திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/113.காதற்சிறப்புரைத்தல்

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் காமத்துப்பால்- களவியல் தொகு

பரிமேலழகர் உரை தொகு

அதிகாரம் 113.காதல் சிறப்பு உரைத்தல் தொகு

அதிகார முன்னுரை
அஃதாவது. தலைமகன் தன் காதன் மிகுதி கூறலும், தலைமகள் தன் காதன் மிகுதி கூறலுமாம். இது புணர்ச்சியும் நலனும் பற்றி நிகழ்வதாகலின், புணர்ச்சி மகிழ்தல், நலம் புனைந்துரைத்தல்களின் பின் வைக்கப்பட்டது.

குறள் 1121 (பாலொடு ) தொகு

(இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் தலைமகன் தன்னயப்பு உணர்த்தியது.)

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி ( ) பாலொடு தேன் கலந்து அற்றே பணி மொழி

வாலெயி றூறிய நீர். (01) வால் எயிறு ஊறிய நீர்.

[தொடரமைப்பு:
பணிமொழி வாலெயிறு ஊறிய நீர், பாலொடு தேன்கலந்து அற்றே.]

இதன்பொருள்
பணிமொழி வால் எயிறு ஊறிய நீர்= இம்மெல்லிய மொழியினை உடையாளது வாலிய எயிறு ஊறிய நீர்;
பாலொடு தேன் கலந்தற்றே= பாலுடனே தேனைக் கலந்த கலவை போலும்.
உரைவிளக்கம்
கலந்ததற்று என்பது விகாரமாயிற்று. கலக்கப்பட்டது என்றவாறு. 'பாலொடு தேன்' என்றவதனால், அதன்சுவைபோலும் சுவையினை உடைத்து என்பதாயிற்று. 'எயிறூறிய' என இடத்து நிகழ்பொருளின்தொழில் இடத்தின்மேல் நின்றது.. வேறு வேறு அறியப்பட்ட சுவையாய பாலும் தேனும் கலந்துழி, அக்கலவை இன்னது என்று அறியலாகாத இன்சுவைத்தாம் ஆகலின், அது பொருளாகிய நீர்க்கும் எய்துவிக்க.

குறள் 1122 (உடம்பொடு ) தொகு

(பிரிவச்சம் கூறியது)

உடம்பொ டுயிரிடை யென்னமற் றன்ன ( ) உடம்பொடு உயிரிடை என்ன மற்று அன்ன

மடந்தையொ டெம்மிடை நட்பு. (02) மடந்தையொடு எம் இடை நட்பு.

[தொடரமைப்பு:
உடம்பொடு உயிரிடை என்ன அன்ன, மடந்தையொடு எம்மிடை நட்பு.]

இதன்பொருள்
உடம்பொடு உயிரிடை என்ன அன்ன= உடம்பொடு உயிரிடை உளவாய நட்புக்கள் எத்தன்மைய அத்தன்மைய;
மடந்தையொடு எம்மிடை நட்பு= இம்மடந்தையொடு எம்மிடை உளவாய நட்புக்கள்.
உரை விளக்கம்
'என்ன'வெனப் பன்மையான் கூறியது, இரண்டும் தொன்றுதொட்டு வேற்றுமையின்றிக் கலந்துவருதல், இன்பத்துன்பங்கள் ஒக்க அனுபவித்தல், இன்றியமையாமை என்ற இவற்றை நோக்கி. தெய்வப்புணர்ச்சியாகலான் அதுபொழுது உணர்ச்சி இலள்ஆகியாள், பின்னுடையள் ஆமன்றே! ஆயவழி, இவன்யாவன்கொல் எனவும், என்கண் அன்புடையான்கொல் எனவும், இன்னும் இவனைத் தலைப்பெய்தல் கூடுங்கொல் எனவும், அவள் மனத்தின்கண் நிகழும், அந்நிகழ்வனவற்றைக் குறிப்பான் அறிந்து அவைதீரக் கூறியவாறு. என்னை என்று பாடம் ஓதுவாரும் உளர்.

குறள் 1123 (கருமணியிற் ) தொகு

(இடந்தலைப்பாட்டின்கண் தலைமகள் நீக்கத்துச் சொல்லியது.)

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழுந் ( ) கரு மணியின் பாவாய் நீ போதாய் யாம்

திருநுதற் கி்ல்லை யிடம். (03) வீழும் திரு நுதற்கு இல்லை இடம்.

[தொடரமைப்பு:
கருமணியிற் பாவாய் நீ போதாய், யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை.]

