திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/92.வரைவின்மகளிர்

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- அங்கவியல் தொகு

பரிமேலழகர் உரை தொகு

அதிகாரம் 92.வரைவின்மகளிர் தொகு

அதிகார முன்னுரை
அஃதாவது தந்நலம் விலைகொடுப்பார் யாவர்க்கும் விற்பதல்லது, அதற்கு ஆவார் ஆகாதார் என்னும் வரைவிலாத மகளிரது இயல்பு; ஆதலால் தமக்குரிய மகளிரான் வரும் குற்றத்தின்பின் வைக்கப்பட்டது.

குறள் 911 (அன்பின்விழை ) தொகு

அன்பின் விழையார் பொருள்விழையு மாய்தொடியா ( ) அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய் தொடியார்

ரின்சொ லிழுக்குத் தரும். (01) இன் சொல் இழுக்குத் தரும்.

தொடரமைப்பு: அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய் தொடியார், இன்சொல் இழுக்குத்தரும்.

இதன்பொருள்
அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய் தொடியார்= ஒருவனை அன்புபற்றி விழையாது, பொருள்பற்றி விழையும் மகளிர்; இன்சொல் இழுக்குத் தரும்= அது கையுறுந்துணையும் தாம் அன்புபற்றி விழைந்தாராகச் சொல்லும் இனியசொல், அவனுக்குப் பின் இன்னாமையைப் பயக்கும்.
உரைவிளக்கம்
'பொருள்' என்புழி இன் விகாரத்தான் தொக்கது. ஆய்ந்த தொடியினையுடையார் என்றதனானும், இனிய சொல்லென்றதனானும், அவர் கருவி கூறப்பட்டது. அச்சொல் அப்பொழுதைக்கு இனிது போன்று பின் வறுமை பயத்தலின், அது கொள்ளற்க என்பதாம்.

குறள் 912 ( பயன்றூக்கி) தொகு

பயன்றூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் ( ) பயன் தூக்கிப் பண்பு உரைக்கும் பண்பு இல் மகளிர்

நயன்றூக்கி நள்ளா விடல். (02) நயன் தூக்கி நள்ளா விடல்.

தொடரமைப்பு: பயன்தூக்கிப் பண்பு உரைக்கும் பண்பில் மகளிர், நயன்தூக்கி நள்ளா விடல்.

இதன்பொருள்
பயன்தூக்கிப் பண்பு உரைக்கும் பண்பில் மகளிர்= ஒருவனுக்கு உள்ள பொருளை அளந்தறிந்து அஃது எய்தும் துணையும் தம் பண்புடைமை சொல்லும் பண்பில்லாத மகளிரது; நயன் தூக்கி நள்ளா விடல்= ஒழுகலாற்றினை ஆய்ந்தறிந்து அவரைப் பொருந்தாது விடுக.
உரை விளக்கம்
பண்பு சொல்லின்கண் அல்லது தங்கண் கிடவாமை தோன்றப் 'பண்பின் மகளிர்' என்றும், அவர்க்கு அது சாதிதருமம் ஆதல் நூலானேயன்றி அவர்செயலானும் அறிந்து என்பார் 'நயன்தூக்கி' என்றும், அவ்வறிவு அவரை விடுதற்கு உபாயம் என்பது தோன்றப் பின் 'நள்ளாவிடல்' என்றும் கூறினார்.

குறள் 913 (பொருட்பெண்டிர் ) தொகு

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்க மிருட்டறையி ( ) பொருள் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டு அறையில்

லேதில் பிணந்தழீஇ யற்று. (03) ஏது இல் பிணம் தழீஇ அற்று.

தொடரமைப்பு: பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம், இருட்டு அறையில் ஏதில் பிணம் தழீஇயற்று.

இதன்பொருள்
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம்= கொடுப்பாரை விரும்பாது பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்ம்மையை யுடைய முயக்கம்; இருட்டு அறையில் ஏதில் பிணம் தழீஇயற்று= பிணம் எடுப்பார் இருட்டறைக்கண்ணே முன்னறியாத பிணத்தைத் தழுவினாற் போலும்.
உரை விளக்கம்
பொருட்கு முயங்கும் மகளிர் கருத்தும் செயலும் ஆராயாது சாதியும் பருவமும் ஒவ்வாதானை முயங்குங்கால் அவர் குறிப்புக் கூலிக்குப் பிணமெடுப்பார் காணப்படாததோர் இடத்தின்கண் இயைபில்லாததோர் பிணத்தை எடுக்குங்கால் அவர் குறிப்போடு ஒக்கும் எனவே, அகத்தால் அருவரா நின்றும் பொருள்நோக்கிப் புறத்தால் தழுவுவர், அதனை ஒழிக என்பதாம்.
இவை மூன்று பாட்டானும், அவர் சொல்லும் செயலும் பொய்யென்பது கூறப்பட்டது.

