திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/78.படைச்செருக்கு

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


78.படைச்செருக்கு தொகு

திருக்குறள் பொருட்பால்- அங்கவியல் தொகு

பரிமேலழகர் உரை தொகு

அதிகாரம் 78.படைச் செருக்கு தொகு

அதிகார முன்னுரை
அஃதாவது, அப்படையது மறமிகுதி. அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.

குறள் 771 (என்னைமுன் ) தொகு

என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை () என் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் என் ஐ

முன்னின்று கன்னின் றவர். (01) முன் நின்று கல் நின்றவர்.

தொடரமைப்பு: தெவ்விர் என் ஐ முன் நின்று கல் நின்றவர் பலர், என் ஐ முன் நில்லன்மின்!

இதன்பொருள்
தெவ்விர் என் ஐ முன் நின்று கல் நின்றவர் பலர்= பகைவீர்! இன்றினூங்கு என் தலைவன் எதிர் போரேற்று நின்று அவன் வேல்வாய் வீழ்ந்து பின் கல்லின்கண்ணே நின்ற வீரர் பலர்; என் ஐ முன் நில்லன்மின்= நீவிர் அதன்கண் இன்றி நும் உடற்கண் நிற்றல் வேண்டின், என் தலைவன் எதிர் போர் ஏற்று நிற்றலை ஒழிமின்.
உரைவிளக்கம்
என் ஐ எனத் தன்னொடு தொடர்புபடுத்துக் கூறினமையின், அவன் வேல் வாய் வீழ்தல் பெற்றாம். கல்- நடுகல். "நம்பன் சிலைவாய் நடக்குங்கணை மிச்சி லல்லா, லம்பொன் முடிப்பூ ணரசும் மிலை" எனப் பதுமுகன் கூறினாற் போல, ஒரு வீரன் தன் மறம் அரசன் மேல் வைத்துக் கூறியவாறு. இப்பாட்டு நெடுமொழி வஞ்சி.Γ

Ḳ.சீவகசிந்தாமணி- காந்தருவ தத்தையார் இலம்பகம்,317.

Γ.புறப்பொருள் வெண்பாமாலை- வஞ்சி, 12.

குறள் 772(கானமுய ) தொகு

கான முயலெய்த வம்பினில் யானை () கான முயல் எய்த அம்பினில் யானை

பிழைத்தவே லேந்த லினிது. (02) பிழைத்த வேல் ஏந்தல் இனிது.

தொடரமைப்பு: கான முயல் எய்த அம்பினில், யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது.

இதன்பொருள்
கான முயல் எய்த அம்பினில்= கானகத்தின்கண் ஓடும் முயலைப் பிழையாமல் எய்த அம்பை ஏந்தலினும்; யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது= வெள்ளிடை நின்ற யானையை எறிந்து பிழைத்த வேலை ஏந்துதல் நன்று.
உரைவிளக்கம்
'கான முயல்' என்றதனால், வெள்ளிடைநின்ற என்பதும், 'பிழைத்த' என்றதனால் பிழையாமல் என்பதும், முயற்குத்தக 'எய்த'என்றதனான், யானைக்குத்தக எறிதலும் வருவிக்கப்பட்டன. இது மாற்றரசன் படையொடு பொருதான் ஓர் வீரன், அது புறங் கொடுத்ததாக நாணிப் பின் அவன் தன்மேற் செல்லலுற்றானது கூற்று.

குறள் 773 (பேராண்மை ) தொகு

பேராண்மை யென்ப தறுகணொன் றுற்றுக்கா () பேராண்மை என்ப தறுகண் ஒன்று உற்றக்கால்

லூராண்மை மற்றத னெஃகு. (03) ஊராண்மை மற்று அதன் எஃகு.

தொடரமைப்பு: தறுகண் பேராண்மை என்ப, ஒன்று உற்றக்கால் ஊராண்மை அதன் எஃகு (என்ப)

இதன்பொருள்
தறுகண் பேராண்மை என்ப= பகைவர்மேல் கண்ணோடாது செய்யும் மறத்தை நூலோர் மிக்க ஆண்டன்மை என்று சொல்லுவர்; ஒன்று உற்றக்கால் ஊராண்மை அதன் எஃகு (என்ப)= அவர்க்கு ஒரு தாழ்வு வந்ததாயின் கண்ணோடி அது தீர்த்துக் கோடற்பொருட்டு ஊராண்மை செய்தலை நூலோர் அதற்குக் கூர்மை என்று சொல்லுவர்.
உரைவிளக்கம்
'என்ப' என்பது, பின்னும் இயைந்தது. 'ஊராண்மை' உபகாரியாம் தன்மை; அஃதாவது, இலங்கையர் வேந்தன் போரிடைத் தன் தானை முழுதும்படத் தமியனாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி, அயோத்தியர்இறை மேல்செல்லாது "இன்றுபோய் நாளை நின் தானையோடு வா" என விட்டாற் போல்வது.
இவை இரண்டுபாட்டும் தழிஞ்சி.

