திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/70.மன்னரைச்சேர்ந்தொழுகல்

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- அங்கவியல் தொகு

பரிமேலழகர் உரை தொகு

அதிகாரம் 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் தொகு

அதிகார முன்னுரை
அஃதாவது, அமைச்சர் அரசரைப் பொருந்தி ஒழுகுமாறு. இது வேந்தவாம் பண்புடைமை என மேலே வேண்டப்பட்டமையின், தூதின்பின் வைக்கப்பட்டது.

குறள் 691 (அகலாதணு) தொகு

அகலா தணுகாது தீக்காய்வார் போல்க () அகலாது அணுகாது தீக் காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். (01) இகல் வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார்.

இதன்பொருள்
இகல் வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார்= மாறுபடுதலை உடைய அரசரைச் சேர்ந்து ஒழுகும் அமைச்சர்; அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க= அவரை மிகநீங்குவதும், மிகச்செறிவதும் செய்யாது தீக்காய்வார்போல இடைநிலத்திலே நிற்க.
உரை விளக்கம்
கடிதின் வெகுளும் தன்மையர் என்பது தோன்ற, 'இகல்வேந்தர்' என்றார். மிக அகலின் பயன் கொடாது, மிக அணுகின் அவமதிபற்றித் தெறும் வேந்தர்க்கு, மிக அகலின் குளிர் நீங்காது மிக அணுகின் சுடுவதாய தீயோடு உளதாய தொழில்உவமம் பெறப்பட்டது.

குறள் 692 (மன்னர்விழை) தொகு

மன்னர் விழைப விழையாமை மன்னரான் () மன்னர் விழைப விழையாமை மன்னரான்

மன்னிய வாக்கந் தரும். (02) மன்னிய ஆக்கம் தரும்.

இதன்பொருள்
மன்னர் விழைப விழையாமை= தம்மால் சேரப்பட்ட மன்னர் விரும்புவனவற்றைத் தாம் விரும்பாது ஒழிதல்; மன்னரான் மன்னிய ஆக்கம் தரும்= அமைச்சர்க்கு அவரானே நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும்.
உரை விளக்கம்
ஈண்டு 'விழைப' என்றது, அவர்க்குச் சிறப்பாக உரியவற்றை. அவை நுகரப்படுவன, ஒப்பனை, மேன்மை என்றிவை முதலாயின. இவற்றை ஒப்பிற்கஞ்சித் தாம் விழையாது ஒழியவே, அவ்வச்ச நோக்கி உவந்து அவர்தாமே எல்லாச் செல்வமும் நல்குவர் என்பது கருத்து. எனவே, அவற்றை விரும்பிற் கேடுதரும் என்பதாம்.

குறள் 693 (போற்றின) தொகு

போற்றி னரியவை போற்றல் கடுத்தபின் () போற்றின் அரியவை போற்றல் கடுத்த பின்

றேற்றுதல் யார்க்கு மரிது. (03) தேற்றுதல் யார்க்கும் அரிது.

இதன்பொருள்
போற்றின் அரியவை போற்றல்= அமைச்சர் தம்மைக் காக்கக் கருதின் அரிய பிழைகள் தங்கண் வாராமற் காக்க; கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது= அவற்றை வந்தனவாகக் கேட்டு, அவ்வரசர் ஐயுற்றால் அவரைப் பின் தெளிவித்தல் யாவர்க்கும் அரிதாகலான்.
உரை விளக்கம்
அரிய பிழைகளாவன: அவரால் பொறுத்தற்கு அரிய அறைபோதல், உரிமையொடு மருவல், அரும்பொருள் வௌவல் என்றிவை முதலாயின. அவற்றைக் காத்தலாவது, ஒருவன் சொல்லியக்கால், தகுமோ என்று ஐயுறாது தகாதென்றே அவர் துணிய ஒழுகல். ஒருவாற்றான் தெளிவித்தலும், கடன்கொண்டான் தோன்றப் பொருள்தோன்றுமாறு போலக் கண்டுழி எல்லாம் அவை நினைக்கப்படுதலின், 'யார்க்கும் அரிது' என்றார். இவை மூன்று பாட்டானும் அது பொதுவகையால் கூறப்பட்டது.

