திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/30.வாய்மை

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


துறவறவியல் தொகு

அதிகாரம் 30.வாய்மை தொகு

பரிமேலழகர் உரை தொகு

அதிகார முன்னுரை
அஃதாவது, மெய்யினது தன்மை. பெரும்பான்மையும் காமமும் பொருளும்பற்றி நிகழ்வதாய பொய்ம்மையை விலக்கலின், இது கூடாவொழுக்கம், கள்ளாமைகளின்பின் வைக்கப்பட்டது.

குறள்: 291 (வாய்மையெனப்படுவது) தொகு

வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல் (01)
வாய்மை எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும்
தீமை இலாத சொலல்.
இதன்பொருள்
வாய்மை எனப்படுவது யாது எனின்= மெய்ம்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதுயாதென்று வினவின்; தீமை யாது ஒன்றும் இலாத சொலல்= அது பிறிதோர் உயிர்க்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்களைச் சொல்லுதல்.
உரைவிளக்கம்
தீமை யாதொன்றும் இலாதவென இயையும். எனப்படுவதென்பது, ஊரெனப்படுவது உறையூர்" எ்றாற் போல நின்றது. இதனான் நிகழ்ந்தது கூறல் என்பது நீக்கப்பட்டது. அதுதானும், தீங்கு பயவாதாயின் மெய்ம்மையாம்; பயப்பிப்பிற் பொய்ம்மையாம் என்பது கருத்து.

குறள்: 292 (பொய்ம்மையும்) தொகு

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின் (02)
பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
இதன்பொருள்
புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்= பிறர்க்கு
குற்றந் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்; பொய்ம்மையும் வாய்மை இடத்த= 

பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின்பாலவாம்.

உரைவிளக்கம்
'குற்றம் தீர்ந்த நன்மை' அறம்; அதனைப்பயத்தலாவது, கேடாதல் சாக்காடாதல் எய்த நின்றதோர் உயி்ர் அச்சொற்களின் பொய்ம்மையானே அதனின் நீங்கி இன்புறுதல். நிகழாதது கூறலும், நன்மை பயவாதாயிற் பொய்ம்மையாம்; பயப்பின் மெய்ம்மையாம் என்பது கருத்து.
இவை இரண்டு பாட்டானும் தீங்குபயவாத நிகழ்ந்தது கூறலும், நன்மைபயக்கும் நிகழாதது கூறலும் மெய்ம்மை எனவும், நன்மை பயவாத நிகழாததுகூறலும், தீங்கு பயக்கும் நிகழ்ந்ததுகூறலும் பொய்ம்மை எனவும் அவற்றது இலக்கணம் கூறப்பட்டது.

குறள்: 293 (தன்னெஞ்சறிவது) தொகு

தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
றன்னெஞ்சே தன்னைச் சுடும் (03)
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும்.
இதன்பொருள்
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க= ஒருவன் தன் நெஞ்சு அறிவது ஒன்றனைப் பிறர் அறிந்திலர் என்று பொய்யாது ஒழிக; பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும்= பொய்த்தான் ஆயின், அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்தின் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும்.
உரைவிளக்கம்
நெஞ்சு கரியாதல்,
"கண்டவரில்லென வுலகத்துள் உணராதார்
தங்காது தகைவி்னறித் தாஞ்செய்யும் வினைகளுள்
நெஞ்சத்திற் குறுகிய கரியில்லை யாகலின்"1 என்பதானானும் அறிக.
பொய் மறையாமையின், அது கூறலாகாது என்பது இதனாற் பெறப்பட்டது.
1.கலித்தொகை, நெய்தல்-8.

