திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/31.வெகுளாமை

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் அறத்துப்பால் தொகு

துறவறவியல் தொகு

அதிகாரம்: 31.வெகுளாமை தொகு

பரிமேலழகர் உரை தொகு

அதிகார முன்னுரை
அஃதாவது, சினத்தைச் செய்தற்குக் காரணம் ஒருவன்மாட்டு உளதாயவிடத்தும் அதனைச் செய்யாமை. இது பொய்ம்மை பற்றி நிகழ்வதாய வெகுளியை விலக்கலின், வாய்மையின் பின் வைக்கப்பட்டது.

குறள்: 301 (செல்லிடத்துக்) தொகு

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக்
காக்கிலென் காவாக்கா லென் (01)
செல் இடத்துக் காப்பான் சினம் காப்பான் அல் இடத்துக்
காக்கின் என் காவாக்கால் என்.
இதன்பொருள்
சினம் செல் இடத்துக் காப்பான் காப்பான்= தன் சினம் பலிக்கும் இடத்து அதனை எழாமல் தடுப்பானே அருளால் தடுப்பான் ஆவான்; அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என்= ஏனைப் பலியாத இடத்து அதனைத்தடுத்தால் என், தடாது ஒழிந்தால் என்?
உரைவிளக்கம்
'செல்லிடம்' 'அல்லிடம்' என்றது, தவத்தான் தன்னின் மெலியாரையும் வலியாரையும். வலியார்மேல் காவா வழியும், அதனான் அவர்க்கு வருவதோர் தீங்கு இன்மையிற் காத்த வழியும் அறனில்லை என்பார், 'காக்கினென் காவாக்காலென்' என்றார்.
இதனான் வெகுளாமைக்கு இடம் கூறப்பட்டது.

குறள்: 302 (செல்லாவிடத்துச்) தொகு

செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்து
மில்லதனிற் றீய பிற (02)
செல்லா இடத்துச் சினம் தீது செல் இடத்தும்
இல் அதனின் தீய பிற.
இதன்பொருள்
சினம் செல்லா இடத்துத் தீது= ஒருவன் வெகுளி தன்னின் வலியார்மேல் எழின் தனக்கே தீதாம்; செல் இடத்தும் அதனின் தீய பிற இல்= மற்றை எளியார்மேல் எழினும் அதனின் தீயன பிற இல்லை.
உரை விளக்கம்
'செல்லாஇடத்துச் சினம்' பயப்பது இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே; ஏனையது, இம்மைக்கண் பழியும் மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீயன 'பிறஇல்லை' என்றார். ஓரிடத்தும் ஆகாது என்பதாம்.

குறள்: 303 (மறத்தல்) தொகு

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்த லதனான் வரும் (03)
மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
இதன்பொருள்
யார்மாட்டும் வெகுளியை மறத்தல்= யாவர் மாட்டும் வெகுளியை ஒழிக; தீய பிறத்தல் அதனான் வரும்= ஒருவர்க்குத் தீயன வெல்லாம் உளவாதல் அதனான் வரும் ஆகலான்.
உரை விளக்கம்
வலியார், ஒப்பார், மெலியார் என்னும் மூவர்மாட்டும் ஆகாமையின் 'யார்மாட்டும்' என்றும், மனத்தாற் துறத்தார்க்கு ஆகாதனவாகிய தீ்ச்சிந்தைகள் எல்லாவற்றையும் பிறப்பித்தலின் 'தீய பிறத்தல் அதனான் வரும்' என்றும் கூறினார்.

குறள்: 304 (நகையும்) தொகு

நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற்
பகையு முளவோ பிற (04)
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
உரைவிளக்கம்: நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்= துறந்தார்க்கு அருளான் உளவாய முகத்தின்கண் நகையையும் மனத்தின்கண் உவகையையும் கொன்று கொண்டு எழுகின்ற சினமே அல்லது; பிற பகையும் உளவோ= அதனிற் பிறவாய பகைகளும் உளவோ? இல்லை.
உரைவிளக்கம்: துறவாற் புறப்பகை இலராயினும், உட்பகையாய் நின்று அருள் முதலிய நட்பினையும் பிரித்துப் பிறவித் துன்பமும் எய்துவித்தலான், அவர்க்குச் சினத்தின் மிக்க பகையில்லையாயிற்று.
இவை மூன்று பாட்டானும் வெகுளியது தீங்கு கூறப்பட்டது.