குறள் 694 (செவிச்சொல்) தொகு

செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையு மவித்தொழுக () செவிச் சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல்

லான்ற பெரியா ரகத்து. (04) ஆன்ற பெரியார் அகத்து.

இதன்பொருள்
ஆன்ற பெரியார் அகத்து= அமைந்த அரசர் அருகிருந்தால்; செவிச் சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல்= அவர்காண ஒருவன் செவிக்கட் சொல்லுதலையும், ஒருவன் முகநோக்கி நகுதலையும் தவிர்ந்து ஒழுகுக.
உரை விளக்கம்
சேர்தல்: பிறனொடு சேர்தல். செய்தொழுகின் தம் குற்றங்கண்டு செய்தனவாகக் கொள்வர் என்பது கருத்து.

குறள் 695 (எப்பொருளும்) தொகு

எப்பொருளு மோரார் தொடரார்மற் றப்பொருளை () எப்பொருளும் ஓரார் தொடரார் மற்று அப்பொருளை

விட்டக்காற் கேட்க மறை. (05) விட்டக்கால் கேட்க மறை.

இதன்பொருள்
மறை= அரசனுக்குப் பிறரோடு மறை நிகழ்வுழி; எப்பொருளும் ஓரார்= யாதொரு பொருளையும் செவி கொடுத்து்க் கேளாது; தொடரார்= அவனை முடுகி வினவுவதுஞ் செய்யாது; அப்பொருளை விட்டக்கால் கேட்க= அம்மறைப்பொருளை அவன் தானே அடக்காது சொல்லியக்கால் கேட்க.
உரை விளக்கம்
ஓர்தற்கு ஏற்கும் பொருளாயினும் என்பார், 'எப்பொருளும்' என்றார். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது.

குறள் 696 (குறிப்பறிந்து) தொகு

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில () குறிப்பு அறிந்து காலம் கருதி வெறுப்பு இல

வேண்டுப வேட்பச் சொலல். (06) வேண்டுப வேட்பச் சொலல்.

இதன்பொருள்
குறிப்பு அறிந்து= அரசனுக்குக் காரியம் சொல்லுங்கால் அப்பொழுது நிகழ்கின்ற அவன் குறிப்பினை அறிந்து; காலம் கருதி= சொல்லுதற்கேற்ற காலத்தையும் நோக்கி; வெறுப்பு இல வேண்டுப வேட்பச் சொலல்= வெறுப்பிலவுமாய் வேண்டுவனவுமாய காரியங்களை அவன் மனம் விரும்பும் வகை சொல்லுக.
உரை விளக்கம்
குறிப்புக் காரியத்தின்கண் அன்றிக் காம வெகுளி உள்ளிட்டவற்றின் நிகழ்வுழியும் அதற்குஏலாக் காலத்தும் சொல்லுதல் பயனின்றாகலின் 'குறிப்பறிந்து காலங்கருதி' என்றும், அவன் உடம்படாதன முடிவுபோகாமையின் 'வெறுப்பில' என்றும், பயனில்லவும் பயன் சுருங்கியவும் செய்தல் வேண்டாமையின் 'வேண்டுப' என்றும், அவற்றை இனியவாய்ச் சுருங்கி விளங்கிய பொருளவாய சொற்களாற் சொல்லுக என்பார், 'வேட்பச்சொலல்' என்றும் கூறினார்.

குறள் 697 (வேட்பன) தொகு

வேட்பன சொல்லி வினையில வெஞ்ஞான்றுங் () வேட்பன சொல்லி வினை இல எஞ்ஞான்றும்

கேட்பினுஞ் சொல்லா விடல். (07) கேட்பினும் சொல்லா விடல்.

