவி முடிவுபோகாமை அறிந்து வைத்துக் கொண்கனோடு புலந்து பெறுவதென், எ-று.
உரை விளக்கம்
பாய்பவர் என்பது ஆகுபெயர். பொய்த்தல் புரைபடுதல். புலந்தாலும் பயனில்லை என்பதாம். பொய்த்தலறிந்தேன் என்பது பாடமாயின், உய்த்தலறிய ஓடுநீருள்பாய்வார்போல், முடிவறியப் பண்டொருகாற் புலந்து முடியாமை அறிந்தேன், இனி அது செயற்பாற்றன்று என உரைக்க.

குறள் 1288 ( இளி்த்தக்க) தொகு

( தலைமகள் புணர்ச்சி விதுப்பறிந்த தோழி தலைமகற்குச் சொல்லியது. )

இளித்தக்க வின்னா செயினுங் களித்தார்க்குக் ( ) இளி்த்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்

கள்ளற்றே கள்வநின் மார்பு. (08) கள் அற்றே கள்வ நின் மார்பு.

[தொடரமைப்பு: கள்வ களித்தார்க்கு இளித்தக்க இன்னா செயினும் கள் அற்றே, நின் மார்பு.]

இதன்பொருள்
கள்வ= வஞ்சகா;
களித்தார்க்கு இளித்தக்க இன்னாசெயினும் கள்ளற்றே= தன்னை உண்டு களித்தார்க்கு இளிவரத்தக்க இன்னாதவற்றைச் செய்யினும், அவரால் மேன்மேல் விரும்பப்படுவதாய கள்ளுப்போலும்;
நின் மார்பு= எங்கட்கு நின்மார்பு, எ-று.
உரை விளக்கம்
அவ்வின்னாதன- நாண் இன்மை, நிறை இன்மை, ஒழுக்கம் இன்மை, உணர்வு இன்மை என்று இவைமுதலாயின. எங்கட்கு நாணின்மை முதலியவற்றைச் செய்யுமாயினும், எங்களால் மேன்மேல் விரும்பப்படாநின்றது என்பதாம். கள்வ என்றதும் அதுநோக்கி.

குறள் 1289 ( மலரினுமெல்) தொகு

(உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது. )

மலரினு மெல்லிது காமஞ் சிலரதன் ( ) மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்

செவ்வி தலைப்படு வார். (09) செவ்வி தலைப்படுவார்.

[தொடரமைப்பு: காமம் மலரினும் மெல்லிது, அதன் செவ்வி தலைப்படுவார் சிலர்.]

இதன்பொருள்
காமம் மலரினும் மெல்லிது= காமவின்பம் மலரினும் மெல்லிதாய் இருக்கும்;
அதன்செவ்வி தலைப்படுவார் சிலர்= அங்ஙனம் மெல்லிதாதலை அறிந்து அதன் செவ்வியைப் பெறுவார் உலகத்துச்சிலர் எ-று.
உரை விளக்கம்
தொட்டதுணையானை மணச்செவ்வி அழிவதாய மலர், எல்லாவற்றினும் மெல்லிது என்பது விளக்கலின், உம்மை சிறப்பின்கண் வந்தது. குறிப்பும், வேட்கையும், நுகர்ச்சியும், இன்பமும் ஒருகாலத்தின்கண்ணே ஒத்து நுகர்தற்குரியார் இருவர்,அதற்கு ஏற்ற இடனும் காலமும் உபகரணங்களும் பெற்றுக் கூடி நுகரவேண்டுதலின், 'அதன் செவ்விதலைப்படுவார் சிலர்' என்றும், அவற்றுள் யாதானும் ஒன்றான் சிறிது வேறுபடினும் வாடுதலின், 'மலரினும் மெல்லிது காமம்' என்றும் கூறினான். குறிப்பு ஒவ்வாமையின் யான் அது பெறுகின்றிலேன் என்பதாம். தலைமகள் ஊடல் தீர்வது பயன்.

குறள் 1290 ( கண்ணிற்) தொகு

( இதுவுமது )

கண்ணிற் றுனித்தே கலங்கினாள் புல்லுத () கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்

லென்னினுந் தான்விதுப் புற்று. (10) என்னினும் தான் விதுப்பு உற்று.

[தொடரமைப்பு: கண்ணின் துனித்தே, புல்லுதல் என்னினும் தான் விதுப்புற்றுக் கலங்கினாள்.]

இதன்பொருள்
கண்ணின் துனித்தே= காதலி முன்னொருஞான்று, புல்லல் விதுப்பினாற் சென்ற என்னோடு தன்கண் மாத்திரத்தான் ஊடி;
புல்லுதல் என்னினும் தான் விதுப்புற்றுக் கலங்கினாள்= புல்லுதலை என்னினும்தான் விதும்பலால், அதுதன்னையும் அப்பொழுதே மறந்து கூடிவிட்டாள்; அதனால், நான் இத்தன்மையேன் ஆகவும், விதுப்பின்றி ஊடிநிற்கின்ற இவள் அவள் அல்லள் எ-று.
உரை விளக்கம்
கண் மாத்திரத்தான் ஊடல்- சொல் நிகழ்ச்சி இன்றி அது சிவந்ததுணையே ஆதல். அவளாயின், இங்ஙனம் ஊடற்கண் நீடாள் என்பது பயன்.