குறள் 914 ( பொருட்பொருளார்) தொகு

பொருட்பொருளார் புன்னலந் தோயா ரருட்பொரு ( ) பொருள் பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள்

ளாயு மறிவி னவர். (04) ஆயும் அறிவினவர்.

தொடரமைப்பு: பொருட்பொருளார் புன்னலம், அருட்பொருள் ஆயும் அறிவினவர் தோயார்.

இதன்பொருள்
பொருட் பொருளார் புன்னலம்= இன்பமாகிய பொருளை இகழ்ந்து, பொருளாகிய பொருளையே விரும்பும் மகளிரது புல்லிய நலத்தை; அருட்பொருள் ஆயும் அறிவினவர் தோயார்= அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவினையுடையார் தீண்டார்.
உரை விளக்கம்
அறமுதலிய நான்கும் பொருள் எனப்படுதலின், 'பொருட்பொருள்', 'அருட்பொருள்' என விசேடித்தார். புன்மை- இழிந்தோர்க்கே உரித்தாதல். தாம் விரும்புகின்ற அறத்திற்கு அவர் மெய்ந்நலம் மறுதலையாகலின், தோயார் என்பதாம்.

குறள் 915 (பொதுநலத்தார் ) தொகு

பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின் () பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின்

மாண்ட வறிவி னவர். (05) மாண்ட அறிவினவர்.

தொடரமைப்பு: மதிநலத்தின் மாண்ட அறிவினவர், பொதுநலத்தார் புன்னலம் தோயார்.

இதன்பொருள்
மதி நலத்தின் மாண்ட அறிவினவர்= இயற்கையாகிய மதிநன்மையான் மாட்சிமைப்பட்ட செயற்கை அறிவினையுடையார்; பொது நலத்தார் புன்னலம் தோயார்= பொருள் கொடுப்பார்க்கெல்லாம் பொதுவாய ஆசையினையுடைய மகளிரது புல்லிய நலத்தைத் தீண்டார்.
உரை விளக்கம்
மதிநன்மை, முற்பிறப்புக்களிற் செய்த நல்வினைகளான் மனந் தெளிவுடைத்தாதல். அதனானன்றி்க் கல்வியறிவு மாட்சிமைப்படாமையின் 'மதிநலத்தின் மாண்டவறிவினவர்' என்றும், அவ்வறிவுடையார்க்கு அவராசையது பொதுமையும், மெய்ந்நலத்தது புன்மையும் விளங்கித் தோன்றலின் 'தோயார்' என்றும் கூறினார்.

குறள் 916 (தந்நல ) தொகு

தந்நல பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் ( ) தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கிப்

புன்னலம் பாரிப்பார் தோள். (06) புன் நலம் பாரிப்பார் தோள்.

தொடரமைப்பு: தகை செருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள், தம்நலம் பாரிப்பார் தோயார்.

இதன்பொருள்
தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள்= ஆடல், பாடல், அழகு என்பனவற்றாற் களித்துத் தம்புல்லியநலத்தை, விலைகொடுப்பார் யாவர்மாட்டும் பரப்பும் மகளிர் தோளி்னை; தம் நலம் பாரிப்பார் தோயார்= அறிவு ஒழுக்கங்களானாய தம்புகழை உலகத்துப் பரப்புதற்குரிய உயர்ந்தோர் தீண்டார்.
உரை விளக்கம்
ஆடன் முதலிய மூன்றுமுடைமை அவர்க்கு மேம்பாடாகலின் 'தகை'யென்றும், தோயின் அறிவொழுக்கங்கள் அழியுமாகலின், அவற்றாற் புகழ்பரப்புவார் 'தோயார்' என்றும் கூறினார். 'தந்நலம்' என்புழி நலம் ஆகுபெயர்.

இவை மூன்று பாட்டானும் அவரை உயர்ந்தோர் தீண்டார் என்பது கூறப்பட்டது

குறள் 917 (நிறைநெஞ்ச ) தொகு

நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் பிறநெஞ்சிற் ( ) நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சின்

பேணிப் புணர்பவர் தோள். (07) பேணிப் புணர்பவர் தோள்.

தொடரமைப்பு: நெஞ்சின் பிற பேணிப் புணர்பவர் தோள், நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர்.