இதன்பொருள்
வேட்பன சொல்லி= பயன் பெரியனவுமாய், அரசன் விரும்புவனவுமாய காரியங்களை அவன் கேட்டிலனாயினும் சொல்லி, எஞ்ஞான்றும் வினை இல கேட்பினும் சொல்லாவிடல்= எஞ்ஞான்றும் பயனிலவாயவற்றைத் தானே கேட்டாலும் சொல்லாது விடுக.
உரை விளக்கம்
'வினையில' எனவும், 'கேட்பினும்' எனவும் வந்த சொற்களான், அவற்றின் மறுதலைச் சொற்கள் வருவிக்கப்பட்டன. வினையான் வருதலின் 'வினை' என்றும், வறுமைக்காலமும் அடங்க 'எஞ்ஞான்றும்' என்றும் கூறினார். சொல்லுவனவும் சொல்லாதனவும் வகுத்துக் கூறியவாறு.
இவை நான்கு பாட்டானும் சிறப்புவகையாற் கூறப்பட்டது.

குறள் 698 (இளையரின) தொகு

இளைய ரினமுறைய ரென்றிகழார் நின்ற () இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற

வொளியோ டொழுகப் படும். (08) ஒளியோடு ஒழுகப் படும்.

இதன்பொருள்
இளையர் இன முறையர் என்று இகழார்= இவர் எம்மின் இளையர் என்றும், எமக்கு இன்னமுறையினை உடையரென்றும் அரசரை அவமதியாது; நின்ற ஒளியோடு ஒழுகப்படும்= அவர் மாட்டு நின்ற ஒளியோடு பொருந்த ஒழுகுதல் செயப்படும்.
உரை விளக்கம்
'ஒளி' உறங்காநிற்கவுந் தாம் உலகம் காக்கின்ற அவர் கடவுள்தன்மை. அதனோடு பொருந்த ஒழுகுதலாவது, அவர் கடவுளரும் தாம் மக்களுமாய் ஒழுகுதல். அவ்வொளியால் போக்கப்பட்ட இளமையும் முறையும்பற்றி இகழ்வாராயின், தாமும் போக்கப்படுவர் என்பது கருத்து.

குறள் 699 (கொளப்பட்டே) தொகு

கொளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாத செய்யார் () கொளப் பட்டேம் என்று எண்ணிக் கொள்ளாத செய்யார்

துளக்கற்ற காட்சி யவர். () துளக்கு அற்ற காட்சியவர்.

இதன்பொருள்
கொளப்பட்டேம் என்று எண்ணிக்கொள்ளாத செய்யார்= அரசனால் யாம் நன்கு மதிக்கப்பட்டேம் என்று கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யார்; துளக்கு அற்ற காட்சியவர்= நிலைபெற்ற அறிவினை உடையார்.
உரை விளக்கம்
கொள்ளாதன செய்து அழிவெய்துவார், கொளப்பாட்டிற்குப் பின் தம்மை வேறொருவராகக் கருதுவர் ஆதலின், முன்னையராகவே கருதி அஞ்சி ஒழுகுவாரைத் 'துளக்கற்ற காட்சியவர்' என்றார்.

குறள் 700 (பழையமெனக்) தொகு

பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யுங் () பழையம் எனக் கருதிப் பண்பு அல்ல செய்யும்

கெழுதகைமை கேடு தரும். (10) கெழுதகைமை கேடு தரும்.

இதன்பொருள்
பழையம் எனக்கருதிப் பண்பு அல்ல செய்யும் கெழுதகைமை= அரசனுக்கு யாம் பழையம்எனக் கருதித் தமக்கு இயல்புஅல்லாதவற்றைச் செய்யும் உரிமை; கேடு தரும்= அமைச்சர்க்குக் கேட்டினைப் பயக்கும்.
உரை விளக்கம்
அவன் பொறாது செறும்பொழுதின் அப்பழைமை நோக்கிக் கண்ணோடாது உயிரை வௌவுதலான், அவன் வேண்டாதன செய்தற்கு ஏதுவாய 'கெழுதகைமை கேடு தரும்' என்றார்.
இவை மூன்று பாட்டானும் பொறுப்பர் என்று அரசர் வெறுப்பன செய்யற்க என்பது கூறப்பட்டது.