திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/112.நலம்புனைந்துரைத்தல்

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் காமத்துப்பால்- களவியல் தொகு

பரிமேலழகர் உரை தொகு

அதிகாரம் 112.நலம் புனைந்து உரைத்தல் தொகு

அதிகார முன்னுரை
அஃதாவது, தலைமகன் தலைமகள் நலத்தைப் புனைந்து சொல்லியது. இது புணர்ச்சி மகிழ்ந்துழி நிகழ்வதாகலின், புணர்ச்சி மகிழ்தலின் பின் வைக்கப்பட்டது.

குறள் 1111 (நன்னீரை ) தொகு

[இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது]

நன்னீரை வாழி யனிச்சமே நின்னினு ( ) நல் நீரை வாழி அனிச்சமே நின்னினும்

மென்னீரள் யாம்வீழ் பவள். (01) மெல் நீரள் யாம் வீழ்பவள்.

தொடரமைப்பு:
அனிச்சமே வாழி நன்னீரை, யாம் வீழ்பவள் நின்னினும் மென்னீரள்

இதன்பொருள்
அனிச்சமே வாழி நன்னீரை= அனிச்சப்பூவே, வாழ்வாயாக! மென்மையால் நீ எல்லாப் பூவினு நல்ல இயற்கையை உடையை; யாம் வீழ்பவள் நின்னினும் மென்னீரள்= அங்ஙனமாயினும், எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினு மெல்லிய இயற்கையை உடையள்.
உரைவிளக்கம்
அனிச்சம் ஆகுபெயர். 'வாழி' என்பது, உடன்பாட்டுக் குறிப்பு. இனி, யானே மெல்லியன் என்னும் தருக்கினை ஒழிவாயாக என்பதாம். அதுபொழுது உற்றறி்ந்தான் ஆகலின், ஊற்றின் இனிமையையே பாராட்டினான். இன்னீரள் என்று பாடம் ஓதுவாரும் உளர்.

குறள் 1112 (மலர்காணின் ) தொகு

[இடந்தலைப்பாட்டின்கண் சொல்லியது]

மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண் ( ) மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண்

பலர்காணும் பூவொக்கு மென்று. (02) பலர் காணும் பூ ஒக்கும் என்று.

தொடரமைப்பு:
நெஞ்சே, இவள் கண் பலர்காணும் பூ ஒக்கும் என்று, மையாத்தி.

இதன்பொருள்
நெஞ்சே- நெஞ்சே!
இவள் கண் பலர் காணும் பூ ஒக்கும் என்று= யானே காணப்பெற்ற இவள் கண்களைப் பலரானும் காணப்படும் பூக்கள் ஒக்கும் என்று கருதி;
மலர்காணின் மையாத்தி= தாமரை, குவளை, நீலம் முதலிய மலர்களைக் கண்டால் மயங்காநின்றாய், நின் அறிவிருந்தவாறு என்!
உரை விளக்கம்
மையாத்தல் ஈண்டு ஒவ்வாதவற்றை ஒக்கும்எனக் கோடல். இறுமாத்தல், செம்மாத்தல் என்பனபோல ஒருசொல். இயற்கைப்புணர்ச்சி நீக்கம் முதலாகத் தலைமகள் கண்களைக் காணப்பெறாமையின், அவற்றோடு ஒருபுடை ஒக்கும் மலர்களைக் கண்டுழி எல்லாம் அவற்றின்கண் காதல்செய்து போந்தான், இதுபொழுது அக்கண்களின் நலமுழுதுந் தானே தமியாளை இடத்து எதிர்பபட்டு அனுபவித்தான் ஆகலின், அம்மலர்கள் ஒவ்வாமை கண்டு ஒப்புமை கருதிய நெஞ்சை இகழ்ந்து கூறியவாறு.

குறள் 1113 (முறிமேனி ) தொகு

[கூட்டுதலுற்ற பாங்கற்குத் தலைமகன் தலைமகளது இயல்பு கூறியது]

முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம் ( ) முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம்

வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. (03) வேய்த் தோள் அவட்கு.

தொடரமைப்பு:
வேய்த்தோள்அவட்கு, மேனி முறி, முறுவல் முத்தம், நாற்றம் வெறி, உண்கண் வேல்.