குறள்: 305 (தன்னைத்தான்) தொகு

தன்னைத்தான் காக்கிற் சினங் காக்க காவாக்காற்
றன்னையே கொல்லுஞ் சினம் (05)
தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.
இதன்பொருள்
தன்னைத் தான் காக்கின் சினம் காக்க= தன்னைத் தான் துன்பம் எய்தாமல் காக்க நினைத்தான்ஆயின், தன்மனத்துச் சினம் வாராமற் காக்க; காவாக்கால் சினம் தன்னையே கொல்லும்= காவானாயின், அச்சினம் தன்னையை கெடுக்கும் கடும் துன்பங்களை எய்துவிக்கும்.
உரை விளக்கம்
"வேண்டிய வேண்டியாங்கு எய்தற்[1]" பயத்ததாய தவத்தைப் பிறர்மேல் சாபம் விடுதற்காக இழந்து, அத்தவத் துன்பத்தோடு பிணைய பிறவித்துன்பமும் ஒருங்கு எய்துதலின், தன்னையே கொல்லும் என்றார். "கொல்லச் சுரப்பதாங் கீழ்[2]" என்புழிப்போலக் கொலைச்சொல் ஈண்டுத் துன்பமிகுதி உணர்த்தி நின்றது.
[1]. திருக்குறள்- 265.
[2]. நாலடியார்- 279.

குறள்: 306 (சினமென்னும்) தொகு

சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னு
மேமப் புணையைச் சுடும் (06)
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
இதன்பொருள்
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி= சினம் என்னும் நெருப்பு; இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்= தனக்கு இனமானவரையே அன்றி, அவர்க்கு இனமாகிய ஏமப்புணையைச் சுடும்.
உரைவிளக்கம்
'சேர்ந்தாரைக் கொல்லி' என்பது ஏதுப்பெயர்; தான் சேர்ந்த இடத்தைக் கொல்லும் தொழிலது என்றவாறு. 'சேர்ந்தாரை' என உயர்திணைப் பன்மைமேல் வைத்து ஏனை நான்குபாலும் தம் கருத்தோடுகூடிய பொருள் ஆற்றலாற் கொண்டார், ஈண்டு உருவகம் செய்கின்றது துறந்தார் சினத்தையே யாகலின். சினம் என்னும் நெருப்பு என்ற விதப்பு,[3] உலகத்து நெருப்புச் சுடுவது, தான் சேர்ந்தவிடத்தையே இந்நெருப்புச் சேராதவிடத்தையுஞ் சுடும் என்னும் வேற்றுமை தோன்ற நின்றது. ஈண்டு இனம் என்றது முற்றத் துறந்து தவஞானங்களாற் பெரியராய்க் கேட்டார்க்கு உறுதிபயக்கும் :மொழிகளை இனியவாகச் சொல்லுவாரை. உருவகநோக்கிச் 'சுடும்' என்னும் தொழில் கொடுத்தாராயினும், அகற்றும் என்பது பொருளாகக் கொள்க. 'ஏமப்புணை' ஏமத்தை உபதேசிக்கும் புணை. 'இனமென்னும் ஏமப்புணை' என்ற ஏகதேசஉருவகத்தால் பிறவிக் கடலுள் அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற என வருவித்துரைக்க. எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. தன்னையும் வீழ்த்து, எடுப்பாரையும் அகற்றும் என்பதாம்.
[3]. வேண்டியதொன்றை முடித்தற்கு வேண்டாததொன்றைக் கூறுதல்.