இதன்பொருள்
கருமணியிற் பாவாய் நீபோதாய்= என்கண்ணின் கருமணியின்கண் உறையும் பாவாய், நீ அங்குநின்றும் போதருவாயாக;
யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை= போதராது இருத்தியாயின், எம்மால் விரும்பப்பட்ட திருநுதலை உடையாட்கு இருக்க இடம் இல்லையாம்.
உரை விளக்கம்
யான் காணாது அமையாமையின், இவள் புறத்துப் போகற்பாலள்அன்றி என்கண்ணுள் இருக்கற்பாலள், இருக்குங்கால் நின்னோடு ஒருங்கு இருக்க இடம் போதாமையின், நின்னினும் சிறந்த இவட்கு அவ்விடத்தைக் கொடுத்து நீபோதுவாயாக என்பதாம்.

குறள் 1124 (வாழ்தலுயிர்க் ) தொகு

(பகற்குறிக்கண் புணர்ந்து நீங்குவான் சொல்லியது)

வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாத ( ) வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆயிழை சாதல்

லதற்கன்ன ணீங்கு மிடத்து. (04) அதற்கு அன்னள் நீங்கும் இடத்து.

[தொடரமைப்பு:
ஆயிழை உயிர்க்கு வாழ்தல் அன்னள், நீங்கும் இடத்துச் அதற்குச் சாதல் அன்னள்]

இதன்பொருள்
ஆயிழை உயிர்க்கு வாழ்தல் அன்னள்= தெரிந்த இழையினை உடையாள் எனக்குப் புணருமிடத்து, உயிர்க்கு உடம்போடு கூடி வாழ்தல் போலும்;
நீங்கும் இடத்து அதற்குச் சாதல் அன்னள்= பிரியுமிடத்து அதற்கு அதனின் நீங்கிப்போதல்போலும்.
உரை விளக்கம்
எனக்கு என்பதும், புணரும் இடத்து என்பதும் அவாய்நிலையான் வந்தன. வாழுங்காலத்து வேற்றுமையின்றி வழிநிற்றலானும், சாங்காலத்து வருத்தம் செய்தலானும், அவற்றை அவள் புணர்வு பிரிவுகட்கு உவமையாக்கினான்.

குறள் 1125 (உள்ளுவன் ) தொகு

(ஒருவழித்தணந்து வந்த தலைமகன், நீயிர் தணந்தஞான்று எம்மை உள்ளியும் அறிதிரோ என்ற தோழிக்குச் சொல்லியது)

உள்ளுவன்மன் யான் மறப்பின் மறப்பறியே () உள்ளுவன் மன் யான் மறப்பின் மறப்பு அறியேன்

னொள்ளமர்க் கண்ணாள் குணம். (05) ஒள் அமர்க் கண்ணாள் குணம்.

[தொடரமைப்பு:
ஒள்ளமர்க் கண்ணாள் குணம் யான் மறப்பின் உள்ளுவன், மறப்பு அறியேன்.]

இதன்பொருள்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம் யான் மறப்பின் உ்ளளுவன்= ஒள்ளியவாய் அமரைச்செய்யும் கண்ணினையுடையாள் குணங்களை யான் மறந்தேன் ஆயின், நினைப்பேன்;
மறப்பு அறியேன்= ஒருபொழுதும் மறத்தலை அறியேன், ஆகலான் நினைத்தலையும் அறியேன்.
உரை விளக்கம்
'மன்' ஒழியிசைக்கண் வந்தது. குணங்கள்- நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலாயின. இத்துணையும் தலைமகன் கூற்று, மேல் தலைமகள் கூற்று.

குறள் 1126 (கண்ணுள்ளிற் ) தொகு

(ஒருவழித் தணப்பின்கண் தலைமகனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சி அவள் கேட்பத் தன்னுள்ளே சொல்லியது)

கண்ணுள்ளிற் போகா ரிமைப்பிற் பருவரார் ( ) கண் உள்ளில் போகார் இமைப்பின் பருவரார்

நுண்ணியரெங் காத லவர். (06) நுண்ணியர் எம் காதலவர்.

[தொடரமைப்பு:
எம் காதலர் கண்ணுள்ளில் போகார், இமைப்பின் பருவரார், நுண்ணியர்.]

இதன்பொருள்
எம் காதலர் கண்ணுள்ளில் போகார்= தாம் காணாமைபற்றிச்சேய்மைக்கண் போயினார் என்றுகருதுவார் கருதுக, எ்ம்முடைய காதலர் எம் கண்ணகத்துநின்றும் போகார்;
இமைப்பின் பருவரார்= யாம் அறியாது இமைத்தோமாயின், அதனால் வருந்துவதும் செய்யார்;
நுண்ணியர்= ஆகலான் காணப்படா நுண்ணியர்.
உரை விளக்கம்
இடைவிடாத நினைவின் முதிர்ச்சியான் எப்பொழுதும் முன்னே தோன்றலின், 'கண்ணுள்ளிற் போகார்' என்றும், இமைத்துழியும் அது நிற்றலான், 'இமைப்பிற் பருவரார்' என்றும் கூறினாள்.

