திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/47.தெரிந்துசெயல்வகை

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


பொருட்பால்- 1.அரசியல்- அதிகாரம் 47.தெரிந்துசெயல்வகை தொகு

பரிமேலழகர் உரை தொகு

அதிகார முன்னுரை
அஃதாவது, அரசன் தான்செய்யும் வினைகளை ஆராய்ந்து செய்யுந்திறம். அச்செயல் பெரியாரைத்துணைக்கோடல் பயனுடைத்தாய வழி அவரோடும் செய்யப்படுவதாகலின் இது சிற்றினஞ்சேராமையின்பின் வைக்கப்பட்டது.

குறள் 461 (அழிவதூஉ) தொகு

அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கு      அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும்
மூதியமுஞ் சூழ்ந்து செயல் (01).                      ஊதியமும் சூழ்ந்து செயல்.
இதன்பொருள்
அழிவதூஉம்= வினைசெய்யுங்கால் அப்பொழுது அதனால் அழிவதனையும்;
ஆவதூஉம்= அழிந்தால் பின்ஆவதனையும்;
ஆகி வழிபயக்கும் ஊதியமும்= ஆய்நின்று பிற்பொழுது தரும் ஊதியத்தையும்;
சூழ்ந்து செயல்= சீர்தூக்கி உறுவதாயிற் செய்க.
விளக்கம்
உறுவதாவது, நிகழ்வின்கண் அழிவதனில் ஆவது மிக்கு, எதிர்வினும் அது வளர்ந்துவருதல். அழிவதின்மையின், எதிர்வின்கண் வரும் ஆக்கத்தை 'ஊதியம்' என்றார். எனவே, அவ்வூதியம் பெறின் நிகழ்வின்கண் அழிவதும் ஆவதும் தம்முள் ஒத்தாலும், ஒழிதற்பாற்று அன்று என்பது பெற்றாம். இரண்டு காலத்தினும் பயனுடைமை தெரிந்து செய்க என்பதாம்.

குறள் 462 (தெரிந்தவினத்) தொகு

தெரிந்த வினத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்     தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு
கரும்பொருள் யாதொன்று மில் (02)                                  அரும் பொருள் யாது ஒன்றும் இல்.
இதன்பொருள்
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு= தாம் தெரிந்துகொண்ட இனத்துடனே செய்யத்தகும் வினையை ஆராய்ந்து பின் தாமேயும் எண்ணி்ச்செய்து முடிக்கவல்ல அரசர்க்கு;
அரும்பொருள் யாதொன்றும் இல்= எய்துதற்கரிய பொருள் யாது ஒன்றும் இல்லை.
விளக்கம்
ஆராயப்படுவன எல்லாம் ஆராய்ந்துபோன 'இனம்' என்றுமாம். 'செய்வார்க்கு' என்றதனால், வினையென்னும் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. வினையாவது மேற்சேறன் முதல் வேறல் ஈறாய தொழில். பொருள்கட்கு ஏதுவாய அதனில் தவறாமையின், அரிய பொருள்களெல்லாம் எளிதின் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் செய்யத்தகும் வினையும்‌அது செய்யும் ஆறும் கூறப்பட்டன.

குறள் 463 (ஆக்கங்கருதி) தொகு

ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை      ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை
யூக்கா ரறிவுடை யார் (03                                      ஊக்கார் அறிவுடையார்.
இதன்பொருள்
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை= மேல்எய்தக்கடவ ஊதியத்தினை நோக்கி முன் எய்திநின்ற முதல்தன்னையும் இழத்தற்கு ஏதுவாய செய்வினையை;
அறிவுடையார் ஊக்கார்= அறிவுடையார் மேற்கொள்ளார்.
விளக்கம்
'கருதி' யென்னும் வினையெச்சம் 'இழக்கு'மென்னும் பெயரெச்சவினை கொண்டது. எச்சவும்மை விகாரத்தாற் தொக்கது. ஆக்கமேயன்றி முதலையும் இழக்கும் வினைகளாவன, வலியும் காலமும் இடனும் அறியாது பிறர் மண்கொள்வான்சென்று தம்மண்ணுமிழத்தல் போல்வன. முன்செய்துபோந்த வினையாயினும் என்பார், 'செய்வினை' யென்றார்.