குறள்: 307 (சினத்தைப்பொருள்) தொகு

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று (07)
சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று.
இதன்பொருள்
சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு= சினத்தைத் தன் ஆற்றல் உணர்த்துவதோர் குணம் என்று தன்கட் கொண்டவன் அவ்வாற்றல் இழத்தல்; நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று= நிலத்தின்கண் அறைந்தவன் கை அந்நிலத்தை உறுதல் தப்பாதவாறு போலத் தப்பாது.
உரைவிளக்கம்
வைசேடிகர்[4] பொருள், பண்பு, தொழில், சாதி, விசேடம், இயைபு என்பனவற்றை அறுவகைப் பொருள் என்றாற் போல ஈண்டுக் 'குணம்' 'பொருள்' எனப்பட்டது. 'பிழையாததற்று' என்பது குறைந்து நின்றது.
இவை மூன்று பாட்டானும் வெகுண்டார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.
[4].விசேஷம் என்னும் பதார்த்தத்தை (கணாதரது நியாய மதத்தை)அங்கீகரித்தவர் வைசேடிகர்.
.

குறள்: 308 (இணரெரி) தொகு

இணரெரி தோய்வன்ன வின்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று (08)
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
இதன்பொருள்
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்= பலசுடரை உடைத்தாய பேரெரிவந்து தோய்ந்தால் ஒத்த இன்னாதவற்றை ஒருவன் செய்தான் ஆயினும்; வெகுளாமை புணரின் நன்று= அவனை வெகுளாமை ஒருவற்குக் கூடுமாயின் அது நன்று.
உரைவிளக்கம்
இன்னாமையின் மிகுதி தோன்ற 'இணர்எரி' என்றும், அதனை மேன் மேலும் செய்தல் தோன்ற 'இன்னா'வென்றும், அச்செயல் முனிவரையும் வெகுள்விக்கும் என்பது தோன்றப் 'புணரின்' என்றும் கூறினார்.
இதனான் வெகுளாமையது நன்மை கூறப்பட்டது.

குறள்: 309 (உள்ளியதெல்லா) தொகு

உள்ளிய தெல்லா முடனெய்து முள்ளத்தா
ளுள்ளான் வெகுளி யெனின் (09)
உள்ளியது எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
இதன்பொருள்
உள்ளத்தால் வெகுளி உள்ளான் எனின்= தவஞ்செய்யும் அவன், தன் மனத்தால் வெகுளியை ஒருகாலும் நினையான் ஆயின்; உள்ளியது எல்லாம் உடன் எய்தும்= தான் கருதிய பேறுஎல்லாம் ஒருங்கே பெறும்.
உரைவிளக்கம்
'உள்ளத்தால்' என வேண்டாது கூறியவதனான், அருளுடை உள்ளம்என்பது முடிந்தது. அதனன் உள்ளாமையாவது, அவ்வருளாகிய பகையை வளர்த்து அதனான் முற்றக் கடிதல். இம்மை மறுமை வீடு என்பன வேறுவேறு திறத்தனவாயினும், அவையெல்லாம் இவ்வொன்றானே எய்தும் என்பார், 'உள்ளியதெல்லாம் உடன் எய்தும்' என்றார்.
இதனான் வெகுளாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.

குறள்: 310 (இறந்தார்) தொகு

இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை (10)
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
இதன்பொருள்
இறந்தார் இறந்தார் அனையர்= சினத்தின்கண்ணே மிக்கார், உயிருடையர் ஆயினும், செத்தாரோடு ஒப்பர்; சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை= சினத்தைத் துறந்தார் சாதல்தன்மையர் ஆயினும், அதனை ஒழிந்தார் அளவினர்.
உரைவிளக்கம்
மிக்க சினத்தை உடையார்க்கு ஞானம் எய்துதற்குரிய உயிர் நின்றதாயினும் கலக்கத்தான் அஃதுஎய்தாமை ஒருதலையாகலின் அவரை 'இறந்தாரனையர்' என்றும், சினத்தை விட்டார்க்குச் சாக்காடு எய்துதுற்குரிய யாக்கை நின்றதாயினும், ஞானத்தான் வீடு பெறுதல் ஒருதலையாகலின், அவரை வீடுபெற்றாரோடு ஒப்பர் என்று்ம் கூறினார்.
இதனான் அவ்விருவரது பயனும் ஒருங்கு கூறப்பட்டது.