குறள்: 294 (உள்ளத்தாற்) தொகு

உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தா
ருள்ளத்து ளெல்லா முளன் (04)
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
இதன்பொருள்
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்= ஒருவன் தன் உள்ளத்திற்கு ஏற்பப் பொய்கூறாது ஒழுகுவான் ஆயின்; உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்= அவன் உயர்ந்தோர் உள்ளத்தி்ன்கண் எல்லாம் உளனாம்.
உரைவிளக்கம்
உள்ளத்தால் என்பது வேற்றுமை மயக்கம். 'பொய் கூறாது ஒழுகுதலாவது, மெய்கூறி ஒழுகுதல். அவனது அறத்தினது அருமை நோக்கி உயர்ந்தோர் எப்பொழுதும் அவனையே நினைப்பர் என்பதாம்.
இதனான் இம்மைப்பயன் கூறப்பட்டது.

குறள்: 295 (மனத்தொடு) தொகு

மனத்தொடு வாய்மை மொழியிற் றவத்தொடு
தானஞ் செய்வாரிற் றலை (05)
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை.
இதன்பொருள்
மனத்தொடு வாய்மை மொழியின்= ஒருவன் தன் மனத்தொடு பொருந்த வாய்மையைச் சொல்வானாயின்; தவத்தொடு தானம் செய்வாரின் தலை= அவன், தவமும் தானமும் ஒருங்குசெய்வாரினும் சிறப்புடையன்.
உரைவிளக்கம்
'மனத்தொடு பொருந்துதல்' மனத்திற்கு ஏறுதல். புறமாகிய மெய்யாற் செய்யும் அவற்றினும் அகமாகிய மன மொழிகளாற் செய்வது பயனுடைத்து என்பதாம்.

குறள்: 296 (பொய்யாமை) தொகு

பொய்யாமை யன்ன புகழில்லை யெய்யாமை
யெல்லா வறமுந் தரும். (06)
பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.
இதன்பொருள்
பொய்யாமை அன்ன புகழ் இல்லை= ஒருவனுக்கு இம்மைக்குப் பொய்யாமை ஒத்த புகழ்க்காரணமில்லை; எய்யாமை எல்லா அறமும் தரும்= மறுமைக்கு மெய்வருந்தாமல் அவனுக்கு எல்லா அறங்களையும் தானே கொடுக்கும்.
உரைவிளக்கம்
'புகழ்'- ஈண்டு ஆகுபெயர். இல்லறத்திற்குப் பொருள் கூட்டல் முதலியவற்றாலும், துறவறத்திற்கு உண்ணாமை முதலியவற்றாலும், வருந்தல் வேண்டுமன்றே, அவ்வருத்தங்கள் புகுதாமல் அவ்விருவகைப்பயனையும் தானே தரும் என்பார், 'எயயாமை எல்லாவறமுந் தரும்' என்றார்.

குறள்: 297 (பொய்யாமைபொய்) தொகு

பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று (07)
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற
செய்யாமை செய்யாமை நன்று.
இதன்பொருள்
பொய்யாமை பொய்யாமை ஆற்றின்= ஒருவன் பொய்யாமையே பொய்யாமையே செய்யவல்லவனாயின்;
பிற அறம் செய்யாமை செய்யாமை நன்று= அவன் பிற அறங்களைச்செய்யாமையே செய்யாமையே நன்று.
உரைவிளக்கம்
அடுக்கு இரண்டனுள், முதலது இடைவிடாமை மேற்று; ஏனையது துணிவின் மேற்று. பல அறங்களையும் மேற்கொண்டு செய்தற்கு அருமையாற் சில தவறிற் குற்றப்படுதலின், அவை எல்லாவற்றின் பயனையுந் தானே தரவற்றாய இதனையே மேற்கொண்டு தவறாமற் செய்தல் நன்று என்பார், 'செயயாமை செய்யாமை நன்'றென்றார். இதனை, இவ்வாறுஅன்றிப் பொய்யாமையைப் பொய்யாமற் செய்யிற் பிற அறம் செய்கை நன்று எனப் பொழிப்பாககிப் பொய்கூறிற் பிறஅறஞ் செய்கை நன்றுஆகாது என்பது, அதனால் போந்த பொருளாக்கி உரைப்பாரும் உளர்2.
பிறவறங்கள் எல்லாந் தரும் பயனைத் தானே தரும் ஆற்றல் உடைத்து என மறுமைப்பயனது மிகுதி இவை மூன்றுபாட்டானும் கூறப்பட்டது.
2.மணக்குடவர்.