குறள் 464 (தெளிவிலதனை) தொகு

தெளிவிலதனைத் தொடங்கா ரிளிவென்னு     தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவு என்னும்

மேதப்பா டஞ்சு பவர் (04)                                       ஏதப்பாடு அஞ்சுபவர்

இதன்பொருள்
தெளிவு இலதனைத் தொடங்கார் = இனத்தொடும் தனித்தும் ஆராய்ந்து துணிதலில்லாத வினையைத் தொடங்கார்;
இளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சுபவர்= தமக்கு இளிவரவு என்னும் குற்றம் உண்டாதலை அஞ்சுவார்.
விளக்கம்
தொடங்கின் இடையின் மடங்கலாகாமையின், 'தொடங்கார்' என்றார். இளிவரவு அவ்வினையாற் பின் அழிவு எய்தியவழி அதன்மேலும், அறிவும் மானமும் இலர் என்று உலகத்தார் இகழும் இகழ்ச்சி. அஃதுண்டாதல் ஒருதலையாகலின், தெளிவு உள்வழித் தொடங்குக என்பதாம்.

குறள் 465 (வகையறச்) தொகு

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்     வகை அறச் சூழாது எழுதல் பகைவரைப்

பாத்திப் படுப்பதோ ராறு. (05)                     பாத்திப் படுப்பது ஓர் ஆறு.

இதன்பொருள்
வகை அறச் சூழாது எழுதல்= சென்றால் நிகழும் திறங்களையெல்லாம் முற்ற எண்ணாது சில எண்ணிய துணையானே அரசன் பகைவர் மேற் செல்லுதல்;
பகைவரைப் பாத்திப் படுப்பது ஓர் ஆறு= அவரை வளரும் நிலத்திலே நிலைபெறச் செய்வதொரு நெறியாம்.
விளக்கம்
அத்திறங்களாவன: வலி, காலம், இடன் என்று இவற்றால் தனக்கும் பகைவர்க்கும் உளவாம் நிலைமைகளும், வினை தொடங்குமாறும், அதற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், வெல்லுமாறும், அதனால் பெறும் பயனும் முதலாயின. அவற்றுள் சில எஞ்சினும் பகைவர்க்கு இடனாம்ஆகலான், முற்றுப்பெற எண்ணவேண்டும் என்பதாம்.
இவைமூன்று பாட்டானும் ஒழியத்தகும் வினையும், ஒழியாவழிப்படும் இழுக்கும் கூறப்பட்டன.

குறள் 466 (செய்தக்க) தொகு

செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க   செய் தக்க அல்ல செயக் கெடும் செய் தக்க
செய்யாமை யானுங் கெடும். (06)                   செய்யாமையானும் கெடும்.
இதன்பொருள்
செய்தக்க அல்ல செயக் கெடும்= அரசன் தன் வினைகளுட் செய்யத்தக்கன அல்லவற்றைச் செய்தலாற் கெடும்;
செய் தக்க செய்யாமையானும் கெடும்= இனி, அதனானே யன்றிச் செய்யத்தக்கனவற்றைச் செய்யாமைதன்னானுங் கெடும்.
விளக்கம்
செய்யத்தக்கன அல்லவாவன: பெரிய முயற்சியினவும், செய்தாற் பயனில்லனவும், அது சிறியதாயினவும், ஐயமாயினவும், பின் துயர் விளைப்பனவும் என இவை. செய்யத்தக்கவாவன: அவற்றின் மறுதலையாயின. இச்செய்தல், செய்யாமைகளான், அறிவு ஆண்மை பெருமை என்னும் மூவகையாற்றலுள் பொருள், படை என இருவகைத்தாய பெருமை சுருங்கிப் பகைவர்க்கு எளியனாம் ஆகலான், இரண்டும் கேட்டிற்கு ஏதுவாயின.
இதனால், செய்வன செய்து ஒழிவன ஒழிக என இருவகையனவும் உடன் கூறப்பட்டன.

குறள் 467 (எண்ணித்) தொகு

எண்ணித் துணிக கருமந் துணிந்தபி  எண்ணித் துணிக கருமம் துணிந்த பின்
னெண்ணுவ மென்ப திழுக்கு. (07)          எண்ணுவம் என்பது இழுக்கு.
இதன்பொருள்
கருமம் எண்ணித் துணிக= செய்யத்தக்க கருமமும் முடிக்கும் உபாயத்தை எண்ணித் தொடங்குக;
துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு= தொடங்கி வைத்துப் பின் எண்ணக் கடவேம் என்றொழிதல் குற்றம்ஆதலான்.
விளக்கம்
துணிவுபற்றி நிகழ்தலின், 'துணிவு' எனப்பட்டது. சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. உபாயம் என்பது அவாய்நிலையான் வந்தது. அது, கொடுத்தல், இன்சொற்சொல்லல், வேறுபடுத்தல், ஒறுத்தல் என நால்வகைப்படும். இவற்றை வடநூலார், தான சாம பேத தண்டம் என்ப. அவற்றுள், முன்னைய இரண்டும் ஐவகைய; ஏனைய மூவகைய. அவ்வகைகள் எல்லாம் ஈண்டு உரைப்பிற் பெருகும். இவ்வுபாயம் எல்லாம் எண்ணாது தொடங்கின் அவ்வினை மாற்றானால் விலக்கப்பட்டு முடியாமையானும், இடையின் ஒழிதலாகாமையானும், அரசன்துயர் உறுதலின் அவ்வெண்ணாமையை 'இழுக்கு' என்றார். செய்வனவற்றையும், உபாயம் அறிந்தே தொடங்குக வென்பதாம்.