₢. புறப்பொருள் வெண்பாமாலை-வஞ்சி, 3.

குறள் 774 ( கைவேல்) தொகு

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் () கை வேல் களிற்றொடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும். (04) மெய் வேல் பறியா நகும்.

தொடரமைப்பு: "கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய் வேல் பறியா நகும்.

இதன்பொருள்
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்= தன் கைப்படையாய வேலைத் தன்மேல் வந்த களிற்றோடு போக்கி, வருகின்ற களிற்றுக்கு வேல் நாடித் திரிவான்; மெய் வேல் பறியா நகும்= தன் மார்பின்கண் நின்ற வேலைக் கண்டு பறித்து மகிழும்.
உரைவிளக்கம்
களிற்றோடு போக்கல்: களிற்றினது உயிரைக் கொடுபோமாறு விடுதல். மகிழ்ச்சி, தேடியது எய்தலான். இதனுள் களிற்றையல்லது எறியாது என்பதூஉம், சினமிகுதியான் வேல் இடை போந்தது அறிந்திலன் என்பதூஉம், பின்னும் போர்மேல் விருப்பினன் என்பதூஉம், பெறப்பட்டன. நூழிலாட்டு.

₦.புறப்பொருள் வெண்பாமாலை-தும்பை, 16.

குறள் 775 (விழித்தகண் ) தொகு

விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பி () விழித்த கண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின்

னொட்டன்றோ வன்க ணவர்க்கு. (05) ஒட்டு அன்றோ வன்கண் அவர்க்கு.

தொடரமைப்பு: விழித்தகண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின், வன்கணவர்க்கு ஒட்டுஅன்றோ?

இதன்பொருள்
விழித்தகண்= பகைவரை வெகுண்டு நோக்கிய கண்; வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின்= அவர் வேலைக்கொண்டு எறிய அஃது ஆற்றாது அந்நோக்கை அழித்து இமைக்குமாயின்; வன்கணவர்க்கு ஓட்டு அன்றோ= அது வீரர்க்குப் புறங்கொடுத்தலாம்.
உரைவிளக்கம்
அவ் வெகுளி நோக்க மீட்டலும் போரின்கண் மீட்சி எனக் கருதி அதுவும் செய்யார் என்பதாம்.

குறள் 776(விழுப்புண் ) தொகு

விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள் () விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள்

வைக்குந்தன் னாளை யெடுத்து. (06) வைக்கும் தன் நாளை எடுத்து.

தொடரமைப்பு: தன் நாளை எடுத்து, விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்.

இதன்பொருள்
தன் நாளை எடுத்து= தனக்குச் சென்ற நாள்களை எடுத்து எண்ணி; விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்= அவற்றுள், விழுப்புண் படாத நாள்களை எல்லாம் பயன்படாது கழிந்த நாளுள்ளே வைக்கும் வீரன்.
உரைவிளக்கம்
விழுப்புண் முகத்தினும் மார்பினும் பட்ட புண். போர் பெற்றிருக்கவும், அது பெறாத நாள்களோடும் கூட்டும் என்பதாம்.
இவை மூன்று பாட்டானும் ஊறு அஞ்சாமை கூறப்பட்டது.

குறள் 777 (சுழலுமிசை ) தொகு

சுழலு மிசைவேண்டி வேண்டா வுயிரார் () சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார்

கழல்யாப்புக் காரிகை நீர்த்து. (07) கழல் யாப்புக் காரிகை நீர்த்து.

தொடரமைப்பு: சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார் கழல் யாப்புக் காரிகை நீர்த்து.