குறள்: 298 (புறந்தூய்மை) தொகு

புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும் (8)
புறம் தூய்மை நீரான் அமையும் அகம் தூய்மை
வாய்மையான் காணப் படும்.
இதன்பொருள்
புறம் தூய்மை நீரான் அமையும்= ஒருவனுக்கு உடம்பு தூய்தாந்தன்மை நீரானே உண்டாம்; அகம் தூய்மை வாய்மையான் காண்ப் படும்= அதுபோல, மனம் தூய்தாம் தன்மை வாய்மையான் உண்டாம்.
உரைவிளக்கம்
காணப்படுவது உள்ளதாகலின் உண்டாம் என்று உரைக்கப்பட்டது. உடம்பு தூய்தாதல் வாலாமை நீங்குதல். மனம் தூய்தாதல் மெய்யுணர்தல். புறந்தூய்மைக்கு நீர்அல்லது காரணம் இல்லை என்றவாறாயிற்று.
இதனானே துறந்தார்க்கு இரண்டு தூய்மையும் வேண்டும் என்பது பெற்றாம்.

குறள்: 299 (எல்லாவிளக்கும்) தொகு

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு (9)
எல்லா விளக்கும் விளக்கு அல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
இதன்பொருள்
எல்லா விளக்கும் விளக்கு அல்ல= புறத்திருள் கடியும் உலகத்தார் விளக்குகளெல்லாம் விளக்கு ஆகா; சான்றோர்க்கு விளக்கு பொய்யா விளக்கே= துறவான் அமைந்தார்க்கு விளக்காவது மனத்து இருள்கடியும் பொய்யாமையாகிய விளக்கே.
உரைவிளக்கம்
உலகத்தார் விளக்காவன: ஞாயிறு, திங்கள், தீ என்பன. இவற்றிற்குப் போகாத இருள் போகலின், 'பொய்யா விளக்கே விளக்கு' என்றார். அவ்விருளாவது அறியாமை. பொய்யாத விளக்கு என்பது குறைந்து நின்றது. பொய் கூறமையாகிய விளக்கு என்றவாறு. இனி, இதற்குக் கல்வி முதலியவற்றான் வரும் விளக்கம் எல்லாம் விளக்கம் அல்ல; அமைந்தார்க்கு விளக்கமாவது, பொய்யாமையான் வரும் விளக்கமே என்று உரைப்பாரும் உளர்3.
3.மணக்குடவர்

குறள்: 300 (யாமெய்யாக்) தொகு

யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும்
வாய்மையி னல்ல பிற (10)
யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும்
வாய்மையின் நல்ல பிற.
இதன்பொருள்
யாம் மெய்யாக் கண்டவற்றுள்= யாம் மெய்ந்நூல்களாகக் கண்டநூல்களுள்; எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற இல்லை= யாதொரு தன்மையானும் வாய்மையின் மிக்கனவாகச் சொல்லப்பட்ட பிற அறங்கள் இல்லை.
உரைவிளக்கம்
மெய்யுணர்த்துவனவற்றை 'மெய்' என்றார். அவையாவன: தங்கண் மயக்கம் இன்மையின், பொருள்களை உள்ளவாறு உணர வல்லராய்க் காம வெகுளிகளின்மையின், அவற்றை உணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர், அருளான் உலகத்தார் உறுதி எய்துதற் பொருட்டுக் கூறிய ஆகமங்கள். அவை எல்லாவற்றினும் இஃது ஒப்ப முடிந்தது என்பதாம்.
இவை மூன்று பாட்டானும், இவ்வறத்தினது தலைமை கூறப்பட்டது.