குறள் 1127 (கண்ணுள்ளார் ) தொகு

(இதுவுமது)

கண்ணுள்ளார் காதலவராகக் கண்ணு ( ) கண் உள்ளார் காதலவர் ஆகக் கண்ணும்

மெழுதேங் கரப்பாக் கறிந்து. (07) எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

[தொடரமைப்பு:
காதலவர் கண்ணுள்ளாராகக் கண்ணும் எழுதேம், கரப்பாக்கு அறிந்து.]

இதன்பொருள்
காதலவர் கண் உள்ளாராகக் கண்ணும் எழுதேம்= காதலர் எப்பொழுதும் எம் கண்ணின் உள்ளார் ஆகலான், கண்ணின் அஞ்சனத்தால் எழுதுவதும் செய்யேம்;
கரப்பாக்கு அறிந்து= அத்துணைக்காலமும் அவர் மறைதலை அறிந்து.
உரை விளக்கம்
இழிவு சிறப்பும்மை மாற்றப்பட்டது. 'கரப்பாக்கு' என்பது வினைப்பெயர். வருகின்ற வேபாக்கு என்பதும் அது. யான் இடையீடு இன்றிக் காண்கின்றவரைப் பிரிந்தார் என்பது கருதுமாறு என்னை என்பது குறிப்பெச்சம்.

குறள் 1128 (நெஞ்சத்தார் ) தொகு

(இதுவுமது)

நெஞ்சத்தார் காதலவராக வெய்துண்ட ( ) நெஞ்சத்தார் காதலவர் ஆக வெய்து உண்டல்

லஞ்சுதும் வேபாக் கறிந்து. (08) அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.

தொடரமைப்பு:
காதலவர் நெஞ்சத்தாராக வெய்து உண்டல் அஞ்சுதும், வேபாக்கு அறிந்து.

இதன்பொருள்
காதலவர் நெஞ்சத்தாராக வெய்து உண்டல் அஞ்சுதும்= காதலர் எம் நெஞ்சினுள்ளார் ஆகலான் உண்ணுங்கால் வெய்தாக உண்டலை அஞ்சாநின்றேம்;
வேபாக்கு அறிந்து= அவர் அதனான் வெய்துறலை அறிந்து.
உரை விளக்கம்
'எப்பொழுதும் எம் நெஞ்சின்கண் இருக்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறென்னை'? என்பது குறிப்பெச்சம்.

குறள் 1129 (இமைப்பிற் ) தொகு

(வரவிடை வைத்துப் பிரிவின்கண் தலைமகள் ஆற்றுதல் பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது.)

இமைப்பிற் கரப்பாக் கறிவ லனைத்திற்கே ( ) இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே

யேதில ரென்னுமிவ் வூர். (09) ஏதிலர் என்னும் இவ் ஊர்.

தொடரமைப்பு:
இமைப்பிற் கரப்பாக்கு அறிவல், அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ்வூர்.

இதன்பொருள்
இமைப்பிற் கரப்பார்க்கு அறிவல்= என்கண் இமைக்குமாயின் உள்ளிருக்கின்ற காதலர் மறைதலை அறிந்து இமையேன்;
அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ்வூர்= அவ்வளவிற்கு அவரைத் துயிலா நோய்செய்தார் அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர்.
உரை விளக்கம்
தன் கருத்து அறியாமை பற்றிப் புலந்து சொல்லுகின்றாள் ஆகலின், தோழியை வேறுபடுத்து, 'இவ்வூர்' என்றாள். 'ஒரு பொழுதும்' பிரியாதவரைப் பிரிந்தார் என்று பழிக்கற்பாலையல்லை', என்பதாம்.

குறள் 1130 (உவந்துறைவர் ) தொகு

(இதுவுமது)

உவந்துறைவ ருள்ளத்து ளென்று மிகந்துறைவ () உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் இகந்து உறைவர்

ரேதில ரென்னுமிவ் வூர். (10) ஏதிலர் என்னும் இவ் ஊர்.

தொடரமைப்பு:
என்றும் உள்ளத்துள் உவந்து உறைவர், இகந்து உறைவர் ஏதிலர் என்னும் இவ் ஊர்.

இதன்பொருள்
என்றும் உள்ளத்துள் உவந்து உறைவர்= காதலர் எஞ்ஞான்றும் என் உள்ளத்துள்ளே உவந்து உறையா நிற்பர்;
இகழ்ந்து உறைவர் ஏதிலர் என்னும் இவ்வூர்= அதனை அறியாது அவரைப் பிரிந்து உறையா நின்றார், அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர்.
உரை விளக்கம்
'உவந்து உறைவர்' என்றதனால் அன்புடைமை கூறினாள். 'பிரியாமையும் அன்பும் உடையாரை இலர் எனப் பழிக்கற்பாலையல்லை' என்பதாம்.