இதன்பொருள்
வேய்த்தோளவட்கு= வேய்போலும் தோளினை உடையவட்கு;
மேனிமுறி= நிறம் தளிர்நிறமாய் இருக்கும்;
முறுவல் முத்தம்= பல்லு முத்தமாயிருக்கும்;
நாற்றம் வெறி= இயல்பாய நாற்றம் நறுநாற்றமாயிருக்கும்;
உண்கண் வேல்= உண்கண்கள் வேலாயிருக்கும்.
உரை விளக்கம்
பெயரடையானும் ஓர் இயல்பு கூறப்பட்டது. முறி முறுவல் என்பன ஆகுபெயர். உருவக வகையான் கூறினமையின், புனைந்துரை யாயிற்று. நின்னாற் கருதப்பட்டாளை அறியேன் என்று சேட்படுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியதூஉமாம்.

குறள் 1114 (காணிற்குவளை ) தொகு

[பாங்கற் கூட்டத்துச் சென்று சார்தலுறுவான் சொல்லியது]

காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கு ( ) காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்

மாணிழை கண்ணொவ்வோ மென்று. (04) மாண் இழை கண் ஒவ்வோம் என்று.

தொடரமைப்பு:
குவளை, காணின், மாணிழை கண் ஒவ்வேம் என்று கவிழ்ந்து நிலன் நோக்கும்.

இதன்பொருள்
குவளை= குவளைப் பூக்கள் தாமும்;
காணின்= காண்டல் தொழிலை உடையவாயின்;
மாண் இழை கண் ஒவ்வேம் என்று கவிழ்ந்து நிலன் நோக்கும்= மாண்ட கண்களை உடையாள் கண்களை யாம் ஒவ்வேம் என்று கருதி, அந்நாணினால் இறைஞ்சி நிலத்தினை நோக்கும்.
உரை விளக்கம்
பண்பானே அன்றித் தொழிலானும் ஒவ்வாதென்பான் 'காணின்' என்றும், கண்டால் அவ்வொவ்வாமையால் நாணுடைத்தாம் என்பது தோன்றக் 'கவிழ்ந்து' என்றும் கூறினான். காட்சியும் நாணும் இன்மையிற் செம்மாந்து வானை நோக்கின என்பதாம்.

குறள் 1115 (அனிச்சப்பூ ) தொகு

[பகற்குறிக்கண் பூவணி கண்டு சொல்லியது]

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு () அனிச்சப் பூக் கால் களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு

நல்ல படாஅ பறை. (05) நல்ல படாஅ பறை.

தொடரமைப்பு:
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள், நுசுப்பிற்கு நல்ல பறை படாஅ.

இதன்பொருள்
அனிச்சப்பூக் கால் களையாள்= இவள் தன்மென்மை கருதாது அனிச்சப்பூவை முகிழ் களையாது சூடினாள்;
நுசுப்பிற்கு நல்ல பறை படாஅ = இனி இவள் இடைக்கு நல்ல பறைகள் ஒலியா.
உரை விளக்கம்
அம்முகிழ்ப் பாரம் பொறாமையின், இடை முரியும்; முரிந்தால் அதற்குச் செத்தார்க்குரிய நெய்தற்பறையே படுவது என்பதாம். மக்கட்குரிய சாக்காடும், பறைபடுதலும் இலக்கணைக்குறிப்பால் நுசுப்பின்மேல் ஏற்றப்பட்டன.

குறள் 1116 (மதியு ) தொகு

[இரவுக்குறிக்கண் மதிகண்டு சொல்லியது.]

மதியு மடந்தை முகனு மறியா ( ) மதியும் மடந்தை முகனும் அறியா

பதியிற் கலங்கிய மீன். (06) பதியின் கலங்கிய மீன்.

தொடரமைப்பு:
மீன், மதியும் மடந்தை முகனும் அறியா, பதியின் கலங்கிய.

இதன்பொருள்
மீன்= வானத்து மீன்கள்;
மதியும் மடந்தை முகனும் அறியா= வேறுபாடு பெரிதாகவும், தம் மதியினையும் எம் மடந்தை முகத்தினையும் இதுமதி இது முகம் என்று அறியமாட்டாது;
பதியின் கலங்கிய= தந்நிலையினின்றும் கலங்கித் திரியாநின்றன.
உரை விளக்கம்
ஓரிடத்து நில்லாது எப்பொழுதும் இயங்குதல்பற்றிப் 'பதியிற் கலங்கிய' என்றான். வேறுபாடு வருகின்ற பாட்டான் பெறப்படும். இனி இரண்டனையும் பதியிற் கலங்காத மீன்கள் அறியும்அல்லது, கலங்கின மீன்கள் அறியா என்று உரைப்பினும் அமையும்.