குறள் 468 (ஆற்றின்) தொகு

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று    ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று
போற்றினும் பொத்துப் படும்.(08)                   போற்றினும் பொத்துப் படும்.
இதன்பொருள்
ஆற்றின் வருந்தா வருத்தம்= முடியும் உபாயத்தால் கருமத்தை முயலாத முயற்சி;
பலர் நின்று போற்றினும் பொத்துப்படும்= துணைவர் பலர்நின்று புரைபடாமல் காப்பினும் புரைபடும்.
விளக்கம்
முடியும் உபாயத்தான் முயறலாவது, கொடுத்தலைப் பொருள் நசையாளன்கண்ணும், இன்சொல்லைச் செப்பமுடையான், மடியாளன், முன்னே பிறரோடு பொருதுநொந்தவன் என இவர்கண்ணும், வேறுபடுத்தலைத் துணைப்படையாளன், தன்பகுதியோடு பொருந்தான் என இவர்கண்ணும், ஒறுத்தலை இவற்றின் வாராவழி இவர்கண்ணும், தேறப்படாத கீழ்மகன்கண்ணும் செய்து வெல்லுமாற்றான் முயறல். புரைபடுதல்- கருதிய நன்மையன்றிக் கருதாத தீமைபயத்தல். உபாயத்தது சிறப்புக் கூறியவாறு.

குறள் 469 (நன்றாற்றலுள்) தொகு

நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்     நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு அவர் அவர்

பண்பறிந் தாற்றாக் கடை.                          பண்பு அறிந்து ஆற்றாக் கடை.

இதன்பொருள்
நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு= வேற்று வேந்தர்மாட்டு நன்றான உபாயஞ் செய்தற்கண்ணுங் குற்றமுண்டாம்;
அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக் கடை= அவரவர் குணங்களை ஆராய்ந்து அறிந்து அவற்றிற்கு இயையச் செய்யாவிடின்.
விளக்கம்
நன்றான உபாயமாவது, கொடுத்தலும் இன்சொற்சொல்லுதலும் ஆம், அவை யாவர்கண்ணும் இனியவாதற் சிறப்புடைமையின். உம்மை சிறப்பும்மை. அவற்றை 'அவரவர் பண்பறிந்துஆற்றா'மையாவது, அவற்றிற்கு உரியரல்லாதார்கண்ணே செய்தல். 'தவறு' அவ்வினை முடியாமை.

குறள் 470 (எள்ளாத) தொகு

எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு     எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் தம்மொடு

கொள்ளாத கொள்ளா வுலகு                                           கொள்ளாத கொள்ளாது உலகு.

இதன்பொருள்
தம்மொடு கொள்ளாத உலகு கொள்ளாது= அரசர் வினைமுடித்தற்பொருட்டுத் தந்நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்வாராயின் உலகந் தம்மை இகழாநிற்கும்;
எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும்= ஆகலான் அஃது இகழா உபாயங்களை நாடிச்செய்க.
விளக்கம்
'தம்' என்பது ஆகுபெயர். தந்நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்தலாவது: தாம் வலியராய் வைத்து மெலிந்தார்க்குரிய கொடுத்தன் முதலிய மூன்றனைச் செய்தலும், மெலியராய் வைத்து வலியார்க்குரிய ஒறுத்தலைச் செய்தலுமாம். இவையிரண்டும் அறிவிலார் செய்வனவாகலின், 'உலகங்கொள்ளா'தென்றார். அஃது எள்ளாதன செய்தலாவது, அவற்றைத் தத்தம் வன்மை மென்மைகட்கு ஏற்பச்செய்தல். மேல் (பார்க்க:குறள்468) இடவகையான் உரிமைகூறிய உபாயங்கட்கு வினைமுதல் வகையான் உரிமைகூறியவாறு.
இவை நான்கு பாட்டானும் செய்வனவற்றிற்கு உபாயமும் அதனது உரிமையுங் கூறப்பட்டன.