இதன்பொருள்
சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார்= துறக்கத்துத் தம்மொடு செல்லாது, வையத்தைச் சூழ்ந்து நிற்கும் புகழைவேண்டி உயிர் வாழ்தலை வேண்டாத வீரர்; கழல் யாப்புக் காரிகை நீர்த்து= கழல் கட்டுதல் அலங்கார நீர்மையை உடைத்து.
உரைவிளக்கம்
வையத்தைச் சூழும் எனவே, அதன் பெருமை பெற்றாம். செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. சூழ்தல் அகத்திடல். துறக்கமும் புகழும் எளிதின் எய்துவர் ஆகலின், ஆபரணமாவது அதுவே என்பதாம்.

குறள் 778 (உறினுயிரஞ்சா ) தொகு

உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன் () உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன்

செறினுஞ் சீர்குன்ற லிலர். (08) செறினும் சீர் குன்றல் இலர்.

தொடரமைப்பு: உறின் உயிர் அஞ்சா மறவர், இறைவன் செறினும் சீ்ர் குன்றல் இலர்.

இதன்பொருள்
உறி்ன் உயிர் அஞ்சா மறவர்= போர் பெறின் தம் உயிர்ப்பொருட்டு அஞ்சாது அதன்மேல் செல்லும் வீரர்; இறைவன் செறினும் சீர்குன்றல் இலர்= தம் இறைவன் அது வேண்டாம் என்று முனியினும், அவ் வீரமிகுதி குன்றார்.
உரைவிளக்கம்
போர் பெற்றறியாமையின், அது பெற்றால் அரசன் தடுப்பினும் நில்லார் என்பதாம். பிறரும், "போரெனிற் புகலும் புனைகழன் மறவர்" என்றும், "புட்பகைக் / கேவான் ஆகலிற் சாவேம் யாமென/ நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப" என்றும் கூறினார்.

¶.புறநானூறு, 31. ₦.புறநானூறு, 68.

குறள் 779(இழைத்ததிக ) தொகு

இழைத்த திகவாமைச் சாவாரை யாரே () இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே

பிழைத்த தொறுக்கிற் பவர். (09) பிழைத்தது ஒறுக்கிற்பவர்.

தொடரமைப்பு: இழைத்தது இகவாமைச் சாவாரை பிழைத்தது ஒறுக்கிற்பவர் யார்ஏ. "

இதன்பொருள்
இழைத்தது இகவாமைச் சாவார்= தாம் கூறின வஞ்சினம் தப்பாமற் பொருட்டுச் சென்று சாவவல்ல வீரரை; பிழைத்தது ஒறுக்கிற்பவர் யாரே= அது தப்பியவாறு சொல்லி எள்ளுதற்கு உரியார் யாவர்.
உரைவிளக்கம்
'இழைத்தல்': இன்னது செய்யேன் ஆயின், இன்னன் ஆகுக எனத் தான்வகுத்தல். சொல்லி என்பது அவாய்நிலையான் வந்தது. வஞ்சின முடிப்பான்புக்கு முன்னே சாவினும் தொலைவன்மையின், அது முடித்தவராவர் எனச் சாதற்சிறப்புக் கூறியவாறு.

குறள் 780 (புரந்தார்கண் ) தொகு

புரந்தார்கண் ணீர்மல்கச் சாகி்ற்பிற் சாக்கா () புரந்தார் கண் நீர் மல்கச் சாகில் பின் சாக்காடு

டிரந்துகோட் தக்க துடைத்து. (10) இரந்து கோள் தக்கது உடைத்து.

தொடரமைப்பு: புரந்தார் கண்ணீர் மல்கச் சாகிற்பின், சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து. "

இதன்பொருள்
புறந்தார் கண்ணீர் மல்கச் சாகிற் பின்= தமக்குச் செய்த நன்றிகளை நினைந்து ஆண்ட அரசர் கண்கள் நீர்மல்கும் வகை போரிடைச் சாவப் பெறின்; சாக்காடு இரந்து கோள் தக்கது உடைத்து= அச் சாக்காடு இரந்தாயினும் கொள்ளும் தகுதியை உடைத்து.
உரைவிளக்கம்
மல்குதலாகிய இடத்து நிகழ் பொருளின் தொழில், இடத்தின்மேல் நின்றது. கிளையழ இல்லிடை நோயால் விளிவார் பழவினைப் பயனே எய்தலின், அடுத்த வினையால் துறக்கம் எய்தும் சாதலை, 'இரந்து கோள் தக்கதுடைத்து' என்றார்.
இவை நான்கு பாட்டானும் உயிர் ஓம்பாமை கூறப்பட்டது.