குறள் 1117 (அறுவாய் ) தொகு

[இதுவும் அது]

அறுவாய் நிறைந்த வவிர்மதிக்குப் போல ( ) அறு வாய் நிறைந்த அவிர் மதிக்குப் போல

மறுவுண்டோ மாதர் முகத்து. (07) மறு உண்டோ மாதர் முகத்து.

தொடரமைப்பு:
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல, மாதர் முகத்து மறு உண்டோ?

இதன்பொருள்
(அம்மீன்கள் அங்ஙனம் கலங்குதற்குக் காரணம் யாது?) அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல= முன் குறைந்த இடம் வந்து நிரம்பியே விளங்கும் மதிக்கண்போல;
மாதர் முகத்து மறு உண்டோ = இம்மாதர் முகத்து மறு உண்டோ?
உரை விளக்கம்
இடம்= கலை. 'மதிக்கு' என்பது வேற்றுமைமயக்கம். தேய்தலும் வளர்தலும் மறுவுடைமையும் இன்மைபற்றி வேறுபாடு அறியலாயிருக்க அறிந்தில என இகழ்ந்து கூறியவாறு.

குறள் 1118 (மாதர் ) தொகு

[இதுவுமது]

மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற் ( ) மாதர் முகம் போல் ஒளி விட வல்லையேல்

காதலை வாழி மதி. (08) காதலை வாழி மதி.

தொடரமைப்பு:
மதி வாழி, மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல் காதலை.

இதன்பொருள்
மதி வாழி= மதியே வாழ்வாயாக!
மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல் காதலை= இம்மாதர் முகம் போல யான் மகிழும்வகை ஒளிவீச வல்லையாயின், நீயும் என் காதலை உடையையாதி.
உரை விளக்கம்
மறுவுடைமையின் அது மாட்டாய்; மாட்டாமையின் என்னால் காதலிக்கவும்படாய் என்பதாம். 'வாழி' என்பது இகழ்ச்சிக் குறிப்பு.

குறள் 1119 (மலரன்ன ) தொகு

[இதுவுமது]

மலரன்ன கண்ணாண் முகமொத்தி யாயிற் ( ) மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின்

பலர்காணத் தோன்றன் மதி. (09) பலர் காணத் தோன்றல் மதி.

தொடரமைப்பு:
மதி, மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின், பலர் காணத் தோன்றல்.

இதன்பொருள்
மதி= மதியே!
மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின்= இம்மலர் போலும் கண்ணினை உடையாள் முகத்தை நீ ஒக்க வேண்டுதியாயின்;
பலர் காணத் தோன்றல்= இதுபோல யான் காணத்தோன்று, பலர்காணத் தோன்றாது ஒழி.
உரை விளக்கம்
தானே முகத்தின் நலம் முழுதும் கண்டு அனுபவித்தான் ஆகலின், ஈண்டுப் பலர்காணத் தோன்றலை இழித்துக் கூறினான்.

தோன்றின் நினக்கு அவ்வொப்பு உண்டாகாது என்பதாம்.

குறள் 1120 (அனிச்சமு ) தொகு

[உடன்போக்கு உரைத்த தோழிக்கு அதன் அருமைகூறி மறுத்தது.]

அனிச்சமு மன்னத்தின் றூவியு மாத () அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

ரடிக்கு நெருஞ்சிப் பழம். (10) அடிக்கு நெருஞ்சிப் பழம்.

தொடரமைப்பு:
அனிச்சமும் அன்னத்தின் தூவியும், மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்.

இதன்பொருள்
அனிச்சமும் அன்னத்தின் தூவியும்= உலகத்தாரான் மென்மைக்கு எடுக்கப்பட்ட அனிச்சப்பூவும், அன்னப்புள்ளின் சிறகுமாகிய இரண்டும்;
மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்= மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் செய்யும்.
உரை விளக்கம்
முள் வலிதாதல் உடைமையின் 'பழம்' என்றான். இத்தன்மைத்தாய அடி "பாத்தியன்ன குடுமிக் கூர்ங்கற்"1 களையுடைய வெஞ்சுரத்தை யாங்ஙனம் கடக்கும் என்பது குறிப்பான் பெறப்பட்டது. செம்பொருளே அன்றிக் குறிப்புப்பொருளும் அடிநலன் அழியாமையாகலின், இதுவும் இவ்வதிகாரம் ஆயிற்று.
1.அகநானூறு- களிற்றியானைநிரை,5.