இதன்பொருள்
நெஞ்சின் பிற பேணிப் புணர்பவர் தோள்= நெஞ்சினாற் பிறவற்றை ஆசைப்பட்டு, அவை காரணமாகக் கொடுப்பாரை மெய்யாற் புணரும் மகளிர் தோள்களை; நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர்= நிறையான் திருந்திய நெஞ்சம் இல்லாதார் தோய்வர்.
உரை விளக்கம்
பொருளும் அதனாற் படைக்கப்படுவனவும் விரும்பும் நெஞ்சு அவற்றின்மேலதாகலின், புணர்வது உடம்புமாத்திரம் என்பதறிந்து அதுவழி ஓடாதுநிற்கும் நெஞ்சினையுடையார் தோயாமையின், 'அஃதிலார் தோய்வர்' என்றார்.

குறள் 918 ( ஆயுமறிவின) தொகு

ஆயு மறிவின ரல்லார்க் கணங்கென்ப ( ) ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப

மாய மகளிர் முயக்கு. (08) மாய மகளிர் முயக்கு.

தொடரமைப்பு: மாய மகளிர் முயக்கு, ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப.

இதன்பொருள்
மாய மகளிர் முயக்கு= உருவு சொற்செயல்களான் வஞ்சித்தலை வல்ல மகளிரது முயக்கத்தை; ஆயும் அறிவினவர் அல்லார்க்கு அணங்கு என்ப= அவ்வஞ்சனை ஆராய்ந்தறியும் அறிவுடையர் அல்லார்க்கு, அணங்குதாக்கு என்றுசொல்லுவர் நூலோர்.
உரை விளக்கம்
'அணங்கு'- காமநெறியான் உயிர்கொள்ளும் தெய்வமகள். தாக்குத் தீண்டல். இவ்வுருவகத்தான், அம்முயக்கம் முன் இனிதுபோன்று பின் உயிர்கோடல் பெற்றாம். இது நூலோர் துணிவு என்பதுதோன்ற அவர்மேல் வைத்துக் கூறினார். அப்பெயர் அவாய்நிலையான் வந்தது.

குறள் 919 (வரைவிலா ) தொகு

வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப் ( ) வரைவு இலா மாண் இழையார் மென் தோள் புரை இலாப்

பூரியர்க ளாழு மளறு. (09) பூரியர்கள் ஆழும் அளறு.

தொடரமைப்பு: வரைவு இலா மாண் இழையார் மென்றோள், புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு.

இதன்பொருள்
வரைவு இலா மாண் இழையார் மென்தோள்= உயர்ந்தோர், இழிந்தோர் என்னாது விலைகொடுப்பார் யாவரையும் முயங்கும் மகளிரது மெல்லியதோள்கள்; புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு= அக்குற்றத்தை அறியும் அறிவில்லாத கீழ்மக்கள் புக்கு அழுந்து நிரயம்.
உரை விளக்கம்
உயர்தற்கு ஏதுவாகலின், 'புரை'யெனப்பட்டது. சாதியான் இழிந்தாரின் நீக்குதற்குப் 'புரையிலாப் பூரியர்கள்' என்றும், அவர் ஆழ்தற்கு ஏது, உருவம் முதலிய மூன்றும் என்பது தோன்ற 'மாணிழையார் மென்றோள்' என்றும், அவர்க்கு அளற்றினை இடையின்றிப் பயக்கும் என்பது தோன்ற, உருவகம் ஆக்கியும் கூறினார்.

குறள் 920 ( இருமனப்) தொகு

இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறுந் () இரு மனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திருநீக்கப் பட்டார் தொடர்பு. (10) திரு நீக்கப்பட்டார் தொடர்பு.

தொடரமைப்பு: இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும், திரு நீக்கப்பட்டார் தொடர்பு.

இதன்பொருள்
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்= கவர்த்த மனத்தினையுடைய மகளிரும், கள்ளும், சூதும் என இம்மூன்றும்; திரு நீக்கப்பட்டார் தொடர்பு= திருமகளான் துறக்கப்பட்டார்க்கு நட்பு.
உரை விளக்கம்
'இருமனம்' ஒருவனோடு புணர்தலும், புணராமையும் ஒருகாலத்தேயுடைய மனம். 'கவறு' ஆகுபெயர். ஒத்தகுற்றத்தவாகலின், கள்ளும் சூதும் உடன்கூறப்பட்டன. வடநூலாரும் இக்கருத்தான் விதனமென உடன்கூறினார். வருகின்ற அதிகார முறைமையும் இதனான் அறிக. திணை விராய் எண்ணியவழிப் பன்மைபற்றி முடிபுகோடலின், ஈண்டு அஃறிணையாற் கொண்டது. திருநீக்கப்பட்டமை இக்குறிகளான் அறியப்படும் என்பதாம்.
இவை நான்குபாட்டானும் சேர்வார் இழிந்தோர் என்பது கூறப்பட்டது.